சென்னை: இந்தியாவின் வருமான வரிச் சட்டம் 1961-ன் படி ஒருவர் வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் அவரை ஐந்து ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை கொடுக்கலாம்.
1961 தொடங்கி 2019 வரையான 58 ஆண்டுகளில் இதுவரை ஒருவரைக் கூட வருமான வரி தாக்கல் செய்யாத காரணத்துக்காக சிறையில் அடைத்ததில்லை.
ஆனால் முதல் முறையாக திருப்பதி குமார் கெம்கா என்பவரை 2019-ம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யாத குற்றத்தோடு வேறு பல ஏமாற்று வேலைகளைச் செய்ததற்காக 11 ஆண்டு காலம் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
யார் தீர்ப்பு
பொருளாதார குற்றப் பிரிவு - 1-ன் கூடுதல் முதன்மை நீதிபதியாக பொறுப்பில் இருக்கும் வளர்மதி என்பவர் திருப்பதி குமார் கெம்காவுக்கு இந்த தண்டனையை வழங்கி இருக்கிறார்.
திருப்பதி குமார் கெம்கா
இவர் NEPC group of companies-ன் இயக்குநராகவும், கொல்கத்தாவில் இருக்கும் சாய் டிவியின் உரிமையாளராகவும் பிசினஸ் செய்து லாபம் பார்த்து வருகிறார். இவருக்குத் தான் மேலே சொன்ன 11 ஆண்டுகால சிறை தண்டனையோடு 11 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார்கள்.
ஏன் இந்த கடுமை
1997 - 98 நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை கையில் எடுத்த வருமான வரித்துறையினர் துருவித் துருவி விசாரித்த போது தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் வெளியே வரத் தொடங்கியது. 1997 - 98-ம் ஆண்டில் ஒரு பங்குக்கு 10 ரூபாய் என 1 லட்சம் பங்குகளை வெளியிட்டு 10,00,000 ரூபாய் திரட்டியதை எங்குமே பதிவு செய்யவில்லை. குறிப்பாக வருமான வரித்துறையிடம் இதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.
திருட்டுத் தனம்
வருமான வரித்துறையினரின் விசாரனைகளில்... வேண்டும் என்றே வருமானத்தை மறைக்க முயற்சி செய்வது, போலி கணக்கு வழக்குகள், போலி ஆதாரங்களை சமர்பித்து வழக்கில் இருந்து வெளி வர முயற்சித்தது, வருமான வரியை சரியாக தாக்கல் செய்யாமல் மீண்டும் வேண்டும் என்றே தவறு செய்தது, போலி வங்கிக் கணக்குகள், டாக்குமெண்டுகளைக் காட்டி வருமான வரித்துறையை திசை திருப்பியது என சரமாரியாக தவறுகளைச் செய்திருக்கிறார்.
தண்டனை விவரம்
வருமான வரித்துறையினரின் விசாரனைகளில்
1. வேண்டும் என்றே வருமானத்தை மறைக்க முயற்சி செய்ததற்கு 5 ஆண்டு சிறை, 5 லட்சம் அபராதம்.
2. போலி கணக்கு வழக்குகள், போலி ஆதாரங்களை சமர்பித்ததற்காக 3 ஆண்டுகள் சிறை 2 லட்சம் அபராதம்.
3. வருமான வரியை சரியாக தாக்கல் செய்யாததற்கு 2 ஆண்டுகள் சிறை 2 லட்சம் அபராதம்.
4. போலி வங்கிக் கணக்குகள், டாக்குமெண்டுகளைக் காட்டி வருமான வரித்துறையை திசை திருப்பியதற்காக ஒரு ஆண்டு சிறை மற்ரும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள்.
எத்தனை ஆண்டுகள்
ஆக மொத்தம் 11 ஆண்டுகள் சிறையில் கடுங்காவல் தண்டனையும், 11 லட்சம் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் அதுவும் இந்திய வருமான வரிச் சட்டம் 1961-ம் படி இத்தனை கடுமையான தண்டனை வழங்குவதும் இதுவே முதல் முறையாம்.
சிறையில் கெம்கா
நீதிபதி உத்தரவு வெளியான உடனேயே கெம்காவை புழல் சிறையில் அடைத்துவிட்டார்கள் காவலர்கள். மேலும் கெம்கா செலுத்த வேண்டிய 11 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்றால் இன்னொரு 12 மாதங்கள் கூடுதலாக சிறையில் கழிக்க வேண்டி இருக்கும் எனவும் பொருளாதார குற்றப் பிரிவு நீதிபதி வளர்மதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறாராம்.
முதல் முறை
அரசு தரப்பில் வாதாடிய சிறப்பு அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் "இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யாததற்கு கடுமையான தண்டனையாக ஐந்து ஆண்டுகள் வரை சிறை செல்வது இதுவே முதல் முறை. அதுவும் வருமான வரி தாக்கல் செய்யாததற்கு முழு தண்டனையான 5 ஆண்டுகள் விதித்திருப்பதும் இதுவே முதல் முறை" எனச் சொல்கிறார்.