மும்பை : வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை பார்ப்பதற்கு தயார் என்றும் அதற்காக சம்பளத்தில் பிடித்தம் செய்தாலும் கவலை இல்லை என்றும் ஊழியர்கள் விரும்புவதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஊழியர்கள் வாரத்தில் சில நாட்கள் வீட்டில் இருந்துகொண்டு வேலை பார்ப்பதால், அவர்களின் மன அழுத்தங்கள் குறைந்து மன உறுதி அதிகரித்து ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வேலை பார்ப்பதால் திறமை அதிகரித்து உற்பத்தி அதிகரிக்கிறது.
நாய்க்கு வேலை இல்லை, ஆனால் நிற்க நேரமில்லை என்று ஒரு கிராமத்து பழமொழி உள்ளது. அதற்கு தகுந்தார் போலவே, எந்திர மயமாகிவிட்ட தற்போதைய காலச் சூழலில், நிற்பதற்கு கூட நேரமில்லாமல், காலையில் கண் விழித்ததில் இருந்து கண்ணை மூடிக்கொண்டே பல் துலக்கியும் துலக்காமலும் அரைகுறையாக குளித்து விட்டு அரைகுறையாக சாப்பிட்டும் சாப்பிடாமலும், பையைத் தூக்கிக்கொண்டு பஸ்ஸிலும், தங்களின் சொந்த வாகனங்களிலும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் இந்தியாவில் அநேகம் பேர்.
அப்படி அடித்துப் பிடித்து அலுவலகம் செல்லும்போதே திக் திக் மனதுடன் தங்கள் மணிக்கட்டில் கட்டிய வாட்சை பார்த்துக்கொண்டே, ஐயோ அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதே, அலுவலகத்தில் என்ன திட்டு விழுமோ என்ற பதை பதைப்பில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் பெரும்பாலானவர்கள். இப்படி அவசர கோலத்தில் அலுவலகம் செல்வதால் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்தில் தங்களின் வேலையின் மீது முழு அர்பணிப்பையும் ஈடுபாட்டையும் முழுமையாக செலுத்த முடியாமல் கோட்டை விடுகின்றனர்.
அலுவலக வேலை
அலுவலக வேலை பார்ப்பவர்களில் அநேகம் பேர் தங்களின் அத்தியாவசிய வீட்டுச் செலவுகளான டெலிஃபோன் பில், மொபைல் பில், கரண்ட் பில், LIC பிரீமியம், மளிகை சாமான்கள் வாங்குவது என, இன்ன பிற செலவினங்களை சரியான நேரத்தில் கட்ட முடியாமல் தவிப்பதுண்டு. பல பேர் இதற்காகவே அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு தங்களின் வீட்டு வேலைகளை முடிப்பதும் உண்டு. இன்னும் சில பேர் அலுவலக வேலையாக வெளியில் செல்லும்போது தங்களின் சொந்த வேலையையும் சேர்த்து (இதுக்கு பேர்தான் Two in One) பார்த்து விடுவதுண்டு.
நல்ல வேலை
வீட்டு வேலையிலும் அலுவலக வேலையிலும், தங்களின் கவனத்தையும் ஈடுபாட்டையும் முழுமையாக செலுத்த முடியாமல் சிக்கி சின்னாபின்னமாகும்போது அவர்கள் நினைப்பது என்னவென்றால், என்னடா வாழ்க்கை இது, வீட்டிலும் கவனம் செலுத்தமுடியவில்லை, ஆபிஸிலும் கவனம் செலுத்த முடியவில்லை. சொந்த பந்தங்களின் வீட்டு விஷேகங்களில் கூட கலந்து கொள்ள முடியவில்லை, என்னடா வாழ்க்கை இது, இதுக்கு பேசாமல் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது மாதிரி ஒரு நல்ல வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ஏங்கித் தவிப்பதும் உண்டு.
வீட்டில் இருந்து வேலை செய்ய தயார்
நம் நாட்டில் இப்படி வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கு தயாராக இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. வாரத்தில் இரண்டு நாட்களாவது வீட்டில் இருந்துகொண்டே அலுவலக வேலைகளை பார்ப்பதற்கு சம்பளத்தை பிடித்தம் செய்தாலும் கவலை இல்லை என்று கூறியிருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஊழியர்களிடம் ஆய்வு
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் இந்தியாவிலுள்ள Indeed India என்னும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக சமீபத்தில் இந்தியாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களில் சுமார் 1000 ஊழியர்களையும், சுமார் 501 நிறுவனங்களையும் தேர்ந்தெடுத்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 83 சதவிகிதம் பேர் வீட்டில் இருந்தே வேலை பார்க்க விரும்புவதாக கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
சம்பளத்தை பிடித்தாலும் கவலையில்லை
வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்வதால் தங்களின் சொந்த வேலைகளையும் செய்துகொள்ள முடிவதால், இதற்காக தங்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்வதற்கும் ஆட்சேபம் இல்லை என்று சுமார் 53 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
அலுவலக வேலைகளை பார்த்துக்கொண்டு தங்களின் சொந்த தேவைகளையும் வீட்டு வேலைகளையும் பார்க்க முடியாமல் போவதால், அதற்கு ஏற்றார்போல் வேலைகளை தேடுவாகவும், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்வதற்கு தோதான நிறுவனங்களை தேடுவதாகவும், இதற்காக சம்பளத்தில் பிடித்தம் செய்தாலும் கவலை இல்லை என்று சுமார் 48 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
வேலை தேடும் ஊழியர்கள்
மேலும் அந்த ஆய்வில் சுமார் 76 சதவிகிதம் ஊழியர்கள் தாங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும், தங்களின் விருப்பதற்கு ஏற்றார் போல் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு தோதான நிறுவனங்களை வலைவீசி தேடுவதாகவும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதிலும் சுமார் 42 சதவிகிதம் பேர் தாங்கள் ஏற்கனவே அந்த மாதிரியான வேலைகளை தேடத் தொடங்கி விட்டதாகவும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
தொழில் நுட்பம்
நிறுவனங்களும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கு ஏற்றார்போலவே, தங்களின் நிறுவன கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகின்றன. சுமார் 99 சதவிகித நிறுவனங்கள் அதற்காகவே தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகின்றன. குறிப்பாக வீடியோ கான்ஃபரன்சிங் டூல்ஸ், லேப்டாப் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி வருவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.