டெல்லி: இந்த ஆண்டு இந்திய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சராசரியாக 9.7 சதவிகிதம் அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படலாம் என ஏஒஎன் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டில் அளிக்கப்பட்ட 9.5 சதவிகிதத்தைக் காட்டிலும் சற்று அதிகமாகும். 2017ஆம் ஆண்டில் 9.3 சதவிகிதம் அளிக்கப்பட்டது. சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, 15.6 சதவிகிதம் அளவுக்கு இருக்கலாம் என்றும் மனிதவள ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மார்ச் மாதம் வந்தாலே போதும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய பேச்சு வந்து விடும். இன்கிரிமெண்ட் எத்தனை சதவிகிதம் வருமோ, எத்தனை ஆயிரம் சம்பளம் கூடுமோ என்று பேச்சு அடிபடும். டார்கெட்டை முன் வைத்து இரவு பகலாக ஓடும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வுதான் ஊக்க சக்தியாக உள்ளது. அதற்கு ஏற்றார் போல பல நிறுவனங்கள் சம்பள உயர்வை அள்ளித்தருகின்றன.
கடந்த ஒரு வருடத்தில் பணியார்களின் செயல்பாடு, வேலை செய்யும் திறமை, ஊழியர்களின் நிறுவனத்தில் அவர்களது பங்களிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு அளிக்கலாம் என்பதை மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் அப்ரைசல் படிவத்தில் ஏ,பி,சி,டி,இ என பிரிவுகளை உருவாக்கி அதில் மதிப்பெண் சதவிகிதத்தை நிரப்பி அதற்கேற்ப சம்பளத்தை அளிப்பார்கள். பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டுத் தேவை உயர்வு மற்றும் குறைவான பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்த ஆண்டில் இந்திய நிறுவனங்களின் சராசரி ஊதிய உயர்வு 9.7 சதவிகிதம் வரையில் இருக்கும் என்று மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கருத்து
ஏஒஎன் எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நாடு முழுவதும் 2 வகையான தொழில் நிறுவனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொண்ட ஆய்வின்போது, சாதகமான பொருளாதார கண்ணோட்டம், பொருளாதார வளர்ச்சி இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, அதிக உள்நாட்டுத் தேவை மற்றும் பணவீக்க அளவு குறைவு போன்றவை காரணமாக நிறுவனங்கள் அளிக்க முன்வந்த சராசரி சம்பள உயர்வு விகிதம் 9.7 எனத் தெரிய வந்ததாக பெங்களூரைச் சேர்ந்த ஹெச். ஆர் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் உயரதிகாரி ஜே.எம். ஆன்ட்ரூ தெரிவித்துள்ளார்.
9.7 சதவிகிதம் சம்பள உயர்வு
மனிதவள மேம்பாட்டு ஆலோசனை நிறுவனமான ஏஓஎன் இந்திய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சராசரி ஆண்டு ஊதியம் குறித்த ஆய்வு மேற்கொண்டு அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டுத் தேவை உயர்வு மற்றும் குறைவான பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்த ஆண்டில் இந்திய நிறுவனங்களின் சராசரி ஊதிய உயர்வு 9.7 சதவிகிதம் வரையில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சராசரி ஊதிய உயர்வு 9.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
எந்த நாட்டில் எத்தனை சதவிகிதம்
இந்த ஆய்வில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. சர்வதேச அளவில் ரஷ்யாவில் ஊதிய உயர்வு 7.2 சதவிகிதமாகவும், தென்னாப்பிரிக்காவில் 6.7 சதவிகிதமாகவும், பிரேசில் நாட்டில் 5.8 சதவிகிதமாகவும், அமெரிக்காவில் 3.1 சதவிகிதமாகவும், ஆஸ்திரேலியாவில் 3 சதவிகிதமாகவும், இங்கிலாந்தில் 2.9 சதவிகிதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ச்சியைப் பொறுத்து சம்பள உயர்வு
நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தைப் பொறுத்து ஊழியர்களுக்கு இரட்டை இலக்க விகிதத்தில் சம்பள உயர்வை அளித்துவந்தன. ஆனால், அது தற்போது குறைந்துவிட்டது. கணினி நிறுவனங்கள், தொழில் துறை சேவைகள், ஆயுள் காப்பீடு, நுகர்வோர் பொருட்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
யாருக்கு எத்தனை சதவிகிதம்
இந்த ஆண்டில் இன்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் 11.1 சதவிகிதம், தொழில் சார்ந்த சேவைகள் 11.1 சதவிகிதம், லைஃப் சயின்சஸ் 10.1 சதவிகிதம், ஆட்டோமேட்டிவ் 10.1 சதவிகிதம் மற்றும் நுகர்வுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் 10.1 சதவிகிதம் என 5 முக்கிய துறைகளில் மட்டுமே இரட்டை இலக்க விகிதத்தில் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
அதிகரிக்கும் செலவீனங்கள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல நிறுவனங்கள் தாங்களாகவே முன் வந்து, லாப அடிப்படையைக் கணக்கில்கொண்டு, ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வை அளித்து வந்தன. ஆனால் இப்போது ஊதிய உயர்வு என்பது அரிதாகி வருகிறது. அப்படியே கொடுத்தாலும் சில சதவிகிதம் மட்டுமே சம்பள உயர்வு கொடுக்கின்றனர். இதற்குக் காரணம் நிறுவனங்களின் லாப விகிதம் குறைந்ததும், செலவினங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதுமே காரணம் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வீட்டு பட்ஜெட்
ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் சம்பள உயர்வின் அடிப்படையிலேயே ஊழியர்கள் பட்ஜெட் போடுகின்றனர். வருமான வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த ஆண்டு ஊதிய உயர்வு 9.7 சதவிகிதம் இருக்கும் என்று கணித்துள்ள மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, 15.6 சதவிகிதம் அளவுக்கு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆபிஸ்ல உங்க பெர்பாமென்ஸ் எப்படி? அதை வைத்து நீங்களே உங்க ஊதிய உயர்வு எவ்வளவு வரும் என்று கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.