டெல்லி: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோர் தங்களின் பான் எண்ணுடன் தங்களது ஆதார் எண் விவரத்தையும் கட்டயாம் இணைக்கவேண்டும். இதற்கான கடைசி தேதி வரும் மார்ச் 31ஆம் தேதி என மத்திய வருமானவரித் துறை ஆணையம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளம் கட்டாயம் தேவை என்ற உயரிய நோக்கத்தில் ஆதார் எண் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நாட்டின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும், நடுத்தர மக்களும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகளையும் பெற வழி வகுக்கும்.
அனைவரும் தங்களின் ஆதார் விவரங்களை ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கேஸ் இணைப்பு போன்றவற்றுடன் இணைக்க மத்திய அரசு வலியுறுத்தியது மத்திய அரசின் ஆதார் எண் திட்டத்தை கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்ட உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் வங்கிக்கணக்குடன் இணைக்க வலியுறுத்தியது
வருமானவரி கணக்கு தாக்கல்
வருமான வரித்துறையும் வருமான வரித் தாக்கல் செய்வோர் தங்களின் பான் எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணையும் இணைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்மூலம் போலியான வருமான வரித்தாக்கல் செய்வதை தடுக்க முடியும் என்று நம்பியது. இதற்காக பல முறை காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது.
இணைப்புக்கு காலக்கெடு
தனி நபர்களின் ஆதார் விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க பெரும்பாலானவர்கள் யோசித்தனர். வருமான வரித்துறையும் வேறு வழி இல்லாததால் பல முறை ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க விதிக்கப்பட்ட காலக்கெடுவை தளர்த்தியது.
வருமானவரிச்சட்டம்
இந்நிலையில் ஆதார் எண் அட்டையின் நம்பகத்தன்மையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் உறுதி செய்துள்ளது. இதையடுத்து 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139-ஏஏ உட்பிரிவு(2)ன் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes-CBDT) ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில் ஆதார் எண்ணுடன் பான் பான் எண்ணையும் இணைக்கவேண்டும் என்று குறிப்பிட்டது. இந்த பணிகள் மார்ச் 31க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று CBDT தெரிவித்துள்ளது
ஆதார் இணைப்பு அவசியம்
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் வருமான வரி செலுத்துபவர்கள் பான் அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைத்தே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேசமயம் அதை வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண் மற்றும் பள்ளி சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு கட்டாயம் தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை என கூறியிருந்தது.
பான் உடன் ஆதார் இணைப்பு
இதனை அடுத்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கு வரும் மார்ச் 31ஆம் தேதையை இறுதிக் கெடுவாக அறிவித்துள்ளது. புதிதாக பான் எண்ணுக்கு விண்ணப்பிப்பவர்களும் தங்களின் ஆதார் விவரங்களை கட்டாயம் தெரிவிக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
42 கோடி பான்கார்டுகள்
நேரடி வரிகள் வாரியத்தின் முன்னால் தலைவரான சுசில் சந்திரா தெரிவித்த தகவலின் படி பான் கார்டு வைத்திருப்பவரிகளின் எண்ணிக்கை சுமார் 42 கோடி ஆகும். இதில் பான் எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார 23 கோடி ஆகும். பான் எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைப்பது கட்டாயம் என்றும் இதன்மூலம் போலியான பான் எண்ணை[யும் வங்கிக்கணக்குகளையும் கண்டுபிடித்து அவற்றை ரத்து செய்யமுடியும் என்று அசோசெம் கூட்டத்தில் தெரிவித்தார்.