மும்பை : வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி குறைக்கும் என தொழில்துறையினர் எதிர்பார்த்தது போலவே வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ வட்டிவிகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சில்லரை பணவீக்கம் குறைந்திருப்பதும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாகவும் ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான நிதி கொள்கை குழு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி வங்கிகளின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. அதன்படி இன்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6.25 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 6.50 சதவிகிதமாக இருந்தது.
தொழில்துறையில் சுணக்கம்
ஒவ்வொரு ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தின் போதும் வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பதுதான் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். அதுவும், தற்போது தொழில்துறை சற்று சுணக்கமாக இருக்கும் சூழலில் அதிக அளவிலான முதலீடுகளை சந்தையில் வரச்செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமெனில் மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும்.
நிதி ஆயோக் கருத்து
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் நுகர்வை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. எனவே, தற்போது முதலீடுகள் அவசியமாக உள்ளன. இதனடிப்படையில் பார்க்கும்போது, இது ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்கவேண்டிய நேரம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்திருந்தார்.
பொருளாதாரத்தில் முதலீடு
ரிசர்வ் வங்கி எடுத்த பல்வேறு முயற்சிகளால் பணவீக்கம் குறைவாக இருக்கிறது. ஆனால், தற்போது தொழில் துறையில் மந்த நிலை உள்ளது. மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், பொருளாதாரத்தில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே நலிவுற்ற தொழில் துறைகளை மீண்டும் புதுப்பிக்க முடியும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம். எனவே, இது மிகச் சரியான நேரம் என்றும் ராஜீவ் குமார் கூறியிருந்தார்.
தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள்குறைக்கலாம். அதன் மூலம் முதலீடுகளை ஊக்குவித்து பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கலாம். பல்வேறு தொழில்துறையின் எந்திரங்கள் இயங்க ஆரம்பிக்கும். முடிவு ரிசர்வ் வங்கியின் கையில் தான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார். ராஜீவ் குமார் மட்டுமல்ல, தொழில்துறையினர் பெரும்பாலும் வட்டிவிகிதம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில்தான் இருந்தனர்
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு
இந்நிலையில், இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் மும்பையில் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6.25 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி 0.25%
இதே போன்று ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 6.25 சதவிகிதமாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லரை பணவீக்கம் குறைந்திருப்பதாலும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்யும் விதமாகவும் இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாதிப்பு யாருக்கு
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இதை வங்கிகள் உடனடியாக அமல்படுத்துமா என்று பொருளாதார வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வீடு வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்பது சாதகமான அம்சம். அதே நேரத்தில் பொதுமக்கள் வங்கிகளில் செய்துள்ள பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமும் குறையும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.