தில்லி: இப்போது தான் புல்வாமா பிரச்னையில் இருந்து கொஞ்சம் வெளியே வந்திருக்கிறோம். ஆனால் அதற்குள் இந்தியாவை நோக்கி அடுத்த குண்டு விழுந்திருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் அரசு வங்கிகள் (Public Sector Banks), தனியார் வங்கிகள் (Private Sector Banks), வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (Non Banking Financial Corporations) என பல்வேறு நிதி நிறுவனங்களின் நிதி நிலைகளை ஆராய்ந்திருக்கிறது.
அதாவது கடன் கொடுப்பதை முக்கிய தொழிலாகக் கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டது. இந்த கணிப்பில், இந்தியாவில் இருக்கும் நிதி நிறுவனங்களின் (கடன் கொடுக்கும்) வாராக் கடன்கள் டிசம்பர் 2018 கணக்குப் படி 14 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறது. பின்ன மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களுக்கு கடன் கொடுத்தால் என்ன ஆவது..?
சர்வதேச அறிக்கை
ப்ளூம்பெர்க் தன்னுடைய அறிக்கையில் இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளுக்கு 210 பில்லியன் டாலர் Stressed Asset இருப்பது மொத்த வங்கிச் சூழலையே கேள்விக் குறி ஆக்கி விடும். எனவே இந்த Stressed Asset-களை மீட்கச் அதிரடியாக திட்டமிடுவது தான் இந்தியாவுக்கு நல்லது என அலறி இருக்கிறது.
ஸ்ட்ரெஸ்ஸுடு அஸேட் என்றால்..?
ஒரு வங்கியில் வாராக் கடன் என்று அழைக்கப்படும் NPA தொகை, கடன் மறு சீரமைப்புத் திட்டம் மூலம் மாற்றியக் கடன் தொகை Restructured loan, Written off Assets என்று சொல்லப்படும், இனிமேல் எப்படியும் இந்த கடன்கள் திரும்ப வரவே வராது என்று சொல்லி தண்ணீர் தெளித்த சொத்துக்கள். இந்த மூன்றையும் கூட்டினால் கிடைப்பது தான் இந்த Stressed Asset.
வாராக் கடன்கள் என்றால்..?
Non Performing Asset என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒருவர் வாங்கிய கடனுக்கான வட்டியோ, அசலோ 90 நாட்களுக்குத் தொடர்ந்து கட்டவில்லை என்றால் அந்த கடனை என்பிஏ என்று வங்கிகள் கட்டாயமாக அறிவித்து விட வேண்டும். அப்படி இந்திய வங்கிகளுக்கு மட்டும் இருக்கும் வாராக் கடன் சொத்துக்கள் சுமார் 2.32 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறதாம். ரகுராம் ராஜன் மற்ரும் உர்ஜித் படேல் காலங்களில் ஆர்பிஐ சிறப்பாக செயல்பட்டு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய இருந்த வாராக் கடன்களை 2.32 லட்சம் கோடியாக குறைத்திருப்பதையும் பாராட்டி இருக்கிறது.
தொடர வேண்டும்
அதோடு அரசியல் சூழலில் பணியாற்றி ஆர்பிஐ-ன் ஆளுநராக பதவி ஏற்று இருக்கும் சக்தி காந்த தாஸும் ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் போல, இந்திய வங்கிகளை நெருக்கமாக கண்கானித்து இந்த வாராக் கடன்களைக் குறைக்க வேண்டும் எனவும் எச்சரித்திருக்கிறது.
கண்டிப்புகள்
சக்தி காந்த தாஸை எச்சரித்த ப்ளூம்பெர்க், அவரின் சில முடிவுகளையும் நேரடியாக விமர்சித்திருக்கிறது. குறிப்பாக ஆர்பிஐக்கு போதுமான காசு இல்லாத போது ஏன் மத்திய அரசுக்கு 28,000 கோடி ரூபாய் இடைக்கால ஈவுத் தொகையாக (Interim Dividend)-ஆக கொடுக்க வேண்டும். அதைக் கொடுக்காமல், ஆர்பிஐ-ன் நிலையை வலுப்படுத்தி இருக்கலாம் எனவும் தன் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. சரி அடுத்த பிரச்னையைப் பார்ப்போம்.
Restructured loan என்றால் என்ன..?
