தில்லி: அபிஜித் சென், தில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருக்கிறார். இவர் முன்னாள் திட்டக் குழுவில் உறுப்பினராகவும் இடம் பிடித்திருக்கிறார்.
மத்திய அரசின் பல்வேறு விவசாயம் மற்றும் அதற்கான விலை நிர்ணயக் கமிட்டிகளில் உறுப்பினராக இருந்திருக்கிறார். அதோடு மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா போன்ற மாநில திட்டக் குழுக்களிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஐநா சபையின் மேம்பாட்டுத் திட்டக்கள், ஐநாவின் உனவு மற்றும் விவசாய அமைப்பு, OECD என பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். இனி அவர் மொழியில்...
நம்பகத்தன்மை
"என்னைப் பொறுத்த வரை இந்தியாவில் சில துறைகளுக்கு எப்போதுமே அதன் நம்பகத் தன்மை தான் முதல் சொத்து. உதாரணமாக நீதித் துறை மற்றும் புள்ளியியல் துறை. இந்த இரண்டு துறைகளும் சொல்வதை நாம் அப்படியே கேட்டுக் கொண்டிருக்கிறோம். மக்களும் அதை நம்புகிறார்கள். ஒருமுறை மக்கள் இந்த அமைப்புகள் மீத நம்பிக்கை இழந்துவிட்டால் மொத்த பேரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள்" என்கிறார்.
திட்டக் குழு இருந்த போது
"திட்டக் குழு கலைக்கப்படும் வரை நானும் திட்டக்குழுவில் பணியாற்றி இருக்கிறேன். நாங்களும் மத்திய அரசின் புள்ளியியல் துறையும் ஒன்றாக அமர்ந்து வேலை பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் எப்படி வேலை பார்க்க வேண்டும் என நாங்க சொன்னதில்லை" என்கிறார்.
தயாரிப்பவனுக்கே தாயாரிக்கப் பயிற்சியா..?
"மத்திய புள்ளியியல் துறை மற்றும் தேசிய மாதிரி சர்வே அமைப்புகள் எல்லாம் ஆயிரக் கணக்கான களப் பணிகளில் இறங்கி பாடுபட்டு அரசுக்குத் தேவையான தகவல்களை தயாரிக்கிறார்கள். புள்ளியியல் துறை தயாரிக்கும் தரவுகளை அதிகம் பயன்படுத்தும் நிதி ஆயோக்கே போன்ற அமைப்புகளே, புள்ளியியல் துறை தரவுகளை எப்படித் தயாரிக்க வேண்டும் எனச் சொல்லும் என்றால் பிறகு அந்த தரவுகளின் மீதான நம்பகத் தன்மை என்ன ஆவது.
முற்றிலும் தவறு
மேலும் "இந்திய புள்ளியியல் துறையில் மூக்கை நுழைப்பது அராஜகமான செயல். இதை நிதி ஆயோக் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேற்கொண்டு நிதி ஆயோக் இப்படி செய்யுமானால் அது புள்ளியியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை நொறுக்குவதாகவே இருக்கும். இப்படித் தான் சீனா ஒரு காலத்தில் இருந்தது. அந்த காலங்களில் சீனா என்ன பொருளாதாரம் சாந்த எண்களை வெளியிட்டாலும் எந்த ஒரு சர்வதேச அமைப்பும் நம்பாது. அந்த நம்பிக்கையை மீண்டும் பெற சீனா பெரிய அளவில் போராடிப் பெற்றது. அப்படி போராட்டத்தை நிதி ஆயோக் தன் முட்டாள் தனத்தினால் தொடங்கி வைக்காது என்றே நினைக்கிறேன்" என்கிறார்.