டெல்லி: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து உலக நாடுகள் பல பாகிஸ்தானை ஒதுக்கத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் வழங்கி வந்த ஐரோப்பிய யூனியன் ஒன்றியமும், தற்போது சற்று மாற்றி யோசிக்கத் தொடங்கி உள்ளது. இலங்கை, ஆப்கன், ஈரான், ஈராக், சிரியா, நைஜீரியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளைப் போல பாகிஸ்தானையும் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் சேர்த்து 'Dirty Money’ என்று ஒதுக்கத் தொடங்கி உள்ளது.
பாகிஸ்தானால் இனிமேல் சர்வதேச அளவிலும் எந்த விதமான நிதி உதவியையும் பெற முடியாது. அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. இது ஒரு பக்கம் இருந்தாலும் பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கும் இது ஒரு பேரிடியாக அமைந்துவிட்டது. வர்த்தகர்கள் தங்களுக்கு தேவையான நிதியையும் சர்வதேச அளவில் எதிர்பார்க்க முடியாது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகமும் கடும் பாதிப்படையும்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா என்ற இடத்தில் இந்திய ராணுவ வாகனத்தின் மீது நடைபெற்ற கொடூரமான மனிதத் தன்மையற்ற தாக்குதலில் 41 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. ஆனால் பாகிஸ்தானின் கூட்டாளியான சீனா மட்டும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. சவுதி அரேபியாவும் பெரிதாக எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டவில்லை.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள்
தீவிரவாத தாக்குதலை நடத்தியது நாங்கள் தான் என்று ஜெய்ஸ்-ஈ-முகம்மது இயக்கமே ஒப்புக்கொண்ட பின்னரும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஓஹோ அப்படியா, அவர்கள்தான் தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கான ஆவணங்களை எங்களிடம் தாருங்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஃபிலிம் காட்டி வெறுப்பேற்றினார். அனைத்து நாடுகளின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக ஜெய்ஸ்-ஈ-முகம்மது இயக்கத்தை முடக்கி வைத்திருப்பதாக சமாளித்தார்.
தீவிரவாதிகளுக்குப் பயிற்சி
தீவிரவாத தாக்குதலை நடத்திய ஜெய்ஸ்-ஈ-முகம்மது இயக்கம் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. பாகிஸ்தான் ஆட்சியாளர்களே இந்த இயக்கத்திற்கு நிதி முதல் பயிற்சி வரை அனைத்தையும் முன்னின்று செய்து கொடுப்பதை அனைத்து நாடுகளும் அறிந்ததே. புல்வாமா தாக்குதலுக்கு முதலிலேயே கடும் கண்டனங்களை தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாக் தன்னுடைய நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாத முகாம்களை ஒழித்துகட்டவேண்டும். இல்லை என்றால் அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும் என்று எச்சரித்தார்.
புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம்
இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவும் கொடூர தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்ததோடு, இதற்கு சரியான தீர்வு ராணுவ நடவடிக்கையே என்றும், இந்தியா கேட்கும் எந்த உதவியையும் எந்த நேரமும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தது. ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளும் புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை எழுப்பின. இவ்விஷயத்தில் தாங்கள் இந்தியாவின் பக்கம்தான் என்று தோள் கொடுத்தன.
பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தம்
பாகிஸ்தானுக்கு கிற்கு நிதி உதவி அளித்து வளர்த்து வந்த ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியனும் தற்போது ஒதுக்கி வைத்துள்ளது. தாங்கள் அளிக்கும் நிதி உதவியை தீவிரவாதிகளுக்கு தாரை வார்ப்பது, தீவிரவாதிகளை வளர்த்து விடுவது மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தல், மிக மோசமான நிதி நிலைமை, மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது போன்றவற்றை உள்ளடக்கிய நாடுகளை Dirty-Money என்று ஒதுக்கி வைப்பது ஐரோப்பிய நாடுகளின் வழக்கம்.
நிதி உதவி நிறுத்தம்
Dirty-Money பட்டியலில் ஏற்கனவே ஆப்கன், இலங்கை, சிரியா, ஈரான், ஈராக், லிபியா, நைஜீரியா உள்ளிட்ட 21 நாடுகள் உள்ளன. மேற்கண்ட நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் நிதி உதவி அளிப்பதை நிறுத்தி விட்டன. தற்போது பாகிஸ்தானையும் அந்த கருப்பு பட்டியலில் சேர்த்து விட்டது. Dirty Money பட்டியலில் சேர்த்துவிட்டதால், பாகிஸ்தான் இனிமேல் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் எந்தவிதமான ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்ற படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுவிடும்.
தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு
இதுபற்றி தெளிவாக விளக்கிய ஐரோப்பிய யூனியனின் நீதிபதியும் நுகர்வோர் மற்றும் பாலின சமத்துவத்திற்கான ஆணையர் வேரா ஜரோவா, தீவிரவாதம் மற்றும் மோசமான பணப் பரிமாற்றங்களுக்கு எதிராக நாங்கள் வலுவான கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளோம். ஆனாலும், மற்ற நாடுகளில் இருந்து முறைகேடான வழியில் எங்களின் ஐரோப்பிய யூனியனுக்குள் புகுந்து நிதிச் சிக்கலை ஏற்படுத்தி விடாமல் தடுத்து கட்டுப்படுத்துவது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், என்றார்.
பொருளாதார வளர்ச்சி பாதிப்பு
ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இனிமேல் பாகிஸ்தானுடன் வர்த்தக உறவுகளை மேற்கொள்ள முடியாது. ஏற்கனவே பாகிஸ்தானில் நிதி நிலைமையோ படு மோசம். பொருளாதார வளர்ச்சியோ சுத்தமாக அடியோடு காணாமல் போய்விட்டது. இப்போது கருப்பு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுவிட்டதால் பாகிஸ்தானின் நிலைமை படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டது போல் ஆகிவிட்டது.
வர்த்தகம் பாதிப்பு
பாகிஸ்தானால் இனிமேல் சர்வதேச அளவிலும் எந்த விதமான நிதி உதவியையும் பெற முடியாது. அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. இது ஒரு பக்கம் இருந்தாலும் பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கும் இது ஒரு பேரிடியாக அமைந்துவிட்டது. வர்த்தகர்கள் தங்களுக்கு தேவையான நிதியையும் சர்வதேச அளவில் எதிர்பார்க்க முடியாது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகமும் கடும் பாதிப்படையும்.
மசோதா தாக்கல்
பாகிஸ்தானை உள்ளடக்கிய 22 நாடுகளை தனிமைப்படுத்தும் Dirty Money பட்டியல் மீதான மசோதா இதுவரையிலும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு மசாதா நிறைவேற்றப்பட்டால் தான் பாகிஸ்தானுக்கு அளிக்கும் உதவிகளை நிறுத்த முடியும். ஏனெனில் ஐரோப்பிய யூனியன் ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகள் Dirty Money மசோதா தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.