"சீனா மீது விதித்திருந்த 10 சதவிகித கூடுதல் இறக்குமதி வரியை 25 சதவிகிதமாக உயர்த்தமாட்டேன். இது எங்கள் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம்" என ட்விட் செய்திருந்தார் டொனால்ட் டிரம்ப்.
அதோடு "அமெரிக்க விவசாயப் பொருட்கள் (மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி உட்பட) மீதான கூடுதல் வரிகளை உடனடியாக விலக்குமாறு சீனாவிடம் கேட்டிருக்கிறேன். இது வரையான வர்த்தகப் பேச்சுகள் சிறப்பாக போய் கொண்டிருப்பதால் இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறேன்" எனவும் ட்விட்டி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
இப்படி அமெரிக்க சீன வர்த்தகப் போர் ஒரு பக்கம் தனிந்து கொண்டிருக்கும் போது, சீனா உடன் முறுக்கிக் கொண்டிருக்கிறது இந்தியா.
என்ன பிரச்னை
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் எப்போதுமே நம்பகமான உறவு இருந்ததில்லை. ஆனால் மோடி வந்த பின் கூடுமான வரை சீனாவை சீண்டாது நல்ல உறவையே வைத்துக் கொள்ள முயன்று இருக்கிறார். சீனர்களும் வாய் வழியாக ஒப்புக் கொண்டார்கள். ஆனால் செயலில் காட்ட வில்லை. பிரச்னையின் ஒரு வரி சுருக்கம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றவில்லை.
இந்தியா யாருக்கு பெரிய ஏற்றுமதியாளர்
கடந்த 2017 - 18-ல் மொத்தமாக 303.52 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம். இதில் அமெரிக்காவுக்கு மட்டும் 47.87 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறோம். இந்தியாவில் இருந்து அதிக ஏற்றுமதி ஆகும் நாடு அமெரிக்கா தான். இது இன்ரு நேற்று அல்ல பல வருடங்களாக, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஒரு பெரும் பகுதியை அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதி செய்கிறோம். 2008-ம் ஆண்டில் நடந்த பொருளாதார சரிவுகளின் போது இந்தியா கொஞ்சம் பாதிக்கப்பட்டதற்கு காரணமும் அமெரிக்காவுக்கு மட்டுமே அதிகம் ஏற்றுமதி செய்தது தான்.
யார் இந்தியாவுக்கு பெரிய ஏற்றுமதியாளர்..?
கடந்த 2017 - 18 நிதியாண்டில் இந்தியா மொத்தம் 465 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்திருக்கிறது. ஒட்டு மொத்த ஏற்றுமதியில் இருந்து இறக்குமதியைக் கழித்தால் (303.52 - 465.58) = 162.06 பில்லியன் டாலர் வரும். இந்த 162 பில்லியன் டாலர் நமக்கு (இந்தியாவுக்கு) நடப்புக் கணக்கு பற்றாக்குறையாக தேங்கி நிற்கிறது. இந்த பணத்தை நம் ஆர்பிஐ வைத்திருக்கும் அந்நிய செலாவணி ரிசர்வ்வில் இருந்து தான் செலுத்த வேண்டும். சரி இந்த ஆர்பிஐ ரிசர்வ் பிரச்னைகளையும் கொஞ்சம் புரிந்து கொண்டால் இந்தியா - சீன உறப் பிரச்னைகளையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
டாலரில் கொடு
ஒரு நாடு ஏற்றுமதி செய்தால் அதற்கான பேமெண்ட்களை டாலரில் தான் பெறும். அதே போல இறக்குமதி செய்தாலும் டாலரில் தான் பேமெண்டுகளை கொடுக்கவும் வேண்டும். ஆக ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு டாலர் அவசியமாகிறது. சரி இந்தியாவுக்கு எப்படி எல்லாம் டாலர் கிடைக்கிறது..? இந்தியா எப்படி டாலர் பற்றாக்குறைப் பிரச்னைகளை சமாளிக்கிறது.
டாலர் வரவுகள்
இந்தியாவுக்கு டாலர் வரும் நான்கு முக்கிய வழிகள்
1. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் தங்கள் வெளிநாட்டு கரன்ஸிகளை ஆர்பிஐ இடம் கொடுத்து இந்திய ரூபாயாக மாற்றும் போது கிடைக்கும். இதை ஆங்கிலத்தின் Foreign Inward Remittance என்பார்கள்.
2. வெளிநாட்டு முதலீடுகள் (Foreign Investments),
3. இந்தியாவில் செயல்படும் வங்கிகளில் வெளிநாட்டினர் செய்யும் டெபாசிட்டுகள் (Foreigner Deposits),
4. வெளிநாடுகளில் இருந்து வாங்கும் கடன்கள் (External Commercial Borrowings)
கொஞ்சம் அலசுவோம்
2017 - 18-ம் ஆண்டில் சீனாவுக்கு இந்தியாவில் இருந்து 13.33 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறோம். ஆனால் சீனா இந்தியாவுக்கு 76.38 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. இதனால் சீனாவுக்கு 63.05 பில்லியன் அமெரிக்க டாலரை கொடுத்தோம்.
Current Account Dificit
ஒரு நாட்டில் மொத்தமாக 100 டாலருக்கு ஏற்றுமதி செய்கிறார்கள், 100 டாலருக்கு இறக்குமதி செய்கிறார்கள் என்றால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் இல்லை, நடப்புக் கணக்கு உபரியும் இல்லை.
இதுவே ஏற்றுமதி 100 டாலர், இறக்குமதி 110 டாலர் என்றால் (100 - 110) -10 டாலர். 10 டாலர் நடப்புக் கணக்கு பற்றாக்குறை.
