உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் எது..? Antonov An-225. முறையாக ஆறு இன் ஜின்களோடும், 88.5 மீட்டர் நீண்ட ரெக்கை களோடும் இந்த விமானத்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும்.
ஆனால் இந்த ரக விமானம் ஒன்றே ஒன்று தான் உலகில் உள்ளதாம். ரஷ்யா உடையாமல் சோவியத் யூனியனாக இருந்த காலத்திலேயே கட்டமைத்து விட்டார்கள்.
இந்த Antonov An-225 மக்கள் பயணத்துக்கு, வணிக பயன்பாடுகளுக்கு வருவதற்கு முன்பே சோவியத் யூனியன் பிரிந்து விட்டதால் மேற்கொண்டு Antonov An-225 உற்பத்தி செய்யப்படவில்லை.
ஆனால்
இன்று வரை அந்த ஒரு Antonov An-225 மட்டும் Antonov நிறுவனத்தின் ஹெவி சரக்குகளை கையாளும் விமானமாக இருந்து வருகிறது. இந்த Antonov நிறுவனம் யாராலும் கையாள முடியாத சரக்குகளை எல்லாம் கையாண்டு சரியாக டெலிவரி கொடுக்கும் நிறுவனம். அவர்களிடம் தான் இந்த Antonov An-225 விமானமும் இருக்கிறதாம்.
செல்லாது செல்லாது
எனவே இதை ஒரு பெரிய பயணிகள் விமானமாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆக எது உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் என்றால் Airbus A380. Airbus நெதர்லாந்தை தலைமை இடமாகக் கொண்டு பயணிகள் விமானத்தைத் தயாரிக்கக் கூடிய நிறுவனம். இதன் முக்கிய தொழிற்சாலைகள் எல்லாம் பிரான்ஸில் தான் இருக்கிறது. இந்த ஏர்பஸ் ஏ380 ரக விமானத்தை 2021-க்குப் பிறகு தயாரிக்கப் போவதில்லையாம். ஏன் உற்பத்தி நிறுத்தம்..? அதற்கு முன் ஏர்பஸ் ஏ380-ஐ பற்ரிக்கொஞ்சம் பார்ப்போம்.
ஏர்பஸ் ஏ380
டிசம்பர் 2000-ம் ஆண்டில் Airbus A380-க்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலையைத் தொடங்கினார்கள். ஏர்பஸ் திட்டப்படி இந்த Airbus A380-ல் 850 பயணிகள் பயணிக்கலாம். நான்கு அசுர இன்ஜின்களைக் கொண்ட ராட்சசன், இதன் போட்டி விமானமான போயிங் 757 இன் ஜின்களை விட 30% கூடுதல் சக்தி வாய்ந்த இன்ஜின்கள் கொண்ட இரண்டடுக்கு விமானத்தை கட்டமைத்தார்கள். அதோடு விமானத்தின் எடையைக் குறைக்க ஏகப்பட்ட காம்போசைட் மெட்டீரியல்களை புதிதாக உருவாக்கி அதனை மூலப் பொருளாக வைத்து விமானத்தைத் தயாரித்தார்கள்.
ஏர்பஸ் ஏ380
ஒரு தடவை தரையை விட்டு கிளம்பினால் தொடர்ந்து 13 மணி நேரம் அல்லது 14,500 கிலோமீட்டர் வரை தொடர்ந்து பறக்கும். நடுவில் எரிபொருள் நிரப்பத் தேவை இல்லை என புதிய உலக சாதனை படைத்தது. இன்றைய தேதி வரை உலகின் சிறந்த நேவிகேஷன் சிஸ்டங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அதிக பயணிகள் பயணிக்க கூடிய விமானமும் நம் Airbus A380 தானாம்.
சொகுசு விமானம்
Qatar Airways, Ethihad airways, Emirates airways என சொகுசு விமானங்களை அதிகம் பயன்படுத்தும் விமான நிறுவனங்கள் நம் ஏ380-க்குத் தான் டிக் அடித்திருக்கிறார்கள். இதுவரை சொன்ன 313 ஏ380 ஆர்டர்களில் 123 ஆர்டர்கள் எமிரேட்ஸ் நிறுவனதம் கொடுத்தது. அந்த அளவுக்கு சொகுசு அறைகள், பார்கள், உணவகங்கள், கெசினோக்கள் என பல வசதிகளோடு கூடிய விமானங்களில் ஏ380 ஈடு இணையற்றது.
இது தான்
இந்த Airbus A380 தான் உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமாக 2007-ல் இடம் பிடித்தது. முதலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு டெலிவரி கொடுத்தார்கள். 25 அக்டோபர் 2007 அன்று Airbus A380 தன் முதல் வணிக ரீதியிலான பயணத்தை மேற்கொண்டு உலக சாதனை படைத்தது. சரி இதை எல்லாம் யாரை முந்திக் கொண்டு முதல் இடம் பிடிக்க செய்தது..? போயிங் 747-ஐ காலி செய்யத் தான்..!
