டெல்லி: நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் 10 மாத காலத்தில் சுமார் ரூ.20000 கோடி வரையிலும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக உறுதியாகத் தெரிய வந்துள்ளது. புலனாய்வுப் பிரிவின் தீவிர விசாரணைக்கு பின்பு, ஜிஎஸ்டி வரி முறைகேடு செய்தவரிகளிடம் இருந்து சுமார் ரூ,10000 கோடி வரையிலும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில் எல்லாம் புதிதாக ஒரு சட்டம் போட்டாலும் அல்லது கண்டுபிடிப்பு நடந்தாலும், அதை அனைவரும் ஒழுங்காக மதித்து நடப்பதும், கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதும் நடைமுறை. வெகு சிலர் மட்டுமே சட்டத்தை மீறி நடப்பது உண்டு. ஆனால் நம் நாட்டிலோ நிலைமை தலைகீழ்தான். அரசுகள் என்ன சட்டம் கொண்டு வந்தாலும், அதை மதித்து நடப்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கு பாதி பேர்தான்.
சில கருப்பு ஆடுகள் சட்டத்தை மதிக்காமல் எதிர்வாதம் செய்வதும் (அதெப்படி எங்களை கேட்காமல் சட்டம் கொண்டு வரலாம்) புதிதாக ஏதாவது கண்டுபிடிப்பு நடந்தாலும், அதற்கு போலிகளை கண்டுபிடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். அந்த விஷயத்தில் நம்மவர்கள் கில்லாடிகள்தான். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையிலும் அதுதான் நடக்கின்றது.
ஜிஎஸ்டி வரி அமல்
பலமுனை வரிகளால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை என்ற காரணத்தினால்தான், விற்பனை வரி, கலால் வரி, சுங்க வரி, நுழைவு வரி என பல தரப்பட்ட வரிகளையும் ஒழித்துவிட்டு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை. 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு விதமான வரி விகிதமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு
ஜிஎஸ்டி வரி முறை நடைமுறைப்படுத்தப்பட்ட துவக்கத்தில் பல பொருட்களுக்கான வரி விகிதங்கள் அதிகப்படியா இருந்ததை பின்னர் பிரதி மாதமும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு படிப்படியாக வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. மேலும் சில நடைமுறை சிக்கல்கள் எழுந்தாலும், பின்னர் அவை சரிசெய்யப்பட்டு மாதம் தோறும் வரி வசூல் பாராட்டும் படி இருந்து வந்தது. இருந்தாலும் மத்திய அரசுக்கு ஏதோ பொறி தட்டியது. வரி வசூலில் எங்கேயோ மோசடி நடப்பதாக மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் புலனாய்வு (Investigation) பிரிவிற்கு தகவல் எட்டியதும் உடனடியாக விசாரணையில் இறங்கியது.
ரூ. 20000 கோடி வரி ஏய்ப்பு
மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணயில் நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் 10 மாத காலத்தில் சுமார் ரூ.20000 கோடி வரையிலும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக உறுதியாகத் தெரிய வந்துள்ளது. புலனாய்வுப் பிரிவின் தீவிர விசாரணைக்கு பின்பு, ஜிஎஸ்டி வரி முறைகேடு செய்தவரிகளிடம் இருந்து சுமார் ரூ,10000 கோடி வரையிலும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடவடிக்கை
வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரில் 5 முதல் 10 சதவிகிதத்தனரே கருப்பு ஆடுகளாக உள்ளனர். இவர்களின் நடவடிக்கையால் தான் ஒட்டுமொத்த தொழில் துறைக்கும் அவப் பெயர் ஏற்படுகிறது. கருப்பு ஆடுகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வரி விதிப்பு முறை ஒழுங்காக நடைபெறுவதை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
போலி ரசீது
இது குறித்து விளக்கிய மத்திய மறைமுக வரிகள் மற்றுத் சுங்கத் துறையின் (Central Boad of Indirect Taxes and Customs) உறுப்பினர் (Investigation) ஜான் ஜோசப், போலியாக விலைப்பட்டியல்களையும் (Fake Invoice) போலி ரசீதுகளையும் (Duplicate Bill) பயன்படுத்தி அதன் மூலம் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான கடந்த 10 மாதங்களில் சுமார் ரூ.1500 கோடி வரையிலும் விற்பனை நடைபெற்றுள்ளது. அதன்மூலம் சுமார் ரூ, 75 கோடி வரையிலும் ஜிஎஸ்டி வரி பெறப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். போலியான விலைப்பட்டியல்கள் மூலம் பெறப்பட்ட ஜிஎஸ்டி வரியில் உடனடியாக சுமார் ரூ.25 கோடி மீட்கப்பட்டுள்ளது. மீதித் தொகையும் வசூல் செய்யும் நடவடிக்கையில் ஜிஎஸ்டி வரித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், என்று தெரிவித்தார்.
மலிவு விலை வீடுகள்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இந்த வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், மலிவு விலையில் கட்டப்பட்ட வீடுகளுக்கும் முன்னர் இருந்த 12 மற்றும் 8 சதவிகித வரி விகிதங்களை முறையே 5 மற்றும் 1 சதவிகிமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இருந்தாலும் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்களான இரும்புக் கம்பிகள், சிமெண்ட் கொள்முதல் செய்த வகையில் செலுத்திய கொள்முதல் வரியான உள்ளீட்டு வரியை (Input tax credit) திரும்ப பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டுமானத்துறையினர் பாதிப்பு
உள்ளீட்டு வரியை திரும்ப பெற முடியாததால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மலிவு விலை வீடுகளை விற்பனை செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் மூலப்பொருட்களுக்கான உள்ளீட்டு வரியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கட்டுமானத் துறையினரிடம் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது குறித்து ஆலோசிப்பதற்காக அந்தத் துறையின் பிரதிநிதிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றும் மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறையின் உறுப்பினர் ஜான் ஜோசப் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி எளிமை
இதுவரையிலும் 1.2 கோடி நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை மேலும் எளிமைப்படுத்தப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். வரி விகிதங்களை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.