அப்படியே ரிவர்ஸாக ஏற்றுமதி 100 டாலர், இறக்குமதி 80 டாலர் என்றால் (100 - 80) நடப்புக் கணக்கு உபரி 20 டாலர் .
டாலர் பிரச்னையை சமாளிக்கும் இந்தியா
மேலே சொன்னது போல 2017 - 18-ல் 162 பில்லியன் டாலரை நாம் கூடுதலாக செலுத்த வேண்டும். காரணம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை. இதை சரி செய்ய மேலே சொன்ன நான்கு வழிகளில் வரும் டாலரை வைத்து இந்தியா திறமையாக சமாளித்துக் கொள்கிறது. ஆனால் இந்த நான்கையும் அதிகம் நம்ப முடியாது, நம்பவும் கூடாது. எனவே தான் இந்தியா ஏற்றுமதியை அதிகரிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.
பெரும் பகுதி சீனா
2013 - 14 நிதியாண்டில் 36 பில்லியன் டாலர், 2014 - 15 நிதியாண்டில் 49 பில்லியன் டாலர், 2015 - 16 நிதியாண்டில் 52 பில்லியன் டாலர், 2016 - 17 நிதியாண்டில் 51 பில்லியன் டாலர், 2017 - 18 நிதியாண்டில் 63 பில்லியன் டாலர் என சீனாவுக்கு மட்டும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் ஒரு பெரிய தொகை இருந்து வருகிறது.
ஆலோசனைக் கூட்டம்
சீனாவுக்கு மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 50 பில்லியன் டாலருக்கு மேல் கொடுக்க வேண்டி இருக்கும் பிரச்னையை தீர்க்கத் தான் சீனாவிடம் பேசியது இந்தியா. கடந்த ஏப்ரல் 2018-ல் வுஹானில் (Wuhan) இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேசினர். அந்த கூட்டத்தின் முடிவில் "இந்தியாவிடம் இருந்து கூடுதல் பொருட்களை சீனா இறக்குமதி செய்யும்" என அறிவித்தார் சீன அதிபர். இந்தியாவும் சீனாவின் சத்தியத்தை நம்பியது
தொடக்கம்
எடுத்த உடனேயே அதிகம் இறக்குமதி செய்யாமல் சீனா தெளிவாக அரிசி, சர்க்கரை மற்றும் பார்மாசியூட்டிக்கள் பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்புக் கொண்டது. இதில் வேடிக்கை என்ன தெரியுமா..?அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களினால் நம் இந்தியாவுக்கு பெரிய லாபம் ஒன்றும் கிடையாது. நம் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் கொஞ்சம் கூட குறையாது.
சொன்ன படி நடக்கவில்லை
இப்போது 2018-ம் ஆண்டில் (ஜனவரி - டிசம்பர் காலம்) இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் சுமார் 95 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி இறக்குமதிகள் நடந்திருக்கின்றன. இதில் 76 பில்லியன் டாலர் மதிப்புக்கு சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. வெறும் 18 பில்லியன் டாலர் தான் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆக இந்த வருடமும் 58 பில்லியன் டாலரை சீனாவுக்கு நம் ஆர்பிஐயின் அந்நிய செலாவணி ரிசர்வ்வில் இருந்து தான் வாரிக் கொடுக்க வேண்டும்.
ஏமாந்த இந்தியா
ஒரு சின்ன வணிக ஒப்பந்தத்தில் கூட ஒத்து வராத சீனாவுக்கு ஒட்டு மொத்த இந்திய சந்தைகளையும் திறந்துவிட்டிருக்கிறோம். சீனாவின் மின்சார நிறுவனங்கள், சீனாவின் டெக்னாலஜி நிறுவனங்கள் என சீனர்கள் இந்தியாவில் புகுந்து காசை வாரிக் கொள்கிறார்கள். ஆனால் நம்மால் சீனாவிடம் இருந்து ஒரு 50 பில்லியன் டாலருக்கு பொருட்களைக் கூட விற்க முடியவில்லை என கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய அதிகாரிகள்.
மேக் இன் இந்தியாவுக்கு அல்வா
உதாரணமாக சீன செல்போன் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தனியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவில் மொபைல்களை உற்பத்தி செய்யவில்லை. அப்படி செய்ய வேண்டும் என்றால் கூட அதை மற்றொரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு செய்துவிடுகிறது சீனா. ஆக சீனா ஒரு ரூபாய் கூட இந்தியாவில் சட்டப் படி முதலீடு செய்யாமல் இந்திய சந்தைகளைப் பயன்படுத்தி பில்லியன் டாலரில் சம்பாதிக்கிறது.
என்ன தான் வழி
சீனா மிகவும் புத்திசாலித்தனமாக தன் சந்தைக்குள் எவரையும் உள்ளே விடாமல் தங்கள் உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். இதைத் தான் சர்வதேச பொருளாதார நிபுனர்கள் Protectionism என்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு சில வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்தாலும் அவர்களின் முதலீடுகளோடு, தொழில்நுட்ப அறிவையும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு அடுத்த சில வருடங்களில் தனியாக கடை போட்டு விடுகிறார்கள்.
இப்படி இந்தியாவும் தன்னை நிலை நாட்டிக் கொண்டு, தன் சந்தையை தானே பயன்படுத்தி முன்னேறுவதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு வலிமையான புத்திசாலித்தனமான ஒரு வர்த்தகத் திட்டம் வேண்டும். அந்த திட்டத்தை செயல்படுத்த சர்வதேச வர்த்தகத்தில் ஆழமான அறிவுடைய அரசியல்வாதிகளும் வேண்டும். குறிப்பாக உள்நாட்டு வணிகர்களும் வாழும் விதத்தில் அந்த திட்டமும், தலைவரும் இருக்க வேண்டும்.