போட்டி
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் 1969-களிலேயே ஒரு ராட்சசத பறவையை உருவாக்கினார்கள். அதன் பெயர் போயிங் 747. இன்று வரை விமான போக்குவரத்து நிறுவனங்கள் போயிங் 747 ரக விமானங்களை ‘ஜம்போ ஜெட்' என செல்லம் கொஞ்சுவார்கள். இந்த விமானத்தில் அதிகபட்சமாக 660 பேர் பயணிக்கலாம். இந்த விமானத்தால் 13,450 கிலோமீட்டர் நிற்காமல் பறக்க முடியும். நடுவில் எரிபொருள் நிரப்பத் தேவை இல்லை. இந்த அமெரிக்க நிறுவன விமானம் குறிப்பாக போயிங் 747 தான் இந்தியா உட்பட பல்வேறு தனியார் மற்றும் அரசு விமான நிறுவனங்களின் ஃபேவரெட் விமானம்.
ஏன் போயிங் 747..?
இந்த பயணிகள் விமானத்தை சில மணி நேரங்களில் சரக்கு விமானமாக மாற்றிக் கொள்ளலாம். அதோடு உலகம் முழுக்க இந்த விமானத்தை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு நம்பகமானது. ஒரு ரக விமானம் என்றால் அதிகபட்சம் 500 விமானங்கள் விற்றாலேயே பெரிய விஷயம். ஆனால் போயிங் 747 ரக விமானங்கள் 1970 தொடங்கி இன்று வரை சுமார் 1550 விமானங்களை விற்று இருக்கிறார்கள்.
உலக சாதனை
இன்னும் கையில் இருக்கும் ஆர்டர்களுக்கு போயிங் 747 உற்பத்தி செய்யப்படுகிறது. உலகிலேயே 1500-க்கும் மேற்பட்ட, ஒரே ரக விமானங்கள் இன்று வரை விற்பனை ஆகி வருவதும் இந்த போயிங் 747 ரக விமானங்கள் மட்டும் தான். கையாளும் திறன், performance, விமான எரிபொருளான Air turbine Fuel-ல் சிக்கனம், ஒரே விமானத்தில் சரக்குகளோடு பயணிகளையும் போதுமான அளவுக்கு ஏற்றிக் கொள்ளக் கூடிய தேவையான பிரமாண்ட வடிவமைப்பு எல்லாம் தான் போயிங் 747-ஐ ஒரு சூப்பர் ஸ்டாராக வைத்திருக்கிறது.
அதனால் தான் ஏர்பஸ் ஏ380
1970-ல் இருந்து போயிங் சம்பாதித்து வைத்திருக்கும் பெயரை காலி செய்து சந்தையில் தன் பெயரை நிலை நாட்டிக் கொள்ளத் தான் ஏர்பஸ் தன்னுடைய ஏ380 மாடலுக்கு உயிர் கொடுத்தது. அந்த முயற்சியில் தாங்கள் தோற்றுவிட்டதை தெரிந்து கொண்டது ஏர்பஸ். இனி ஏ380-க்கான ஆர்டர்கள் வாங்கப்படாது, உற்பத்தியை நிறுத்த இருக்கிறது ஏர்பஸ் நிறுவனம்.
ஏன் நிறுத்தம்
ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு ஒரு குறைந்த பட்ச தேவை வேண்டும். அப்போது தான் ஒரு நிறுவனம் ஒரு பொருளை தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டே இருக்க முடியும். ஆனால் ஏ380 ரக விமானத்துக்கான தேவை நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. 2007-ல் தொடங்கிய ஏ380-ன் உற்பத்தி 2012 - 13 காலங்களில் ஆண்டுக்கு 30 விமானம் என வந்தது தான் மிகப் பெரிய ஆர்டர்களாம். அதன் பின் போதுமான ஆர்டர்கள் வரவில்லையாம்.
ஏன் நிறுத்தம் - எவ்வளவு உற்பத்தி
இன்று வரை (2007 முதல் 2018 வரையான 12 ஆண்டுகளில்) மொத்தம் 313 ஏ380 ரக விமானம் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 234 டெலிவரி கொடுத்துவிட்டார்கள். மீதமுள்ள 79 ஏ380 ரக விமானங்களை டெலிவரி கொடுத்துவிட்டு கடையை சாத்த இருக்கிறது ஏர்பஸ்.
ஏன் நிறுத்தம் - லாப நஷ்டம்
ஏற்கனவே சொன்னது போல தொடர்ந்து ஒரு பொருளுக்கான தேவை இருந்து கொண்டே இருந்தால் தான் உற்பத்தி செய்பவருக்கு உற்பத்திக் காசு கட்டுப் படி ஆகி லாபத்தைக் கொடுக்கும். ஆனால் ஏ 380-க்கான ஆர்டர்கள் ஒரு பக்கம் குறைந்த கொண்டே வந்ததால், ஏ380-ன் உற்பத்தி விலை அதிகரித்து லாப வரம்பைக் குறைத்துவிட்டது. எனவே லாபம் தராத அதிக வேலை வாங்கக் கூடிய ஏ380 ரக விமானங்களை 2021-க்குப் பிறகு தயாரிக்கப் போவதில்லை என முடிவு செய்திருக்கிறது ஏர்பஸ் நிறுவனம்.
