சமீபத்தில் தான் நேபாளம் இந்தியாவுக்கு எதிராக ஒர் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இந்திய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு நேபாளத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நேபாள ரூபாயைப் போன்றே அங்கு இந்திய ரூபாயையும் சரளமாக பயன்படுத்தும் நேபாளிகள் அங்கு அதிகம். ஒரு இந்திய ரூபாய் என்பது 1.59 நேபாள ரூபாய்க்குச் சமம்.
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியைப் போல நேபாளத்தின் மத்திய வங்கியான நேபாள் ராஷ்டிர வங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமையே இந்திய ரூபாய் நோட்டுக்களுக்கான தடை சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது. நமக்கு வந்து சேரத் தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
அந்த சுற்றறிக்கைப் படி, இனி நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுக்களில் 100 ரூபாய்க்கு மேல் அதிக மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுக்களான 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது. 100 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் உள்ள இந்திய ரூபாய் நோட்டுக்கள் வழக்கம் போல பயன்படுத்தலாம். இந்த தடை நேபாள தேசத்தவர்களுக்கும் பொருந்தும்.
இப்போது மீண்டும் இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் ஒரு அதிரடி காட்டி இருக்கிறது நேபாளம். எதில் தெரியுமா..?
தொழிலாளர்கள்
இதுவரை ஏதோ பக்கத்தூருக்கு சுற்றுலா செல்வது போல இந்தியர்கள் பயணித்துக் கொண்டிருந்த நேபாளத்தில் இந்திய தொழிலாளர்கள் நேபாளத்தில் வேலை செய்ய இனி முறையான தொழிலாளர் உரிமங்கள் வேண்டுமெனச் சொல்லி இருக்கிறது.
ஏன்
நேபாள தொழிற்துறையில் உண்மையாகவே எத்தனை இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். யாரால் நேபாளப் பொருளாதாரம் ஓடுகிறது என்கிற விஷயங்கள் தெரிய வர வேண்டும் என்பதால் தான் இந்த நடவடிக்கைகளாம்.
சோதனை செய்வோம்
நேபாள தொழிலாளர் துறை ஒவ்வொரு கடை, தொழிற்சாலைகளாகச் சென்று சோதனையிட்டு வர இருக்கிறார்களாம். அப்படி சோதனைச் செய்யும் போது முறையான பணியாளர் உரிமம் இருந்தால் மட்டுமே நேபாளத்தில் வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்களாம். இல்லை என்றால் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார்களாம்.
இதுவரை
இந்த அறிவிப்பு வெளியாகும் முன் வரை இந்தியா மற்றும் நேபாள அரசுகளுக்கு இடையிலான சில சிறப்ப் ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கோ அல்லது நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கோ பணீயாளர்கள் தாராளமாக பயணிக்கலாமென உறவு கொண்டாடிக் கொண்டிருந்தது நேபாளம்.