சென்னை: சர்வதேச தரத்திலான அதி நவீன சொகுசு ரயில் சென்னை மதுரை இடையே நாளை முதல் ஓடப்போகிறது.
இன்று கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதைத் தொடங்கி வைத்தார்.
இந்த ரயிலில் ஆறரை மணிநேரத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு வரலாம்.
அழகு சொகுசு
தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெயருக்கு ஏற்றார் போல அழகிய வடிவமைப்பு, அசத்தலான சீட்கள் என விமானத்தில் பயணம் செய்யும் உணர்வை பயணிகளுக்கு அளிக்கப்போகிறது இந்த ரயில். சென்னை - மதுரைக்கு சேர் கார் பெட்டிகளில் 895 ரூபாயும் முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்கு 1,940 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை டு மதுரை
22671 எண் கொண்ட தேஜஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரை வந்தடையும். 22672 மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். வாரம் 6 நாட்கள் ஓடும் இந்த ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
அதி நவீன வசதிகள்
சர்வேதேச தரத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தேஜஸ் ரயிலில் எப்ஆர்பி தகடுகளால் ஆன அழகிய உட்புறத் தோற்றத்துடன் சொகுசாக அமர்ந்து பயணம் செய்ய வசதியாக இருக்கைகளும் உள்ளன. மொத்தம் 15 பெட்டிகள் உள்ள இந்த ரயிலில் ஒரு உயர்வகுப்பு பெட்டியும், 2 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் அடங்கும்.
அழகிய வடிவமைப்பு
ஒவ்வொரு சீட்டின் பின்புறமும் சிறிய வீடியோ திரைகள், ஆட்டோமேடிக் டீ, காபி இயந்திரங்கள், ஜிபிஎஸ் வசதி, எல்ஈடி விளக்குகள், பெட்டியின் உட்புறமும் வெளிப்புறமும் ஆட்டோமேடிக் கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள், செல்போன் சார்ஜர் வசதி, கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்ஈடி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள் உயர் வகுப்பு பெட்டியில் 56 பேரும், சேர் கார் வசதி கொண்ட பெட்டிகளில் தலா 78 பேரும் பயணிக்கலாம்.
ஒரு நாள் ரெஸ்ட்
சென்னை மதுரை இடையே ரயில் பாதையில் ஓடப்போகும் இந்த ரயிலில் வியாழக்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களுக்கு பயணம் செய்யலாம். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயிலில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் செல்ல முடியும்.
திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
கட்டணம் நிர்ணயம்
சென்னை - திருச்சிக்கு ஏசி வசதிகொண்ட அமரும் வசதி கொண்டபெட்டிகளில் (சேர் கார்) ரூ.690,முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்குரூ.1,485 கட்டணமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. சென்னை - மதுரைக்கு சேர் கார் பெட்டிகளில் ரூ.895, முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்கு ரூ.1,940 எனவும், இதுதவிர, உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால், கட்டணம் மேலும் ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரிக்கும். சாதாரண ரயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சிகள், எலிகள், கொசுக்களுடன் பயணிக்கும் சாமான்ய மக்களுக்கு இது ரொம்பவே காஸ்ட்லியான சமாச்சாரம்தான். கட்டணத்தை கொஞ்சம் குறைத்தால் ஆண்டுக்கு ஒருமுறையாவது சாமான்ய மக்களும் இந்த ரயிலில் பயணிப்பார்கள்.