இடைக்காலப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி விதிப்பு மாற்றங்கள் அனைத்தும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் நலன் பெற வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடனே அறிவிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் இருக்கும் சேமிப்பு திட்டங்களின் முதலீடு செய்வதன் மூலம் தனிநபர் 9,50,000 ரூபாய் வரையிலான வருடாந்திர வருமானத்திற்கு முழுமையான வரி விலக்குப் பெறலாம் என நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
டாக்ஸ் ரிபேட்
பைனான்சியல் பில் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த பியூஷ் கோயல், வருமான வரி விதிப்பில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கப்படவில்லை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் டாக்ஸ் ரிபேட்-இல் (tax rebate) மட்டும் தான். இந்த மாற்றத்தின் மூலம் மக்கள் அதிகளவில் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் அதிகளவிலான முதலீடு செய்வார்கள். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும் என விளக்கம் அளித்தார்.
இடைக்காலப் பட்ஜெட்
பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் 2.5 லட்சம் ரூபாய் வரையில் இருந்து வரி விலக்கு அளவீட்டை 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தினார். இதேபோல் ஸ்டான்டர்ட் டிடெக்ஷன் அளவீட்டை 40,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரையில் உயர்த்தினார்.
ஜூலை மாதம்
மேலும் பியூஷ் கோயல் கூறுகையில் இந்த இடைக்காலப் பட்ஜெட்டில் நாங்கள் எவ்விதமான வரி அறிவிப்புகளையும் அறிவிக்கவில்லை, அதை நாங்கள் ஜூலை மாதத்தில் கொண்டு வருவோம் எனவும் கூறினார்.
புதிய அரசின் வேலை இது
பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய அரசு ஜூலை மாதம் தாக்கல் செய்யும் வருடாந்திர பட்ஜெட் அறிக்கையில் வரி அறிவிப்புகளைக் கொண்டு வரும் எனப் பியூஷ் விளக்கம் அளித்தார்.
தேர்தல் வாக்குறுதி
மேலும் தற்போது நாங்கள் அறிவித்துள்ள 5 லட்சம் ரூபாய்க்கான வருமான வரி விலக்கு மற்றும் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வருமானம் ஆகியவற்றில் விருப்பம் இல்லையெனில், பொதுத் தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் இதை அடுத்த ஆட்சியில் மாற்றுவோம் எனத் தெரிவித்துவிட வலியுறுத்தினார்.
கட்டாயம் வரி உயர்த்தப்படும்
பியூஷ் கோயல் பேச்சின் மூலம் பொதுத் தேர்தலில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரி விலக்கில் மாற்றம் இல்லாவிட்டாலும், அடுத்தடுத்த வரிப் பலகைகள் நிச்சயம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.