ஏன் நிறுத்தம் - பொருளாதார வீழ்ச்சி
ஏர்பஸ் நிறுவனம் 2007-ம் ஆண்டில் தன் முதல் பயணத்தைத் தொடங்கும் முன் அடுத்த 20 வருடங்களில் விமானப் பயணிகளின் வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரித்திருக்கும் என கணித்திருந்தது. அதனால் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலான ஏ380 ரக விமானங்கள் 2027-ம் ஆண்டுக்குள் 1,200 விமானங்களுக்கான ஆர்டர்களாவது கிடைக்குமென பெருமிதப்பட்டது. ஆனால் 2008 வீழ்ச்சி காரணமாக உலக பொருளாதாரமே மந்த நிலைக்கு சென்றுவிட்டது. அதனால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2012 - 13 நிதி ஆண்டு வரை எதிர்பார்த்த அளவுக்கு வளரவில்லை. இப்போது வரை மிக சீராகவே விமான பயணிகளின் வளர்ச்சி இருப்பதால் ஆர்டர்கள் கிடைக்கவில்லையாம்.
ஏன் நிறுத்தம் - நிரம்பாத விமானம்
அதோடு ஏர்பஸ் ஏ380 போன்ற மிகப் பெரிய விமானங்களில் குறைந்தபட்சம் 80% இருக்கைகளாவது நிரம்பினால் தான் அந்த பயணத்துக்கான செலவையாவது ஈடு செய்ய முடியும். ஆனால் ஏ380-ன் அதிகப்படியான கொள்ளளவு காரணமாக அந்த 80% இருக்கைகளை நிரப்புவதற்கே திணற வேண்டி இருக்கிறதாம். அதனால் ஏ380 ஓடும் வழித் தடங்களில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் விமான நிறுவனங்களும் ஏ380-ஐத் தவிர்த்து விட்டார்கள்.
ஏன் நிறுத்தம் - எரிபொருள் செலவு
ஏர்பஸ் ஏ380 ரக விமானத்தின் நான்கு இன்ஜின்களும் அதிக சக்தி கொண்டது என்பதால் விமான எரிபொருளையும் அதிகம் குடித்தது. எதிர்பார்த்த அளவுக்கு மைலேஜ் கொடுக்கவில்லை. பொதுவாக விமான நிறுவனங்களின் மிகப் பெரிய செலவே இந்த ATF - Air Turbine Fuel தான். கிட்டதட்ட ஒரு ட்ரிப்பில் கிடைக்கும் மொத்த பணத்தில் 60 - 75 சதவிகிதம் வரை விமான எரிபொருளுக்கே செலவழிக்க வேண்டி இருக்குமாம். இப்படி நேரடியாக எரிபொருள் செலவையே நேரடியாக கூட்டி விடும் ஏ380 ரக விமானத்தை யார் வாங்குவார்கள். தவிர்க்கத் தானே செய்வார்கள்.
டாம் எண்டர்ஸ்
"எங்கள் அன்புக்குரிய நான்கு இன்ஜின்கள் கொண்ட ஏர்பஸ் ஏ380 வரும் 2021 உடன் உற்பத்தி செய்யப்படாது" சமீபத்தில் தான் வருத்தத்தோடு பத்திரிகையாளர்கள் மத்தியில் சொல்லி இருக்கிறார். அதோடு "எங்கள் ஏர்பஸ் ஏ80 திட்டத்தை ஒரு 10 வருடங்கள் முன்னாலேயே கொண்டு வந்திருந்தால் 2008 பொருளாதார பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படாமல் தப்பி இன்று போயிங் 747 போல ஒரு முத்திரை பதித்திருப்போம்" எனவும் தங்கள் தவறுகளைச் சொன்னார். இப்படி ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் கலங்கிக் கொண்டிருக்க சந்தை வல்லுநர்களோ வேறு மாதிரியான அபிப்பிராயங்களோடு இருக்கிறார்கள்.
சந்தை வல்லுநர்கள்
ஏ380 போன்ற சொகுசு விமானம் உலகில் வேறு எங்கும் கிடையாது. ஆக எங்களைப் பொறுத்த வரை ஏர்பஸ் ஏ380 10 அல்லது 20 வருடங்களுக்குப் பின் தேவைப்படக் கூடிய விமானம் எனவும் சொல்லி இருக்கிறார்கள். எது எப்படியோ இனி ஏர்பஸே380 கிடையாது என்பது கொஞ்சம் வருத்தம் தான்..!