டெல்லி: புற்றுநோயை உண்டாக்கும் ஆஷ்பெட்டாஸ் துகள்கள் பேபி பவுடரில் கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜான்சன் அன் ஜான்சன் பேபி பவுடர் உற்பத்தி.
சோதனை முடிவில் ஆஷ்பெட்டாஸ் துகள்கள் எதுவும் கலந்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டதால் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.என்ன ஆச்சு? ஹூம் குழந்தை அழுதது! உட்வாட்ஸ் கிரைப் வாட்டார் குடு. நீ குழந்தையா இருக்குறப்போ நானும் அதெத்தான் குடுத்தேன் என்ற விளம்பரம் இன்றைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிறுவனம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் உபயோகிக்கும் சோப்பு, ஷாம்ஃபு முதல் அனைத்துவிதமான பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது.
ஜான்சன் அன் ஜான்சன் powder
ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனம் உற்பத்தி செய்யும் அனைத்துவிதமான பொருட்களிலும் உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கும் நச்சப் பொருட்கள் கலந்திருப்பதாக பலதரப்பினரும் புகார் எழுப்பினர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் பயன்படுத்தும் பேபி பவுடரில் புற்று நோயை உண்டாக்கும் ஆஷ்பெட்டாஸ் துகள்கள் கலந்திருப்பதாக தாய்மார்கள் புகார் தெரிவித்தனர்.
ஜான்சன் & ஜான்சன் மாதிரிகள்
இந்த நிறுவனத்தின் பவுடர் சாம்பிள்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஆஷ்பெஸ்டாஸ் எனப்படும், புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய கனிமப்பொருள் சிறியளவில் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971-ம் ஆண்டு முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகளில் அதன் பங்கு மதிப்பு சரிந்தது.
ஜான்சன் & ஜான்சன் அறிக்கை
இதைத் தொடர்ந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜான்சன் அண்டு ஜான்சன்ஸ் நிறுவனம், "நாங்கள் தயாரிக்கும் பவுடரை வைத்து, ஒரு லட்சம் ஆண் - பெண்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த பவுடர் பயன்படுத்துவதால், புற்று நோய் ஏற்படாது என்பது, அந்தச் சோதனைகளில் தெளிவாகி உள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி ஒருதலைபட்சமானது எனத் தெரிவித்திருந்தது. இதனிடையே, இந்த நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர்களை பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் 22 வழக்குகள் தொடரப்பட்டன.
நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், அதனுடைய உற்பத்தி பொருளான முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்குத் தெரிவிக்க தவறிவிட்டது எனத் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டனர்.
கோர்ட் உத்தரவு
பல்வேறு தரப்பிலும் இருந்தும் ஜான்சன் அன் ஜான்சன் பவுடர் பற்றிய புகார்கள் அரசுக்கு வந்தவண்ணம் இருந்ததை அடுத்து இந்திய அரசு தலைமையிலான விசாரணை ஆணையம் பேபி பவுடர் உற்பத்தியை நிறுத்தச் சொன்னது. அரசிடம் இருந்த வந்த உத்தரவை அடுத்து கடந்த டிசம்பரில் ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பேபி பவுடர் உற்பத்தியை நிறுத்தி வைத்தது.
ஜான்சன் & ஜான்சன் மகிழ்ச்சி
இதனையடுத்து நாடு முழுவதிலும் இருந்து ஜான்சன் அன் ஜான்சன் பேபி பவுடர் மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அத்துடன் ஜான்சன் அன் ஜான்சன் நிறவத்தின் இந்திய தொழிற்சாலைகளில் உள்ள மூலப்பொருட்களையும் கடும் சோதனைக்கு உட்படுத்தியது. நாடு முழுவதும் இருந்தும் கிடைக்கப்பெற்ற பேபி பவுடர் மாதிரிகளை அரசு கடும் சோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனை முடிவு வியாழன் அன்று 01.03.19 ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனத்திற்கு கிடைத்தது. சோதனை முடிவில் புற்று நோயை உண்டாக்கும் ஆஷ்பெட்டாஸ் துகள்கள் எதுவும் ஜான்சன் அன் ஜான்சன் பேபி பவுடரில் கலந்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அரசு தலைமையிலான விசாரணை ஆணையம் பேபி பவுடர் உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜான்சன் அறிக்கை
ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனம் ராய்ட்ர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய செய்திக்குறிப்பில், பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெறப்பட்ட பேபி பவுடர் மாதிரிகளை அரசு சோதனைக்கு உட்படுத்தியதில், புற்று நோயை உண்டாக்கும் ஆஷ்பெட்டாஸ் துகள்கள் எதுவும் கலந்திருக்கவில்லை என்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து இந்தியத் தொழிற்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேபி பவுடர் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது, என்று தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளில்
சில மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூர், தாய்லாந்து, சவுதி அரேபியா, ஜோர்டான், குவைத், மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டிலுள்ள ஜான்சன் அன் ஜான்சன் நிறுவன தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பேபி பவுடரிலும் எந்தவிதமான நச்சுப் பொருட்களும் கலந்திருக்கவில்லை என்று உறுதிப்படுத்தியது. அதன் பின்னரே ஜான்சன் அன் ஜான்சன் இந்நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் மீண்டும் பேபி பவுடர் உற்பத்தியை தொடங்கியுள்ளது. ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனத்திற்கு மும்பையில் பாடி (Baddi) என்ற இடத்திலும் முலூண்ட் என்ற இடத்திலும் பேபி பவுடர் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறு குழந்தைகள்
ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரைப் பொறுத்தவரை அது இந்தியாவில் நன்கு அறிமுகமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டாகத் திகழ்கிறது. பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்த மறு ஆண்டிலிருந்தே, அதாவது 1948 லிருந்தே இந்தியாவில் தனது பேபி பவுடரை விற்கத் தொடங்கியது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 130 கோடி. இதில் 28 சதவிகிதம் பேர் 0 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்தான். இந்தியக் குடும்பங்களில் புதிதாகக் குழந்தை பிறந்தால், அந்த வீட்டுக்குச் செல்லும் உறவினர்கள் இந்த நிறுவனத்தின் சோப்பு, பவுடர் மற்றும் ஷாம்பூ உள்ளிட்ட குழந்தை பயன்பாட்டுக்கான பொருள்கள் அடங்கிய பரிசு பெட்டியை வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது.
மருந்து கடைகளில்
இந்தியா முழுவதும் மருந்துக்கடைகள், பெட்டிக் கடைகள் முதல் பெரிய பெரிய டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்கள் வரை தனது தயாரிப்புப் பொருள்களை விற்பதற்கான மிகப் பெரிய நெட்வொர்க்கை ஜான்சன் அண்டு ஜான்சன் கொண்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலமான விற்பனையிலும் மிகப் பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. இந்தியச் சந்தையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 178 மில்லியன் டாலராக உள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டில் இது மேலும் 85 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்கலாம் என்றும் அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்தது.