சென்னை: என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.23000 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் மின் உற்பத்தி திறன் அதிகரிப்பதோடு லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 1956ஆம் ஆண்டில் கட்டப்பட்டது தான் என்எல்சி நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் (Neyveli Lignite Corporation Ltd). இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும், தமிழகத்தில் உள்ளதால், இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின் உற்பத்தியில் 47 சதவிகிதம் அதாவது 1167 மெகாவாட் மின்சாரம் தமிழகத்தின் மின் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தின் தேவை போக மீதமுள்ள மின் உற்பத்தியை அண்டை மாநிலங்களான புதுவை, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை கல்பாக்கம் (அணு மின்நிலையம்) எண்ணூர் மற்றும் தூத்துக்குடி (அனல் மின் நிலையம்)யில் இருந்தாலும் தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில் என்எல்சி தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறப்பான நிர்வாகத் திறமை, உற்பத்தித்திறன், லாபம் மற்றும் வரிக்கு பிந்தைய நிகர லாபம் ஆகியவற்றுக்காக, மத்திய அரசின் நவரத்தின விருதைப் பெற்று இருந்தாலும், பிற மாநிலங்களில் உள்ள என்எல்சி நிறுவனங்களின் விரிவாக்கத்திற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு தன் கைவசம் உள்ள என்எல்சியின் பங்குகளில் 10 சதவிகிதத்தை பொதுச் சந்தையில் விற்க முன்வந்தது.
என்எல்சியின் பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து, தமிழக அரசே அந்த பங்குகளை வாங்கிக்கொள்ளும் என்று அறிவித்து அதை செய்தும் காட்டினார். அப்போது அவர் துணிச்சலாக வாங்கிய பங்குகள் தற்போது தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் லாபத்தை அளித்து வருகின்றது.
இத்தனை சிறப்புகள் கொண்ட என்எல்சி நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.23000 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் மின் உற்பத்தி திறன் அதிகரிப்பதோடு லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தின் என்எல்சி நிறுவனம் மின் உற்பத்தியின் தங்க மகுடமாக (Golden Crown) இருந்து வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலும் என்எல்சி நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. அதனால் என்எல்சி உற்பத்திய செய்யும் மின்சாரத்தின் விலை ரூ.4.60 பைசாவாக இருந்தது. அதுவே கடந்த 4 ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சி பெற்று மின் உற்பத்தித் திறன் 80 சதவிகிதம் அதிகரித்தது. அதனால் என்எல்சியின் மின்சாரத்தை இப்போது ரூ.3.72பைசாவாவுக்கு விற்பனை செய்ய முடிகிறது. மக்களுக்கும் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கமுடிகிறது, என்றார்.
என்எல்சி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டப பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. என்எல்சியின் மின் உற்பத்தி திறன் அதிகரிப்பால் மேலும் அதிகரிக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.23000 கோடியை முதலீடு செய்ய என்எல்சி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மின் உற்பத்தித் திறனை 2700 மெகா வாட்'ல் இருந்து 4768 மெகா வாட் ஆக அதிகரிக்க முடியும். கூடவே தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திடவும் முடியும் என்றார். மேலும் அவர், என்எல்சி நிறுவனம், சென்னைக்கு நாள்தோறும் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. அதனை 90 மில்லியன் லிட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.