நாகர்கோவில்: ஆண்கள் மட்டும்தான் இதெல்லாம் செய்ய முடியுமா என்று பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து களம் குதித்து வெற்றிக் கனிகளை பறிக்க ஆரம்பித்து நெடுங்காலம் ஆகி விட்டது. அதில் ஒரு வெற்றிக் கதைதான் இது.
கன்னியாகுமரி மாவட்டம், என்றாலே ஆன்மிகம், முக்கடல் சங்கமம், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், தென்னை, வாழை, நெல் விவசாயம் என திரும்பும் பக்கமெல்லாம் இயற்கை வளம் கொண்டு கடவுளின் சொந்த பூமியாக காட்சி அளிப்பதும், நெல் விவசாயம் தழைத்து ஒரு காலத்தில் கேரளா மாநிலத்திற்கே உணவளித்த நாஞ்சில் நாட்டின் தரம் நிறைந்த நெல் விவசாயமே நம் நினைவிற்கு வரும்.
ஆனால் உலக அளவில் பிரசித்தி பெற்றதோடு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் தேங்காய் விவசாயமும் குமரியின் மற்றுமொறு மணிமகுடமாய் அமைந்து இருப்பது இன்றும் பலரும் அறியாத விஷயமாகவே உள்ளது.
பட்டதாரிப் பெண் மீனா
இன்று வேலையில்லாமல் இருக்கும் பலர் விவசாயத்தில் அக்கறை செலுத்தினால் சுய தொழிலோடு நல்ல லாபம் ஈட்டலாம் என அக்கறையுடன் கூறினார் தேங்காய் விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்தி இன்று தென்னங்கன்று உற்பத்தியாளராக இருக்கும் பட்டதாரி பெண் மீனா. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ளது ஈத்தாமொழி. இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் மீனா.
தென்னை விவசாயம்
மண் வளம், நீர் வளம் என விவசாயத்திற்கு தேவையான அத்தனை வளங்களையும் தன்னகத்தே கொண்ட இப்பகுதியில் முக்கிய விவசாயமாக திகழ்கிறது தென்னை விவசாயம். இங்கு விளையும் தேங்காய்கள் அதிக அடர்த்தியோடு, எண்ணெய் வளம் மிக்கதாக திகழ்வதால் இங்குள்ள தேங்காயையும், தென்னை கன்றுகளையும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் மற்றும் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த விவசாயிகளும் போட்டி போட்டு வாங்கி செல்வது சிறப்பு பெற்றது
அருமையான தேங்காய்கள்
தென்னைகளின் பல்வேறு பிரிவுகளான நக்குவாரி, சிகப்பு, மலேசியன் பச்சை, அம்பாடி, ஜாவா, நாடு போன்ற 12 வகையான தேங்காய் கன்றுகளும் இங்கு பாவுதல் செய்யப்படுவது மேலும் சிறப்பு கொடுக்கும் விதமாக அமைகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய் மற்றும் பாவுதல் செய்யப்படும் தென்னங்கன்றுகளுக்கு மண் வளமே சிறந்த உரம் என்பதால் வேறு எந்த உரங்களும் பயன்படுத்தப்படுவது இல்லை. இதன் காரணமாகவே இங்கு விளையும் தேங்காய்களையும் தென்னன்கன்றுகளையும் உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வாங்கி செல்வதற்கு முதல் காரணமாக அமைகிறது.
பக்குவம் - பராமரிப்பு
தென்னை மரங்களில் இருந்து வெட்டப்படும் தலை கொலை என்று அழைக்கப்படும் மரத்தின் முதல் தேங்காய் கொலைகளில் உள்ள தேங்காய்களை தரம் பிரித்து அதனை பக்குவப்படுத்தி தேங்காய் மட்டையில் இருந்து பெறப்படும் நார் மூலமாக அதனை பாவுதல் செய்து மண்ணோடு மண்ணாக வைத்து விடுகின்றனர். ஒரு வாரத்தில் இரண்டு முறை தண்ணீர் விடுகின்றனர். இதில் சிகப்பு என்றால் ஒன்று முதல் இரண்டு மாதங்களிலும் மற்ற ரக தேங்காய்கள் மூன்று முதல் ஐந்து மாத காலத்திலும் முளை விட தொடங்குகின்றன. முளை விட்ட தேங்காய் கன்றுகளை ஒரு இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது. இது குறித்து தென்னை விவசாயிகள் கூறும் போது, விவசாயம் செய்யும் விவசாயிகள் இங்கு விற்கப்படும்.
தரமான தேங்காய்கள்
தென்னங் கன்றுகளை வாங்கி தோப்புகளில் வைத்து அதற்கு வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே போதும் மூன்று முதல் ஐந்து வருடங்களில் அதே தரம் மிக்க தேங்காய் கிடைக்கிறது. அதே போன்று இந்த தேங்காய் விற்பனை அதிக லாபத்தை ஈட்டி தருவதால் மேல் நாடுகளிலும் குமரிமாவட்ட தென்னன்கன்றுகளுக்கு மவுசு அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் சிறிய தொழிலாக ஆரம்பித்து இன்று முப்பது லட்சம் கன்றுகளை வளர்க்கும் விதமாக லாபம் ஈட்டி தரும் இந்த தொழில் மூலம் பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாவும் வேலை வாய்ப்பு அளிக்க முடிகிறது.
வரும் தலைமுறையினர் விவசாயத்தை பேணிகாக்க வேண்டும் என்பதே தற்போதைய விவசாயிகளின் எண்ணமாக (ஆசையாக) உள்ளது என்று கூறுகிறார் மீனா.