நடந்து முடிந்த பட்ஜெட்டில் அடுத்த ஆண்டும் நிதிப் பற்றாக்குறை இருக்கும் எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால் சொன்ன அளவிலேயே வைத்திருப்பதே இந்தியாவுக்கு பெருங்கஷ்டமாக இருக்கிறது.
ஒரு பக்கம் செலவை குறைக்க முடியவில்லை. ஆக வருமானத்தை அதிகரிக்கலாம். அதிகரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறது பாஜக அரசு.
2019-20 நிதி ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக 7.61 லட்சம் கோடி ரூபாயை பெறுவோம் என வருவாய் துறைச் செயலர் அஜய் பூஷன் பாண்டே நம்பிக்கை ஊட்டுகிறார்.
தற்போதைய நிலை
2018 - 19 நிதி ஆண்டில் 6.43 லட்சம்கோடி ரூபாய் வரை மட்டுமே ஜிஎஸ்டி வசூலாக இருப்பதை நிதி அமைச்சகமே தன் பட்ஜெட்டில் சொல்லிவிட்டது. இதை 12 மாதங்களுக்குக் கணக்கிட்டால் சுமார் 53,000 கோடி ரூபாய் மட்டுமே வருகிறது.
கணிப்பு
கடந்த நவம்பர் 2017 முதல் ஜனவரி 2018 வரையான கால கட்டத்தில் ஜிஎஸ்டி மூலம் வருவாய் 14 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதன் அடிப்படையில் தான் எங்களால் புதிய நிதி ஆண்டில் 2019 - 20 நிதி ஆண்டில் 7.43 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்ட முடியும் என கணித்திருக்கிறோம். ஆக மாதம் சுமார் 97,000 ரூபாயை ஈட்ட இருக்கிறார்களாம்.
மெல்ல உயர்கிறது
ஜிஎஸ்டி கொண்டு வந்ததற்கான முக்கிய காரணமே வரி விதிகள் மற்றும் வரி செலுத்தும் முறைகளை எளிமைப்படுத்துவது தான். எளிமையான வரி முறைகளால் பிசினஸ் செய்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். எனவே அவரக்ளால் இன்னும் சிறப்பாக பிசினஸில் ஈடுபட முடியும் என்பது தான் கணிப்பு. அது நடந்தும் வருகிறது. அதற்கான பலனாக வருவாயும் அதிகரித்து வருகிறது. அதோடு இந்த ஆண்டில் நிறைய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். எனவே தான் அடுத்த ஆண்டில் நிர்ணயித்திருக்கும் இலக்கை அடைவோம் என உறுதிபடச் சொல்கிறார் அஜய் பூஷன்.
புதிய பிசினஸ்மேன்கள்
ஜிஎஸ்டியைப் பொறுத்தவரை வரி செலுத்துபவரை தொந்தரவு செய்வதல்ல, வரி செலுத்தாதவர்களையும் வரி செலுத்த வைப்பது தான் இதன் நோக்கம். ஜிஎஸ்டியில் நாம் யாருக்கு பொருளை விற்று இருக்கிறோம் என்பதை மட்டும் கொடுத்தால் போதும். மற்றவைகளை தானாகவே மேட்ச் செய்து கொள்ளும். எனவே ஜிஎஸ்டியில் இல்லாதவர்களுக்கு பொருட்களை விற்றாலும், அவர்களிடமிருந்து வாங்கினாலும் சிரமப்படப்போவதோ பிசினஸ் மேன்கள் தான். இந்த பிரச்னைகளுக்கு பயந்து சரியாக வரி செலுத்த நிறைய பிசினஸ்மேன்கள் முன் வருவார்கள் இதனால் கூட ஜிஎஸ்டி வரி அதிகரிக்கும் எனச் சொல்கிறார் அஜஹ் பூஷன்.