டெல்லி: 2019-20ஆம் நிதியாண்டில் தனி நபர் வரி மூலமாக 6.20 லட்சம் கோடி பெருநிறுவன வரி மூலமாக 7.60 லட்சம் கோடியாக என மொத்தம் ரூ.13.80 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பியூஷ் கோயல், நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 80 சதவிகிதமாக அதிகரிப்பு. 2013 - 14 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் வரி வருவாய் 12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார். வரி செலுத்துவது எளிமை ஆக்கப்பட்டதால் தான் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
மறைமுக வரியாக சுங்கவரி விதிப்பு மூலம் ரூ.1.12 லட்சம் கோடி திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை தாண்டி 1.30 லட்சம் கோடியாக வசூலாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2018-19ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக 7.43 லட்சம் கோடி திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 6.43 லட்சம் கோடி மட்டுமே வசூலானது. வரும் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 7.61 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.