கடந்த 2018-ல் சீனா மீதான வெறுப்பைக் காட்ட, அமெரிக்கா நேரடியாக சீன பொருட்கள் மீதான இறக்குமதிகளுக்கு 10% கூடுதல் வரி விதித்தது.
அதோடும் வரும் மார் 2019 -க்குள் சீனா பொருட்கள் மீது 10-ஆக இருக்கும் கூடுதல் வரியை 25 சதவிகிதமாக அதிகரிக்க இருப்பதாகவும் சொன்னது. ஆனால் இப்போது அமெரிக்காவே ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறது.
அமெரிக்காவின் சர்ச்சை மற்றும் சுவர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவுடனான வர்த்தகப் போர் தணிப்பின் அடையாளமாக ஒரு ட்விஸ்ட் செய்திருக்கிறார். அந்த ட்விஸ்ட் டொனால்ட் ட்ரம்பின் ட்விட் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது
அமெரிக்கா வேண்டு கோள்
"அமெரிக்க விவசாயப் பொருட்கள் (மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி உட்பட) மீதான கூடுதல் வரிகளை உடனடியாக விலக்குமாறு சீனாவிடம் கேட்டிருக்கிறேன். இதுரவையான வர்த்தகப் பேச்சுகள் சிறப்பாக போய் கொண்டிருப்பதால் இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறேன்" என ட்விட்டி இருக்கிறார்.
சீனா தரப்புக்கு சாதகம்
தன்னுடைய இரண்டாவது ட்விட்டல் "சீனாவின் மீது விதித்திருந்த 10 சதவிகித கூடுதல் வரியை 25 சதவிகிதமாகவும் உயர்த்தமாட்டேன். இது எங்கள் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம்" எனவும் டிவிட்டி இருக்கிறார். அதோடு அமெரிக்காவில் இருந்து சீனா இறக்குமதி செய்யும் எத்தனாலுக்கு முதலில் இறக்குமதி வரியைக் குறைக்குமாறும் அமெரிக்கா தனி கோரிக்கை வைத்திருக்கிறதாம்.
என்ன சொல்கிறது சீனா
அமெரிக்கா, சீன இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்காமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது எனவும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு அமெரிக்க இறக்குமதியின் மீதும் விதித்த வரிகளை நீக்கவில்லை.
வரலாறு
அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் வரி விதித்தது. 'உலக வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தகப் போரை' அமெரிக்கா தொடங்கியுள்ளது என குற்றம் சாட்டியது சீனா.
அமெரிக்காவுக்கு பதிலடி
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சீனாவில் இறக்குமதி செய்யப்படும் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படு 85 சதவிகிதம் பொருட்களுக்கு பொருந்தியது.
அமெரிக்கா மிரட்டல்
சீனா, அமெரிக்க பொருட்கள் மீது தாக்குவதைப் பார்த்த உடன் "267 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீதும் இந்த 10 சதவிகித வரி விதிக்கப்படும்" என மிரட்டியது. அமெரிக்கா கூடுதலாக விதிக்கும் வரிக்கு சமமாக சீனாவும் அமெரிக்க இறக்குமதிகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என மிரட்டியது.
சமூக வலைதளத்தில் ட்ரம்ப்
மிரட்டலை ஒரு தினுசாக விட, சீனா மீது கூடுதல் வரி விதித்த பின்
"அமெரிக்காவின் கருவூலத்துக்கு நிறைய பணம் வரப் போகிறது" என டிவிட்டரில் சொன்னார் ட்ரம்ப். அதற்கு எல்லாம் சீனா பயப்படவில்லை.
அமெரிக்க சீன சந்திப்பு
சமீபத்தில் வாஷிங்டனில் நடந்த வர்த்தக மாநாட்டுக்கு பிறகு, புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இறுதி செய்வதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கடந்த மாதம் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் ஃபுளோரிடாவில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இப்படி எல்லாவற்றையுமே ட்ரம்பே தொடங்கி ட்ரம்பே முடிக்கிறார்.
ஐஎம்எஃப் கருத்து
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் சர்வதேச சந்தைகளின் மீதும் தாக்கம் செலுத்தியது. இந்த வர்த்தகப் போரால் உலகம் ஏழைகளுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறி வருகிறது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்தது.