ஒரு நிறுவனத்துக்கு கடன்கொடுக்கிறார்கள். அந்த நிறுவனம் தொடர்ந்து 90 நாட்களுக்கு அசலோ, வட்டியோ அல்லது ஒரு தவணை கூட கட்டவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்களுடைய கடனுக்கான வட்டி விகிதத்தில் குறைப்பு, கட்ட வேண்டிய கால அளவில் கொஞ்சம் அதிக மாதங்கள் அல்லது ஆண்டுகள் தருவது.... என்று மொத்தக் கடன் அமைப்பையே மறு சீரமைப்பார்கள். கிட்ட தட்ட கடன் கொடுக்காமல் கொடுத்த கடனுக்கான விஷயங்கள் வட்டி, காலம் என எல்லாமே மாறும். இப்படி ஏற்கனவே இருக்கும் கடனை மீண்டும் சீரமைத்தால் அது தான் மறுசீரமைக்கப்பட்ட கடன். இதைத் தான் ஆங்கிலத்தில் Restructured Loan என்கிறோம். இது தான் கடனை வசூலிப்பதற்கான கடைசி வாய்ப்பு.
Written off Assets என்றால் என்ன..?
ஒரு நிறுவனமோ அல்லது தனி நபரோ கடன் வாங்குகிறார். 90 நாட்களாக எந்த ஒரு அசலோ, வட்டியோ அல்லது ஒரு தவணை கட்டவில்லை. ஆக அவர் கடனை மறுசீரமைத்தால் கட்ட முடியுமா எனக் கேட்பார்கள். முடியும் என்றால் மறுசீரமைத்துக் கொடுப்பார்கள். மறுசீரமைத்தும் கடனை ஒழுங்காக கட்ட வேண்டும். அப்படி கட்ட வில்லை என்றால் கடன் வாங்கியவரின் சொத்துக்களை விற்று வங்கிக்கான பணத்தை மீட்கப் பார்ப்பார்கள்.
விர்க ஒன்றுமே இல்லை என்றால்..?
ஒருவேளை கடன் வாங்கியவரிடம் சொத்துக்கள் எதுவும் இல்லை, அவரிடம் இருந்து இனி எப்படியும் கடன்களை மீட்கவே முடியாது என வங்கிக்கு உறுதியாக தெரிந்தால் தான் அந்தக் கடன்களை திரும்ப வராத கடன்களாக அறிவிப்பார்கள். அதைத் தான் ஆங்கிலத்தில் Written off Asset என்கிறோம். இந்த ரக கடன் தாரர்களின் தொகைகளை ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிதி நிலை அறிக்கையில் எழுதி பொது வெளியில் சமர்பிப்பார்கள். இப்படிப் பட்ட கடன்கள் நம் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக நிறையவே இருக்கின்றன. இதற்கு சிறந்த சமீபத்தைய உதாரணம் அனில் நீரவ் மோடி கடனை கட்டாமல் டாட்டா காட்டியது.
இந்திய நிறுவனங்கள்
இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்திய தனி நபர்கள் வாங்கிய கடன்களில் திருப்பிச் செலுத்தாத கடன்கள் சர்வதேச கணிப்புகள் படி என அனைத்தையும் சேர்த்தால் 210 பில்லியன் டாலர் வரை வருகிறது. இந்திய மதிப்பில் சுமார் 14,00,000 கோடி ரூபாய். இந்த தொகை இனி வருங்காலங்களிலாவது குறைய வேண்டும் எனவும் ப்ளூம்பெர்க் எச்சரித்திருக்கிறது.
இந்திய வங்கிகள் மட்டும்
மேலே சொன்ன 14 லட்சம் கோடி ரூபாயில் இந்தியாவில் இருந்து செயல்படும் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸுடு அஸெட் நீங்களாக, இந்திய வங்கிகள் மட்டும் கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க முடியாமல் Stressed Asset ஆக சுமார் 145 பில்லியன் டாலர் இருக்கிறதாம். மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி என வரிசை கட்டி கொடுத்த கடனை வாங்க காத்திருக்கிறார்கள் இந்திய வங்கிகள். இந்த 145 பில்லியன் டாலரை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் வருகிறது.
