சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 3 ஆயிரத்து 196 ரூபாய்க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் 25 ஆயிரத்து 558 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழ்நிலை, உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த டிசம்பர் மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. டிசம்பர் 1ஆம் தேதி தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.23, 240 ஆக இருந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே காணப்பட்டது.
உச்சம் தொட்ட தங்கம்
கடந்த ஜனவரி 28ஆம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. அன்று சவரன் விலை ரூ.25,160-க்கு விற்கப்பட்டது. பிப்ரவரி 2ஆம் தேதி அதிகபட்சமாக ரூ.25,552-க்கு விற்பனையானது. அதன்பிறகு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. கடந்த 14ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.25,160க்கு விற்கப்பட்டது.
அதிகரிக்கும் தங்க விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் மீண்டும் உச்சத்தை தொட்டு பவுன் விலை ரூ. 25,384க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் அதிகரித்துள்ளது ஒரு கிராம் ரூ. 3196க்கும் ஒரு சவரன் ரூ25,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு
அமெரிக்காவில் அரசு துறைகள் முடங்கி பொருளாதாரம் கீழ் நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாகவும், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் இது அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தங்க நகைகள் மீது விருப்பம்
இந்தியர்கள் தங்க நகைகளை அணிவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். ஆணோ, பெண்ணோ தங்க நகைகளை அதிக அளவில் அணிகின்றனர். திருமணம் முடிந்து செல்லும் பெண்ணிற்கு தங்கத்தை சீதனமாக பெற்றோர் அளிக்கின்றனர். இது திருமண காலம் என்பதால் தங்க நகைகள் அதிக அளவில் வாங்குகின்றனர். இந்த நேரத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது தங்கம் வாங்குபவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.