டெல்லி: மாநில அரசுகளின் வரி வருவாய் அதிகரித்தாலும், மத்திய அரசின் பங்களிப்பான இழப்பீடு தொடர்ந்து கிடைக்கும் என்று ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி முறையின் விதிகளின் படி வரி வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்யும் விதமாக நடப்பு நிதியாண்டில் பல மாநிலங்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. மேலும் பல மாநிலங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து வரி வருவாயை பெருக்குவதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இது மற்ற மாநிலங்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும் என்று தெரிகிறது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஆண்டில், ஜிஎஸ்டி பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாததால் சில மாநிலங்களில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக குறைந்தது. உற்பத்தி அதிகரித்து காணப்பட்டாலும், பல மாநிலங்களில் உற்பத்தியைக் காட்டிலும் சேவை வருவாய் குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாகவே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்து காணப்பட்டது.
நடப்பு ஆண்டில் ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் சராசரியாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்தே காணப்பட்டது. அதனால் ஜிஎஸ்டி சட்டப்படி மாநிலங்களுக்கு வரவேண்டிய பங்களிப்பான இழப்பீடை (GST Compensation) மத்திய அரசு கண்டிப்பாக வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
மாநில அரசுகள் தங்கள் இஷ்டப்படி வாட் வரி, சேவை வரி, நுழைவு வரி, சுங்க வரி, பொழுதுபோக்கு வரி என பல வரிமுறைகளை செயல்படுத்தி வந்ததை மாற்றி அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான வரிமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர், கடந்த 2017ஆம் ஆண்டில் ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் தங்களின் மாநில உரிமைகளும், தங்களின் வருவாயும் கடுமையாக பாதிப்படையும் என்றும், மாநில அரசுகள் செயல்படுத்த நினைக்கும் அனைத்துவிதமான மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் மத்திய அரசிடம் கையேந்த நிலைமை ஏற்படும் என்பதால், தொடக்கத்தில் பல மாநிலங்களும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்த கடுமையாக எதிர்த்தன.
மாநில அரசுகளின் பயம் தேவையில்லாதது என்றும், ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநில அரசுகளுக்கும் சரிசமமாக பங்கு கிடைக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கையையும் உறுதியும் அளித்தது. இதன்படி அந்த அந்த மாநிலங்களுக்கு உள்ளேயே நடக்கும் விற்பனைகளுக்கு கிடைக்கும் வரி வருவாயை மாநில அரசும் மத்திய அரசும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்வது (CGS & SGST) Tஎன்றும், வெளி மாநில விற்பனைக்கு கிடைக்கும் வரி வருவாயை (IGST) எப்போதும் போலவே மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் என்றும் மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன.
மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொண்ட படியே தற்போது ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தரவேண்டிய இழப்பீடை தொடர்ந்து வழங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் உற்பத்தி குறைவாகவும் தேவை கூடுதலாகவும், சில மாநிலங்களில் அதிக அளவில் உற்பத்தியும் இருக்கும். நுகர்வு தன்மை கூடுதலாக தேவைப்படுகின்ற மாநிலங்களுக்கு அதிகமாகவே இழப்பீடு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி முறையின் விதிகளின் படி வரி வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்யும் விதமாக நடப்பு நிதியாண்டில் பல மாநிலங்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. மேலும் பல மாநிலங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து வரி வருவாயை பெருக்குவதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இது மற்ற மாநிலங்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும் என்று தெரிகிறது.
உதாரணமாக பீகார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் நடப்பு 2018-19ஆம் நிதி ஆண்டில் 50 சதவிகிதம் கூடுதல் வரி வருவாயை எட்டியுள்ளது. இருந்தாலும் , கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.2000 கோடி வரையிலும் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்படாமல், பழைய வரிமுறையான வாட் வரிவிதிப்பு முறையானது தற்போது நடைமுறையில் இருந்திருந்தால், இப்போது எட்டியுள்ள வரி வருவாய் இலக்கை மேற்கண்ட மாநிலங்கள் இந்த அளவிற்கு எட்டி இருக்குமா என்பது சந்தேகமே. மேற்குறிப்பிட்ட மாநிலங்கள் அனைத்தும் கடந்த 2016ஆம் நிதியான்டின் 16சதவிகித வரி வருவாயை அடிப்படையாகக் கொண்டு ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடு பெறும்.
கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் மாநிலங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.42,979 கோடியாக இருக்கும் என்றும், நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் சுமார்ரூ.48,999 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. மேற்குறிப்பிட்ட மாநிலங்கள் எல்லாம் முந்தைய ஆண்டைவிட வரி வருவாயை அதிகரித்துக்கொண்டு வருவதால், மாநிலங்களின் பங்களிப்பான மாநில வரி வருவாயை (SGST) தொடர்ந்து மத்திய அரசு வழங்கி வருகிறது. ஜிஎஸ்டி யின் ஆரம்ப கட்டத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும் அடுத்த ஆண்டில் வரி வருவாய் அதிகரித்ததால் மத்திய அரசும் மாநில அரசின் பங்களிப்பான இழப்பீடை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.