டெல்லி: மானிய உதவி அளிப்பதில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கவும், குளறுபடிகளை தவிர்க்கவும் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கான மானிய உதவித் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கு மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்த உடன், ஏற்றுமதி செய்ததற்கான அந்தியச் செலாவணித் தொகை விவசாயிகளின் அதாவது ஏற்றுமதியாளர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்தவுடனே, வேளான் பொருட்கள் ஏற்றுமதிக்கான மானிய உதவிகள் அவரது கணக்கிற்கு அனுப்பப்படும் என்று வர்த்தக அமைச்சகத் துறை அதிகாரிகள் கூறினர். இந்தத் திட்டத்துக்கு போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் உதவி திட்டம் என்று பெயர்.
வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானிய உதவித் தொகையை நேரடியாக செலுத்துவதால், அவர்கள் சர்வதேச அளவில் போட்டி போட முடியும். இத்திட்டத்தை சோதனை அடிப்படையில் மார்ச் 1ஆம் தேதி முதலே அமல்படுத்த உள்ளதாகவும், விவசாயிகளிடம் இத்திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் தொடர்ந்து நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வை வளமாக்க அவர்களுடைய வங்கிக்கணக்கில் ஆண்டொன்றுக்கு ரூ.6000 மானிய உதவித் தொகை அளிக்கப்போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சொன்னது போலவே தற்போது மாதந்தோறும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகையை செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் தற்போது அவர்களின் மனங்களை குளிர்விக்க அடுத்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராகிவிட்டது. இதன் மூலம் வரும் லோக்சபா தேர்தலில் ஒட்டுமொத்த விவசாயிகளின் ஓட்டுக்களை முழுமையாக அறுவடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மானிய உதவித்தொகை
மத்திய அரசு மக்களுக்கு அளிக்கும் நலத்திட்ட உதவிகளான கேஸ் மானியம், விவசாயிகளுக்கு அளிக்கும் மானியம் மற்றும் தற்போது அறிவித்துள்ள வேளான் பொருட்கள் ஏற்றுமதிக்கான மானிய உதவித்தொகை, போன்றவை பயனாளிகளின் கைகளுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
சந்தைப்படுத்துவதில் போட்டி
மானிய உதவித் தொகை பெறுவதில் எந்தவிதமான குளறுபடிகளோ அல்லது இடைத்தரகர்களின் தலையீடோ இருக்கக்கூடாது என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவே தான் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானிய உதவித் தொகையை செலுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மானிய உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதால், அவர்கள் சர்வதேச அளவில் தங்களின் வேளாண் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் போட்டி போட முடியும் என்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
போக்குவரத்து வசதி
வேளாண் ஏற்றுமதிப் பொருட்களுக்கான மானிய உதவித் திட்டத்தின் கீழ் சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கட்டணம், சந்தைப்படுத்து தேவைப்படும் உதவிகள் அதாவது வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு விவசாயிகள் விமான போக்குவரத்து அல்லது கப்பல் போக்குவரத்தை தேர்ந்தெடுக்க உதவி செய்வதும் இதில் அடங்கும். இதில் குறிப்பாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், வேளாண் பொருட்கள் பெரும்பாலும் அழுகும் தன்மையுடைய பொருட்களாக உள்ளதால், சந்தைப்படுத்துவதில் விரைந்து செயலாற்ற உதவி செய்வது அவசியம்.
சந்தை உதவித் திட்டம்
வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்த உடன், ஏற்றுமதி செய்ததற்கான அந்தியச் செலாவணித் தொகை விவசாயிகளின் அதாவது ஏற்றுமதியாளர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்தவுடனே, வேளான் பொருட்கள் ஏற்றுமதிக்கான மானிய உதவிகள் அவரது கணக்கிற்கு அனுப்பப்படும் என்று வர்த்தக அமைச்சகத் துறை அதிகாரிகள் கூறினர். இந்தத் திட்டத்துக்கு போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் உதவி திட்டம் என்று பெயர். இது வேளாண் மற்றும் பண்ணை பொருள், சில குறிப்பிட்ட பொருள் ஏற்றுமதிக்கு மட்டுமான திட்டமாகும்.
எந்தப் பொருட்களை அனுப்பலாம்
வேளாண் உற்பத்தி ஏற்றுமதிப் பொருட்களுக்கான மானிய உதவி கிடைக்கும் பிரிவில், கடல் உணவுப் பொருள்கள், மலைகளில் விளையும் பொருள்கள் என பிரிவு 1 முதல் 24 வரையிலான அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கும் இதில் அடங்கும். ஆனால் உயிருள்ள விலங்குகள், பறவைகள், இறைச்சி, இறால், பால், நெய், பாலாடைக்கட்டி, தயிர், வெங்காயம், பூண்டு, கோதுமை, அரிசி, உலர் திராட்சை, காய்கறிகள் உள்ளிட்டவற்றுக்கு மானிய உதவி கிடைக்காது.
எந்த நாடுகளுக்கு அனுப்பலாம்
வேளான் உற்பத்தி பொருட்களை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்பதை வர்த்தகத் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதில் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள், மேற்கு ஆசிய நாடுகள், ரஷ்யா, சீனா, வட அமெரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகள் என மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே வேளாண் ஏற்றுமதிக்கான அரசு மானிய உதவித் தொகை கிடைக்கும். ஆனாலும் கூட, மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு எந்தப்பொருட்களை ஏற்றுமதி செய்தால் எவ்வளவு மானியம் கிடைக்கும் என்ற விவரத்தை அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை.
சந்தைப்படுத்த அரசு மானியம்
அடுத்த 3 ஆண்டுகளில் வேளாண் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை சுமார் ரூ.6000 கோடி டாலராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது சுமார் ரூ.3000 கோடி டாலராக உள்ளது. வேளாண் போருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக வேளாண் பொருட்களின் போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தலுக்கு ஆகும் கட்டணத்தை அரசு மானிய உதவியாக அளிக்க உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மானிய உதவித் தொகை எவ்வளவு
வேளாண் ஏற்றுமதி மானிய நிதி உதவியானது அனுப்பப்படும் பொருள், அதை அனுப்பும் மார்க்கம் (கப்பல், விமானம்), மற்றும் பொருட்களின் அளவு மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். 20 அடி நீள கொள்ளளவு கொண்ட கன்டெய்னரில் அனுப்பப்படும் பொருட்களுக்கு சுமார் ரூ. 8400 மானிய உதவி அளிக்கப்படும். வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் தொகையானது சுமார் ரூ. 28,700 வரை இருக்கும். மேலும் விமானம் மூலம் அனுப்பப்படும் பொருட்களுக்கு ஒரு டன்னுக்கு சுமார் ரூ. 840 தொகையும். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு ஒரு டன்னுக்கு சுமார் ரூ. 2,800 மானிய உதவியும் அளிக்கப்படும்.
சலுகை பெறுவது எப்படி
வேளாண் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்து மத்திய அரசின் ஏற்றுமதி மானிய உதவித் தொகையை பெற, சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஏற்றுமதிக்கான மேம்பாட்டுக் கவுன்சிலை தொடர்புகொண்டு கலந்தாலோசித்து இச்சலுகைகளைப் பெறலாம்.
இத்திட்டம் பற்றி கருத்து தெரிவித்த அகில இந்திய பண்ணை பொருட்கள் உற்பத்தி விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சின்னா, மத்திய அரசின் இந்தத் திட்டத்தால் பெருமளவில் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் என்றும் சாதாரண விவசாயிகளுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.