டெல்லி: பிரபல உணவுப் பொருட்கள் விநியோக நிறுவனமான ஸ்விகி மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனைக்காக ஸ்விகி ஸ்டோர்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளது. பழங்கள், காய்கறிகள் மற்றும் குழந்தை நல பொருட்களை டெஃலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. ஸ்விகி ஸ்டோர்ஸ் உங்களுடைய எல்லா தேவையையும் பூர்த்தி செய்யும் என்று தெரிவித்துள்ளது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஆன்லைன் உணவுப் பொருட்கள் விநியோக நிறுவனமான ஸ்விகி இந்திய மெட்ரோ நகரங்கள் மற்றும் இரண்டாம்கட்ட நகரங்களில் மிகவும் பிரபலமானது. இந்திய அளவில் 80 நகரங்களில் ஏற்கெனவே ஸ்விகி தனது உணவு டெலிவரி சேவையை நடத்திவருகிறது. ஸ்விகி தளத்துக்குச் சென்று நாம் விரும்பும் உணவகத்தில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்தால், நாம் இருக்கும் இடத்துக்கு ஆர்டர் செய்த உணவுப் பொருளை கொண்டுவந்து சேர்க்கும்.
தற்போது இந்த நிறுவனம் மளிகைப் பொருட்கள் முதல் மருந்துகள் வரை அனைத்தையும் ஸ்விகி ஸ்டோர்ஸ் என்ற செயலி வழியாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய முயற்சியின் மூலம் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள 'பிக் பாஸ்கெட்' நிறுவனத்திற்குப் போட்டியாக ஸ்விகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்விகி ஸ்டோர்ஸ் தளத்தில் பொருட்களைத் தேர்வு செய்து, வேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வசதியான கட்டண முறையில் பொருட்களை நிரப்பி கொண்டு வந்து சேர்ப்போம். அது உங்கள் பற்பசையாகவும் இருக்கலாம் அல்லது உங்களது செல்லப் பிராணிக்கான உணவாகவும் இருக்கலாம். ஸ்விகி ஸ்டோர்ஸ் உங்களுடைய எல்லா தேவையையும் பூர்த்தி செய்யும் என்று தெரிவித்துள்ளது. இதன் சோதனை முயற்சிகள் தற்போது குருகிராமில் நடந்து வருகிறது.
முதல்கட்டமாக குருகிராமில் உள்ள 3,500 நிறுவனங்கள் ஸ்விகி ஸ்டோர்ஸில் பதிவு செய்துள்ளன. ஹெல்த்கார்ட், ஜாப்ஃப்ரெஷ் மற்றும் அப்போலோ பார்மசி உள்ளிட்ட பல நிறுவனங்கள் இச்சேவையில் இணைந்துள்ளன. இந்தச் சேவைகளுக்காக எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்ற தகவல்கள் குறித்து இதுவரையில் ஸ்விகி நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2014 ஆம் அண்டில் பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் தற்போது மிக அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ஸ்விகி நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு, சுமார் 21,300 கோடி ரூபாய் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் சுமார் 7,100 கோடி ரூபாய் முதலீட்டை நாஸ்பர்ஸ் என்னும் தென் ஆப்ரிக்க நிறுவனத்திடமிருந்து பெற்றுளது ஸ்விகி.
கடந்த வாரம் செய்த அறிவிப்பின்படி ஸ்விகி, கின்ட்.ஐஓ என்னும் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பொருட்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அடிப்படைத் தேவைகளை மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் அனைத்து உடல்நலம் சார்ந்த பொருட்களையும் டெலிவரி செய்ய முடிவெடுத்துள்ளது.
அமேசான் , ஃப்ளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்கள் டன்சோ நிறுவனத்துடன் இணைந்து இதேபோன்ற ஒரு சேவையை வழங்கி வருகின்றன. டன்சோவில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இப்போட்டியைச் சமாளிக்கவே நாஸ்பெர்ஸ் நிறுவனம் ஸ்விகியில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. ஸ்விகி நிறுவனத்துக்கு தற்போது நாடு முழுவதும் 1.25 விநியோகக் கூட்டாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஸ்விகியின் சிஇஓ ஸ்ரீஹர்ஷா மஜித், "இந்த ஸ்விகி ஸ்டோர்ஸ் சேவை மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஸ்டோர்களிலிருந்தும் பொருட்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம். முதற்கட்ட சோதனை முயற்சியாக குருகிராமில் தொடங்கியுள்ளோம். கூடிய விரைவில் இந்தச் சேவை அனைத்து நகரங்களிலும் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.