ஹங்கேரி : இந்தியாவின் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தி நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் ஹங்கேரி நாட்டில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெறும் பெண்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் கூறியுள்ளார். ஹங்கேரிய குழந்தைகள்தான் எங்களுக்குத் தேவை. நாட்டின் எதிர்காலத்துக்கு இது அவசியம் என்கிறார் பிரதமர்.
ஒரு நாட்டின் மக்கள்தான் அந்நாட்டின் செல்வங்கள் என்பதை ஹங்கேரி பிரதமர் உணரத்தொடங்கியுள்ளதால் நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெறும் பெண்களுக்கு பலவிதமான சலுகையையும், குடும்பத்தினருக்கு வட்டியில்லா கடனையும் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 'பொது ஆலோசனை' என்ற திட்டத்தை அறிமுகம் செய்த பிரதமர் அப்போது பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள், கருத்துகளைக் கேட்டறிந்தார். அதில் பெரும்பாலோனோர் அந்நியக் குடியேற்றம் குறித்துப் பல ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில்தான் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன
ஹங்கேரியின் மக்கள் தொகை
மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியின் மொத்த நிலப்பரப்பு 93093 சதுர கிலோ மீட்டர்கள்) மொத்த மக்கள் தொகை 2017ஆம் ஆண்டு கணக்கின்படி சுமார் 98 லட்சம் பேர் (சென்னையின் மொத்த பரப்பளவு 426 சதுர கிலோ மீட்டர்கள்தான், ஆனால் இதன் மொத்த மக்கள் தொதையோ 1 கோடியை தாண்டிவிட்டது). இதில் 83.7 சதவிகித ஹங்கேரியர்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டு பிரதமர் விக்டர் ஒர்பான். உலக அளவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் வேளையில் ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஒர்பான் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
குடியேறும் மக்கள்
அந்நாட்டின் மக்கள்தொகை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. குறிப்பாக ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு குறைவதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாகக் குடியேறி வருகின்றனர். இதனால் ஹங்கேரியர்களைவிட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
குறையும் மக்கள் தொகை
ஹங்கேரியின் முக்கிய எதிர்கட்சியான வலதுசாரி தேசியவாதிகள் கட்சியினர் ஹங்கேரியில் முஸ்லீம்கள் அதிகளவில் குடியேறுவதால் தான் ஹங்கேரியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சராசரியாக குறைந்துவருவதற்கு காரணம் என்று கடுமையாக குற்றம் சாட்டி எதிர்த்து வருகின்றனர். மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக பல சலுகைகளை அறிவித்துள்ளார் ஹங்கேரி பிரதமர்.
நான்கு பிள்ளைகள் பெறலாம்
ஹங்கேரி நாட்டின் மக்கள் தொகையை சரிசெய்யும் விதமாகப் பிரதமர் விக்டர் ஒர்பான் அறிவித்துள்ள சலுகையின்படி 40 வயதுக்குக் குறைந்த திருமணமான ஒரு பெண் 4 குழந்தைகளைப் பெற்றால் அவர் வருமானவரி செலுத்தத் தேவையில்லை. அவருக்கு ஹங்கேரி பணத்தில் சுமார் 10 மில்லியன் வட்டி இல்லாமல் கடனாக வழங்கப்படும். இந்தப் பணத்தில் 7 இருக்கைகள் கொண்ட வாகனம் வாங்கிக்கொள்ளலாம். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்துவிட்டால் முழுக்கடனும் ரத்து செய்யப்பட்டுவிடும். திரும்பிச் செலுத்தத் தேவையில்லை. இது தவிர குழந்தைகள் பராமரிக்கும் மையங்கள், கின்டர்கார்டன் பள்ளிகள் தொடங்கவும் அதிகளவில் நிதி வழங்கப்பட உள்ளது.
பொதுமக்கள் ஆலோசனை
பிரதமர் ஓர்பான் தனது ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு 'பொது ஆலோசனை' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள், கருத்துகளைக் கேட்டறிந்தார். அதில் பெரும்பாலோனோர் அந்நியக் குடியேற்றம் குறித்துப் பல ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில்தான் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குழந்தை செல்வங்கள்
ஐரோப்பாவில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதங்களுக்கு காரணம் குடியேற்றம்தான் என்று பிரதமர் ஆர்பன் கூறினார். எங்கள் நாட்டினர் எதையும் வித்தியாசமாகத்தான் நினைக்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை, மக்கள் தொகை என்பது வெறும் எண்ணிக்கை அடிப்படையில் தேவையில்லை. எங்களுக்கு ஹங்கேரிய குழந்தைச் செல்வங்கள் தான் அவசியம், அதனால் தான் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளோம் என்றார். ஹங்கேரியைத் தவிர பிற நாடுகளிலும் சில சலுகைகள் அறிவித்துள்ளன.
ஜப்பானில் ரூ. 2 லட்சம் நிதி
மக்கள் தொகையை பெருக்க கிழக்கு ஆசிய நாடான ஜப்பானும் 5ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் மாதந்தோறும் 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் உயிரிழப்பு விகிதம் அதிகரித்து பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதும், செலவும் அதிகரித்து வருவதால் பெரும் சுமையாக கருதுகின்றனர். பெண்கள் வேலைக்கு செல்வதாலும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இதன்காரணமாகவே மக்கள் தொகை வீழ்ச்சியடைகிறது.
இரண்டு மனைவி அவசியம்
ஆப்பிரிக்க நாடான எரித்திரியா நாட்டிலோ ஆண்கள் இரண்டு பெண்களை கட்டாயம் திருமணம் செய்யவேண்டும். இல்லை என்றால் சிறைத்தண்டனை நிச்சயம் என்று அறிவித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியும் நான்கு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வருமான வரி கிடையாது என்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் இரண்டு குழந்தைகள்
இந்தியாவில் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வேலை கிடையாது என்று அறிவித்துள்ளது. அண்டை நாடான சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 1.41 பில்லியன்கள். வரும் 2029ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை கடுமையாக சரியும் என்று ஐ.நாவின் சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரித்ததைத் தொடர்ந்து, தற்போது அமலில் உள்ள ஒரு குழந்தை திட்டத்தை கைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.