நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார்.
அதனால் இ காமர்ஸ் துறையில் அதாவது இணைய வாயிலாக நாட்டின் ஒவ்வொரு மக்களையும் தனது வாடிக்கையாளராக மாற்றும் மிக முக்கியமான வர்த்தகத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய இ காமர்ஸ் வர்த்தகத்தை மேற்கு வங்காளத்தில் இருந்து துவங்க திட்டமிட்டுள்ள முகேஷ் அம்பானி துவக்கத்திலேயே யாரும் எதிர் பார்க்காத வகையில் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
எதிர்காலம்..?
மத்திய அரசு இ காமர்ஸ் துறையில் விதித்துள்ள புதிய விதிமுறைகளின் மூலம் அமேசான் மற்றும் வால்மார்ட்-பிளிப்கார்ட் கூட்டணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இத்துறையில் புதிய முதலீடுகள் வர வாய்ப்புகள் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் இத்துறையின் எதிர்கால வளர்ச்சியும் கேள்விக்குறியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானியும் மத்திய அரசு இ காமர்ஸ் துறையில் புதிய விதிமுறைகளை அறிவித்த சில நாட்களில் இப்புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்த திட்டமிட்ட முகேஷ் அம்பானி தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்தை மேற்கு வங்காளத்தில் இருந்து துவங்க முடிவு செய்துள்ளார்.
மேற்கு வங்கம்
ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ரிலையன்ஸ் ரீடைல் கடைகள் இருக்கும் நிலையில், இதை அடித்தளமாக வைத்து இம்மாநிலத்தில் உள்ள சிறு கடைகளைத் தனது ரீடைல் வர்த்தகம் அமைப்பு மற்றும் கிடங்குகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம் ஈகாமர்ஸ் வர்த்தகத்தின் ஆரம்பம் வலிமையான துவக்கமாக இருக்கும் என முகேஷ் அம்பானி திட்டமிட்டு 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.
சில்லறை வணிகர்கள்
மேலும் சிறு வணிகங்கள் முதல் பெரிய வணிகங்கள் வரையில் அனைத்துத் தரப்பு விற்பனையாளர்களையும் இணைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் சரக்கு மற்றும் மற்ற பணிகளுக்குப் பெரிய அளவிலான கிடங்குகள் தேவைப்பட உள்ளது. இதற்காகத் தேடுதல் வேட்டை உடனடியாகத் துவங்கியுள்ள ரிலையன்ஸ் ரீடைல் அடுத்த 24 மாதங்களில் இந்தப் பணிகளை முடிக்க உள்ளது.
வாடிக்கையாளர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இப்புதிய திட்டத்தின் மூலம் நுகர்வோர் அதாவது மக்கள், விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் லாபகரமானதாக இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் மூலம் 3 கோடி சிறு விற்பனையாளர்களுக்கு ரிலையன்ஸ் ரீடைல் நேரடியாக உதவ உள்ளது.
திட்டம்
இந்த 10,000 கோடி ரூபாய் முதலீடு மட்டும் அல்லாமல் இத்திட்டம் அடுத்தடுத்து இந்தியாவின் முக்கிய மாநிலங்கள் அனைத்திலும் விரிவாக்கம் அடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திட்டம் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தாத இடங்களில் அடுத்தடுத்த வர வாய்ப்புகள் அதிகம். முகேஷ் அம்பானியின் இந்த அறிவிப்பு மேற்கு வங்காள முதல்வர் மம்தாவிற்குச் சாதகமாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.