டெல்லி: பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 97,247 கோடியாக சரிவடைந்துள்ளது. பிப்ரவரி மாதம் மொத்தமாக 73.48 லட்சம் வணிகர்கள் வரி தாக்கல் செய்துள்ளனர். அதன் மொத்த ஜிஎஸ்டி வசூல் 97,247 கோடி ரூபாய். 2018-19 ஆம் நிதி ஆண்டில் இதுவரை 10.70 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மையான பொருட்களுக்கு வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் அதிருப்தி தெரிவித்தனர். வாட் வரி விதிப்பில் வரி இல்லாத பொருட்கள் மற்றும் குறைந்த வரி விகிதங்களாக இருந்த பொருட்களுக்கு எல்லாம் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையும் உயரும் என்பதால், ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் வாட் வரி விதிப்பில் இருந்தது போல், வரி விகிதங்களை குறைக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் அனைவரின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைத்தும் பூஜ்ஜியம் சதவிகிதமாகவும் மாற்றி உத்தரவிட்டார்.
வீடுகளுக்கான ஜிஎஸ்டி விகிதமும் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் வசூலான வரித்தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி வசூல் ஜனவரி மாதம் 1.02 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் பிப்ரவரி மாதம் 97,247 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஜிஎஸ்டி வசூல் 17,626 கோடி ரூபாய். மாநில ஜிஎஸ்டி வசூல் 24,192 கோடி ரூபாய், ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூல் 46,953 கோடி ரூபாய், செஸ் வரி 8,476 கோடி ரூபாய் என்றும் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018-19ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரியாக சுமார் 12.9 லட்சம் கோடி ரூபாய் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மாதாந்திர சராசரியாக சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிடப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் (2018-2019) இதுவரை 10.70 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.03 லட்சம் கோடி, மே மாதம் ரூ.94,016 கோடி, ஜூன் மாதம் ரூ.95,610 கோடி, ஜூலை மாதம் ரூ.96,483 கோடி, ஆகஸ்ட் மாதம் ரூ.93,960 கோடி, செப்டம்பர் மாதம் ரூ.94,442 கோடி, அக்டோபர் மாதம் ரூ.100,710 கோடி, நவம்பர் மாதம் ரூ.97,637 கோடி, டிசம்பரில் ரூ. 94,726 கோடி வசூலாகியுள்ளது. ஜனவரி மாதம் 1.02 லட்சம் கோடி வசூலானது.
மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டின் ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கை 13.71 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 11.47 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது.
2019-2020 நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி வசூல் இலக்கை 13.71 லட்சம் கோடி ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.