மகாராஷ்டிரா: 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நீரவ் மோடியின் 33,000 சதுர அடி சொகுசு சொகுசு வீட்டை ராய்கட் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரை மட்டமாக்கப் போகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் புகழ் நீரவ் மோடி ஊழல் வழக்கில் சிக்கிய பின் ஆண்டிகுவாவுக்கு ஓடிவிட்டார். இப்போது அவருடைய ருபன்யா சொகுசு பங்களா உட்பட 58 கட்டடங்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி கட்டி இருப்பதை மும்பை உயர் நீதிமன்றம் கண்டு பிடித்திருக்கிறது. குறிப்பாக Coastal Regulatory Zone (CRZ) சட்டங்களுக்கு புறம்பாக கட்டி இருக்கிறார்களாம்.
நீரவ் மோடியின் இந்த ருபன்யா வீட்டோடு விதிமுறைகளை மீறி கட்டியிருக்கும் 58 கட்டடங்களையும் நீக்கப் போவதாக அரசு அலுவலகங்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மும்பை நீதிமன்றம்
சம்புரேஜ் யுவ க்ராந்தி (Shamburaje Yuva Kranti) என்கிற என்ஜிஓ அமைப்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் 2009-ல் ஒரு வழக்கு தொடுத்தது. ராய்கட் மாவட்ட கடற்கறைப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டி இருக்கும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பில் 58 கட்டடங்கள் மனுதாரர் சொன்னது போல Coastal Regulatory Zone (CRZ) விதிகளை மீறி கட்டி இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது. எனவே அந்த 58 கட்டடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்
சொகுசுப் பொருட்கள்
இந்த வீட்டில் ஏகப்பட்ட விலை உயர்ந்த பொருட்கள், விலை உயர்ந்த சொஃபா செட்டுகள், இருக்கைகள், சொகுசு நீச்சல் குளம் என பந்தாவுக்கு அத்தனை அம்சங்கள் இருந்ததாம். அவைகளை எல்லாம் ஜனவரி மாதத்திலேயே இடிக்க வசதியாக நீக்கிவிட்டார்களாம். ஆனால் நீக்கிய பொருட்களை யாரிடம் கொடுத்தார்கள் என்கிற விவரங்கள் சொல்லவில்லை.
ஒரு மாதமா..?
கடந்த ஒரு மாத காலமாக நீரவ் மோடியின் இந்த சொகுசு பங்களாவை கொஞ்சம் கொஞ்சமா உடைத்து வருகிறார்களாம். இந்த கட்டடத்தின் அஸ்திவாரம், எல்லாம் கருங்கற்களில் போட்டிருப்பதால் உடைக்கும் பணி மாதக் கணக்கில் நீண்டு கொண்டு இருக்கிறதாம்.
அழுத்தமான வீடு
ருபன்யா பங்களா வீடு தர தளம் + ஒரு மேல் தளம் என கட்டப்பட்டிருக்கிறது. இத்தனை அழுத்தமான அடித்தளம் மற்றும் வலுவான சுவர்களைக் கொண்ட, இந்த வீட்டை விரைவாக இடித்து முடிக்க டைனமைட் வெடி பொருட்களைப் பயன்படுத்தப் போகிறார்களாம்.
அனுபவமிக்கவர்கள்
இதற்கு முன் வெடிபொருட்களைக் கொண்டு பாதுகாப்பாக கட்டடங்களைத் தகர்த்த அனுபவம் கொண்டவர்களை வைத்து தான், ருபன்யா வீட்டையும் தகர்க்கக் போவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இப்போதே டைனமைட்களை எங்கேல்லாம் வைக்க வேண்டுமென திட்டமிட்டு ருபன்யா வீட்டில் துளையிட்டு வருகிறார்களாம். கூடிய விரைவில் இது பற்றிய செய்திகள் வெளியாகும்.