உலக அளவில் 2008-ல் நடந்த பொருளாதார சரிவு போல ஒரு மிகப் பெரிய பிரச்னை இந்த 2019-ன் முடிவிலோ அல்லது 2020-ம் ஆண்டிலோ ஏற்பட இருக்கிறதாம்.
அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் பால் கிரக்மன் (Paul Krugman) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவர் தற்போது ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கெளர பேராசிரியராக இருக்கிறார்.
எச்சரிக்கை
இந்த எச்சரிக்கை உலக நாடுகளில் உள்ள அனைத்து பொருளாதார கொள்கை வடிவமைப்பாளர்கள், பொருளாதாரக் கொள்கை முடிவு எடுப்பவர்களுக்கும் பொருந்தும் எனவும் எச்சரித்திருக்கிறார். அதே நேரத்தில் உலக அளவில் பொருளாதாரக் கொள்கை முடிவுகளில் மெத்தனம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
துபாய்
துபாயில் நடந்த உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பேசிய போது இந்த எச்சரிக்கைகளை அடுக்கி இருக்கிறார். அதே நேரத்தில் இப்படி வரும் பொருளாதார பிரச்னைகள் மற்றும் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய உலக நாடுகளிடம் ஒரு சரியான மீண்டு வரக் கூடிய திட்டங்களோ, வரையறைகளோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி இன்ரு வந்தால் அதன் விளைவுகள் எத்தனை மோசமாக இருக்கும் என்பது கூட நமக்கு இன்னும் பிடிபடவில்லை என பிரச்னையின் ஆழத்தை அடிக் கோடிட்டுச் சொல்கிறார்.
மத்திய வங்கிகள்
உலக நாடுகளில் மத்திய வங்கிகள் எல்லாம் தங்களால் முடிந்த அளவுக்கு பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை தவிர்க்கலாம். அதை கூட மத்திய வங்கிகள் செய்யாமல் மெத்தனம் காட்டி வருகிறது. உலக பொருளாதாரக் கொள்கைகளில் வர்த்தகப் போர்களும், தங்கள் நாட்டின் துறைகளை காப்பதுமே பெரிய விஷயங்களாகக் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் உலகப் பொருளாதாரத்துக்கு இது நல்லதல்ல. ஒரு சில நாடுகளின் சண்டை ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்தையும் உறைய வைத்து விடும். அதில் இருந்து மீள்வதும் அத்தனை எளிதானதல்ல என்கிறார்.
டைட்டானிக்
இப்போது உலகப் பொருளாதாரத்தை ஒரு டைட்டானிக் கப்பலுக்கு இணையாக வைத்துப் பார்க்க முடிகிறது. டைட்டானிக் ஒரு பெரிய ஐஸ் பாறையில் மோதி மொத்த கப்பலும் அழிந்து விடும். அது போன்ற ஒரு ஐஸ் பாறையையோ அல்லது பாறை நுணியைக் கூட இன்னும் பார்க்கவில்லை. ஆனால் உலகப் பொருளாதாரம் என்கிற டைட்டானிக் பொருளாதாரச் சரிவு என்கிற ஐஸ்பாறையில் மோதினால் உறுதியாக உலகப் பொருளாதாரத்தை முழுமையாக சிதைத்து விடும், மொத்த உலகப் பொருளாதாரமும் திவாலாகும் நிலைக்குக் கூட தள்ளப்படலாம் என அழுத்தமாக பயமுறுத்துகிறார் பால் க்ருக்மென்.
உலகத் தலைவர்கள்
உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் வாதிகள் இனி வர இருக்கும் மிகப் பெரிய பொருளாதாரச் சரிவுகளை சமாளிக்க அல்லது வராமல் தடுக்க ஒன்றுபட்ட இணைந்து வேலை செய்ய வேண்டும் என்கிறார். அதோடு டெக்னாலஜியின் வளர்ச்சிக்குப் பின் வர இருக்கும் தொழிலாளர் பிரச்சனை குறித்தும் தன் பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.