"சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் இறக்குமதி விதித்திருக்கிறோம்" என 2018 மத்தியில் சொன்னார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
அதற்கு சீனாவும், தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்து பதிலடி கொடுத்தது. இப்படி முட்டி மோதி ஒருவழியாக கொஞ்சம் சமாதானத்துக்கு வந்திருக்கிறதுஅமெரிக்க சீனப் போர்.
இன்னும் இந்தப் பிரச்னை முடிந்த பாடில்லை, பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்குள் உலகில் வேகமாக வளரும் இந்திய பொருளாதாரத்திலேயே கை வைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
என்ன பிரச்னை
இந்தியாவுக்கு 1976-ம் ஆண்டில் இருந்து GSP - Generalised System of Preferences-ன் கீழ் கொடுத்த வந்த இறக்குமதி வரிச் சலுகையை திரும்ப பெற்றுக் கொண்டது அமெரிக்கா.
என்ன ஆகும்..?
இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்திருக்கும் இறக்குமதி வரிகளை முழுமையாக செலுத்தியே ஆக வேண்டும்.
இறக்குமதி வரி
ஒரு இந்தியர் தன் பொருளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார். அவர் பொருளை ஒருவர் அமெரிக்காவில் இறக்குமதி செய்வார். அப்படி இறக்குமதி செய்யும் போது, அமெரிக்க அரசு விதித்திருக்கும் இறக்குமதி வரிகளைச் செலுத்தாமல் இருக்க இந்த GSP - Generalised System of Preferences இடம் கொடுத்தது. இனி அமெரிக்காவில் இறக்குமதி செய்பவர், அமெரிக்க அரசின் இறக்குமதி வரிகளை செலுத்தியே ஆக வேண்டும்.
ஏன்..?
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவின் சந்தை இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ கருவிகள், பால் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை இந்தியா கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளவில்லை. இந்த கடுப்பில் தான் அமெரிக்க தன் GSP - Generalised System of Preferences பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி இருக்கிறார்கள்.
இந்தியா தரப்பு
"இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருட்கள், இடைநிலை உற்பத்திப் பொருட்கள், ரசாயனங்கள் போன்றவைகள் தான் அதிகம் ஏற்றுமதி ஆகின்றன. அமெரிக்காவின் தன் GSP - Generalised System of Preferences பட்டியலில் இருந்து நம்மை (இந்தியாவை) நீக்கியதில் நமக்கு ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை" என வணிகத் துறைச் செயலர் அனூப் வாதவான் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லி இருக்கிறார்.
GSP - Generalised System of Preferences
ஜனவரி 01, 1976-ம் ஆண்டு இந்த GSP - Generalised System of Preferences கையெழுத்தானது. இந்த திட்டத்தில் 129 வளரும் நாடுகள் இருந்தன. இந்த 129 நாடுகளில் இருந்து 4800 பொருட்களை, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதுவும் அமெரிக்க இறக்குமதி வரி செலுத்தாமல் ஏற்றுமதி செய்யது கொள்ளலாம். இது தான் GSP - Generalised System of Preferences.
ஜிஎஸ்பி கொடுக்கும் நாடுகள்
அமெரிக்கா மட்டும் இன்றி ஆஸ்திரேலியா, பெலாரஸ், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஐஸ்லாந்து, ஜப்பான், கஜகஸ்தான், நியூசிலாந்து, நார்வே, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த GSP - Generalised System of Preferences திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு இறக்குமதி வரியில் தள்ளுபடி கொடுத்திருக்கிறார்கள். இவர்களை GSP - Generalised System of Preferences Donor என்று அழைக்கிறார்கள்.
GSP வரலாறு
General Agreement on Tariffs and Trade (GATT) 1994 பற்றிப் படித்திருப்பீர்கள். இந்த ஒப்பந்தப்படி உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருக்கும் அனைத்து நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் MFN - Most Favoured Nation ஸ்டேட்டஸ் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்றது. அதாவது உலகில் உள்ள எல்லா நாடுகளும் எங்களுக்கு பிடித்தமான நாடுகளே. ஆக எந்த பாகுபாடும் இல்லாமல் தங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்வேன் எனச் சொல்வது தான் இந்த Most Favoured Nation ஸ்டேட்டஸ்.
வளரும் நாடுகளுக்கு
மேலே சொன்னது போல Most Favoured Nation பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு உலக வர்த்தக அமைப்பு (WTO) சொல்லும் படி வரிகளை சீராக விதித்து அனைத்து நாடுகளோடு பாரபட்சம் இன்றி நடந்து கொள்ள வேண்டும். இதைத் தாண்டி வளரும் நாடுகளுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும் என்பதால் இந்தியாவை அமெரிக்காவின் Most Favoured Nation பட்டியலில் இருந்து நீக்கி, GSP - Generalised System of Preferences பட்டியலில் சேர்த்துக் கொண்டது அமெரிக்கா.
பெரும்பயன்
பட்டியலிடப்பட்டிருக்கு 129 நாடுகளில் அமெரிக்காவுக்கு 1900 பொருட்களை ஏற்றுமதி செய்து பெரும் பயனாளியாக இந்தியா இருந்து வந்தது. ஒரு ஆண்டில் சுமார் 5.6 பில்லியன் டாலர் (560 கோடி டாலர்) மதிப்பிலான பொருட்களுக்கு 190 மில்லியன் டாலர் (19 கோடி டாலர்) இறக்குமதி வரி செலுத்தாமல் இன்று வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம். இனி இந்த 19 கோடி டாலரையும் செலுத்த வேண்டும்.
எற்றுமதி குறையுமா..?
ஆம். இப்போது பொருளின் அடிப்படை விலை, ஏற்றுமதியாளரின் செலவுகள், லாபம் போன்றவைகளை எல்லாம் சேர்த்து இதுவரை 100 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள் என்றால் இனி சராசரி இறக்குமதி வரியான 3.3 சதவிகிதத்தையும் சேர்த்து 103.3 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதனால் கொஞ்சம் வாடிக்கையாளர்கள் இந்தியாவை விட குறைவான விலை கொடுக்கும் நாட்டை நோக்கிப் போகலாம்.
எப்போதில் இருந்து அமல்
இந்த அறிவிப்பு இன்னும் முறையாக இந்தியா அரசுக்கு தெரியப்படுத்தவில்லை. அமெரிக்க அதிபர் அதிகாரபூர்வமாக கையெழுத்து போட்டு இந்தியாவுக்கு தெரியப்படுத்தி 60 நாட்களுக்குப் பின் தான் இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்காவின் இறக்குமதி வரி வசூலிக்கப்படும்.