சென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். வோடஃபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது.
இந்திய டெலிகாம் துறையைப் பொறுத்த வரையில் ஜியோவிற்கு முன் ஜியோவிற்கு பின் என்று கூறும் அளவிற்கு முன்னோடி நிறுவனமாக ஜியோ வளர்ந்து வருகிறது. தகவல் தொழில் நுட்பத்துறையில் ஜியோ நிறுவனம் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாக செல் போன்களில் இணைய வசதி மிகக்குறைந்த கட்டணத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.
இதன் காரணமாக வோடஃபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது ஜியோ டெலிகாம் நிறுவனம்.
வளர்ச்சி அதிகரிப்பு
கடந்த புதன்கிழமை வெளியான ட்ராய் அறிக்கையின் அடிப்படையில் 2018-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மட்டும் ஜியோ நிறுவனத்தோடு புதிதாக 85.6 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதன் மூலம் ஜியோ நிறுவனம் 28.01 வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. ட்ராய் அறிக்கையின் அடிப்படையில் ஜியோ நிறுவனத்தின் மாதாந்திர வளர்ச்சி 0.36 சதவிகிதமாக உள்ளது.
வோடபோன், ஐடியா
இதே 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தற்போது 41.87 கோடி ஆக உள்ளது. ஏர்டெல் நிறுவனம் 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 34.03 கோடி வாடிக்கையாளர்களுடன் உள்ளது.
நாடு முழுக்க இணைப்பு
பகுதிவாரியாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாடு முழுக்க தொடர்ந்து அதிகரித்து இருப்பதாக டிராய் அறிவித்திருக்கிறது. வடகிழக்கு தவிர மற்ற பகுதிகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமான வளர்ச்சி பெற்றிருந்தது. டிசம்பர் 2018 இல் மட்டும் 47.6 லட்சம் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையை பயன்படுத்தி இருக்கின்றனர் என டிராய் தெரிவித்துள்ளது.
கோடிகளில் அதிகரிப்பு
கடந்த அக்டோபர் மாதம் ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 25 கோடியை தாண்டி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் சராசரியாக வாடிக்கையாளர்கள் 11 ஜி.பி. டேட்டாக்களை பயன்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக மாதத்திற்கு 761 நிமிடங்கள் வரை வாடிக்கையாளர்கள் ஜியோ மூலம் பேசிக் கொள்வதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 3 மாதத்தில் மட்டும் 3 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் வருவாய்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கையின் படி மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 12.4 சதவிகிதம் அதிகம். வருடாந்திர அடிப்படையில் 50.9 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
நிகர லாபம் ரூ.831 கோடி
மூன்றாவது காலாண்டை பொருத்த வரை ஜியோவின் நிகர லாபம் ரூ.831 கோடியாகும். இது காலாண்டு வாக்கில் 22.1 சதவிகிதமும், வருடாந்திர அடிப்படையில் 65 சதவிகிதம் அதிகம் ஆகும். முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ஜியோவின் சேவை வருவாய் மட்டும் 12.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.12,252 கோடி ஈட்டியிருக்கிறது.