Coinage Act 1906-ன் படி 1000 ரூபாய் வரையான டினாமினேஷனுக்கு காசுகளை இந்திய அரசு அச்சிடலாம். இந்திய அரசு தான் காசுகளை அச்சடிக்க முடியும். ரிசர்வ் வங்கி முழுக்க முழுக்க நோட்டுகளைத் தான் அச்சடிக்க முடியும்.
கடந்த மார்ச் 06, 2019 அன்று புதிய 20 ரூபாய் காசு வெளியாக இருப்பதை அரசு கெஸட்டில் பதிவு செய்திருப்பதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.
புதிய 20 ரூபாய்க் காசு வெளியாக இருக்கும் செய்தியை, மத்திய நிதி அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது.
எத்தனை வண்ணங்கள்
இப்போது புழக்கத்தில் இருக்கும் 10 ரூபாய் காசு போல புதிதாக வெளியே வர இருக்கும் 20 ரூபாய் காசுகளும் இரு வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும்.
வடிவம்
இதுவரை வெளியான காசுகளைப் போல வட்ட வடிவத்தில் இல்லாமல் 12 பக்கங்களைக் கொண்டு dodecagon வடிவத்தில் இருக்கும். இதன் விட்டம் 2.7 சென்டி மீட்டராக இருக்குமாம்.
முன்பக்கம்
புதிய 20 ரூபாய் காசின் முன்பக்கம், வழக்கம் போல சிங்க முகத்தோடு அசோகத் தூணும் "சத்யமேவ ஜெயதே" வாசகமும் ஹிந்தியில் இருக்கும். பாரத் என்கிற வார்த்தையும் ஹிந்தியில் இடது பக்கத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் இந்தியா என பொறிக்கப்பட்டிருக்கும்.
மறு பக்கம்
புதிய 20 ரூபாய் காசின் பின் பக்கம், 20 ரூபாய் என பொறிக்கப்பட்டிருக்கும். அதோடு இந்திய ரூபாய் குறியீடும் இருக்கும். மேலும் கீழுமாக ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் 20 ரூபாய் என பொறிக்கப்பட்டிருக்கும். அதோடு காசு வெளியிட்ட ஆண்டும் ஒரு ஓரத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் என கெஸட் குறிப்பில் வெளியிட்டிருக்கிறது நிதி அமைச்சகம்.
உலோகங்கள்
20 ரூபாயின் வெளிப்புறத்தில் உள்ள பகுதிகளை 65% காப்பர், 15% ஜின்க், 20% நிக்கல் கலந்து செய்கிறார்கள். 20 ரூபாயின் உட்பகுதியை 75% காப்பர், 20% ஜின்க், 05% நிக்கல் கலந்து செய்கிறார்கள்.
எப்போது
இதுவரை நிதி அமைச்சகம் வெளியிட்ட காசுகளிலேயே 20 ரூபாய் காசு தான் அதிக கணமானதாக இருக்குமாம். சுமார் 8.5 கிராம் வரை எடை இருக்குமாம். இந்த புதிய 20 ரூபாய் காசு என்று வெளியிடப்படும் என்கிற விவரங்களை நிதி அமைச்சகம் கெஸட் குறிப்பில் தெரிவிக்கவில்லை.
இதுவரை
இதுவரை இந்தியாவில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என நான்கு டினாமிநேஷன்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இனி புதிதாக இந்த 20 ரூபாய் காசும் சேர்த்து வெளியிட இருக்கிறது நிதி அமைச்சகம்.