இந்தியா தலைமை
உலக அரங்கில் இன்று இந்தியா தனியாக ராஜ நடை போடுகிறது. வேறு எந்த ஒரு நாட்டுப் பொருளாதாரமும் இந்தியாவுக்கு இணையாக வளர்ச்சியைக் காட்ட வில்லை. ஆனால் இந்திய ஒவ்வொரு ஆண்டுக்கும் 6 - 8 சதவிகித வளர்ச்சி காட்டி வருகிறது. இது போன்ற பொருளாதார வளர்ச்சிக் காலங்களில் மேலே சொன்ன Stressed asset-கள் உருவாவது சாதாரனம் தான் ஆனால் இந்தியாவில் அந்த அளவு கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் இருக்கிறது. எனவே இந்திய வங்கிகள் வலுவாக இருக்கும் படி எச்சரித்திருக்கிறது. சுருக்கமாக இந்தியா திவாலானால், உலகமே அதிரும் அளவுக்கு பொருளாதாரப் பிரச்னைகளும், பல வங்கிகள் திவாலாவதையும் தடுக்க முடியாது என்கிறது ப்ளூம்பெர்க்.
சக்தி காந்த தாஸ் முடிவு
ப்ளூம்பெர்க் இந்திய வங்கிகள் தங்கள் Stressed Asset-களை குறைத்துக் கொள்ளும் படி சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்பிஐ தன்னுடிய பிசிஏ திட்டத்தில் இருந்து வங்கிகளை தொடர்ந்து வெளியே கொண்டு வருகிறது. ஆக இப்போது பிசிஏ என்றால் என்ன என்பதையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
பிசிஏ என்றால்..?
Promp Corrective Action என்பது தான் PCA வின் விரிவாக்கம். வங்கிகளின் நிதி நிலையைப் பொறுத்து தான் ஆர்பிஐ-ன் PCA திட்டத்தில் பட்டியலிடப் படுவார்கள். PCA-வில் பட்டியலிடப்படும் வங்கிகள் பெரிய தொகை டெபாசிட்டுகளை வாங்கக் கூடாது. அதே போல் இருக்கும் டெபாசிட்டுகளைக் கூட மறு டெபாசிட்டுகளாக (Renew) செய்யக் கூடாது. ஆர்பிஐ அனுமதி இல்லாமல் புதிய சேவைகளை வழங்கவோ, கூடுதல் கட்டணங்களை வசூலிக்ககவோ, மற்ற வங்கிகளிடம் கடன் வாங்கவோ, புதிய கிளைகளை திறக்கவோ கூடாது.
கார்ப்பரேட் கடன் கூடாது
மிக முக்கியமாக PCA திட்டத்தின் கீழ் இருக்கும் வங்கிகள் ஆர்பிஐ அனுமதி இல்லாமல் பெரிய கடன் தொகைகளை வழங்கக் கூடாது. குறிப்பாக கார்ப்பரேட்டுக்கு பெரிய கடன் தொகைகளை வழங்கக் கூடாது. இப்படி இந்தியாவின் 11 அரசு வங்கிகள் இந்த PCA திட்டத்தின் கீழ் பட்டியலிடப் பட்டது. அந்த அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலை பலவீனமாக இருந்தது. இப்போதும் அப்படித் தான் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் இப்படியே விட்டால் இந்திய வங்கிகள் மொத்தமாக திவால் ஆகிவிடும் என தில்லாக சொல்லி PCA திட்டத்தை ஒழுங்காக பயன்படுத்தி 11 அரசு வங்கிகளை இந்த பட்டியலில் சேர்த்தார் உர்ஜித் படேல்.
சக்தி காந்த தாஸ்
சக்தி காந்த தாஸ் பொறுப்பேற்ற பின் மேலே சொன்ன கடுமையான பிசிஏ கட்டுப்பாட்டில் இருந்து பேங்க் ஆஃப் இந்தியா (Bank Of India), பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank Of Maharashtra) மற்றும் ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (Oriental Bank of Commerce) ஆகிய மூன்று வங்கிகளை கடந்த ஜனவரி 31, 2019-ல் வெளியே விட்டார். இப்போது அலஹாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, தனலஷ்மி வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் அறையும் குறையுமாக இந்த பிசிஏ திட்டத்தில் இருந்து வெளியேற்றப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் பெருமைக்குரிய ஆளுநர் சக்தி காந்த தாஸோ மத்திய அரசு சொல்வதை அப்படியெ செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்திய வங்கிகளை கெடுக்கிறோம்
ஒரு பக்கம் சர்வதேச நிறுவனங்கள் நம்மை எச்சரித்துக் கொண்டிருக்கிறது. உலக பொருளாதாரமே இந்தியாவை நம்பி இருக்கிறது வங்கிகளை வலுப்படுத்துங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாமோ வங்கிகளின் நிதி நிலை சீரடைவதற்கு முன், மீண்டும் கடன் கொடுக்கச் சொல்லி கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.