டெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலையில்லா திண்டாட்டம் 7.2 சதவிகிமாக அதிகரித்தாலும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது போது சற்று குறைவுதான் என்று தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதே காரணம் என்று மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
பாஜக ஆட்சிகாலத்தில் வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்பது எதிர்கட்சிக்களின் குற்றச்சாட்டு. இந்த தேர்தலில் முக்கிய பிரச்சாரமே வேலையில்லாத்திண்டாட்டம் பற்றியதாகத்தான் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து அதிகளவில் இருந்து வருகிறது. மத்திய அரசின் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த மாதம் மட்டும் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் வேலை வாய்ப்பு குறைந்து வருவதுதான்.
சிவகாசி, திருப்பூர் என தமிழ்நாட்டில் பல தொழில் நகரங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று நாள்தோறும் போர்டுகள் தொங்கிக்கொண்டிருக்கும். இன்றைக்கு பலருக்கும் வேலை பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் அதே நேரத்தில் வேலை பார்க்க விரும்பாதவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொருளாதார நிபுணர்கள்
தேசிய பொருளாதார கண்காணிப்பு மையம் வேலையில்லா திண்டாட்டம் பற்றி புள்ளி விவரத்தை நடத்தியது. நாடேங்கிலும் உள்ள சுமார் 10ஆயிரம் குடும்பங்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மத்திய அரசின் மூலம் பல பொருளாதார நிபுணர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களைக் காட்டிலும் அதிக நம்பகத்தன்மை உடையது எனக் கருதப்படுகிறது.
வேலை வாய்ப்பு குறைவு
இந்தியாவில் வேலை வாய்ப்பு குறைந்து வரும் நிலையில், வேலை தேடுபவர்கள் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் குறித்த தெளிவான அறிக்கையை வெளியிட மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதற்கு வரவிருக்கம் லோக்சபா தேர்தலே காரணம் என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7.2 சதவிதமாக அதிகரித்துள்ளது என்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக 2016ஆம் ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 5.9 சதவீதமாகவே இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் தான் வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட தயக்கம் காட்டி வருவதாக எதிர் கட்சிகள் புகார் வாசிக்கின்றன.
போட்டி மனப்பான்மை
வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் அதே சமயத்தில் வேலையைத் தேடும் நபர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. இதற்கு காரணம் போட்டி மனப்பான்மையும் தன்னம்பிக்கையும் இல்லாததே என்று மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திங்க் டாங்க் நிறுவனத்தின் தலைவர் மகேஷ் வியாஸ் கூறியுள்ளார்.
40 கோடி பேருக்கு வேலையில்லை
தேசிய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வானது கடந்த சில வாரங்களுக்கு முன்பு உள்ளூர் நாளிதழ்களில் வெளியானது. அதில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது கடந்த 45 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு அதிகரித்துவிட்டது என்று வெட்டவெளிச்சமாக்கியது. அதில் இந்தியாவில் வேலைக்குச் செல்பவரின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 40 கோடி இருந்தது. இதுவே சென்ற ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 40.6 கோடியாக இருந்துள்ளது.
புள்ளி விபரம் வெளியிட தாமதம்
புள்ளி விபரங்கள் புட்டு புட்டு வைத்தாலும் கூட, இது நம்பத் தகுந்தது அல்ல என்று மத்திய அரசு மறுத்துவந்தது. அதற்கு காரணம் வரும் மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலில் மோடியின் வெற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், இந்த அறிக்கையை வெளியிட மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வல்லுநர்களும் இந்தக் கருத்தை ஆமோதிக்கின்றனர்.
செல்லாமல் போன ரூபாய் நோட்டு
இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் மற்றொரு புள்ளி விவரத்தையும் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடியே 10 லட்சம் பேர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல், சடந்த 2016ஆம் ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் 2017ஆம் ஆண்டு ஜூலையில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பி முறையால், சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் பெருமளவில் நஷ்டமடைந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனாலும் கூட, அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு பாராளுமன்றத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு வணிகர்கள் பாதித்ததாகத் தங்களிடம் தரவு ஏதுமில்லை என்றும் கூறியது.
நிபுணர்கள் கருத்து
வேலை இல்லாத் திண்டாடட்டம் ஆண்டு தோறும் கூடிக்கொண்டே செல்வதற்கான காரணம் முறையான கல்வித்திட்டம் இல்லாதே என்பது கல்வியாளர்களின் கருத்து. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஊருக்கு ஒரு பொறியியல் பட்டதாரி இருந்தார். பின்னர் படிப்படியாக கூடிக்கொண்டே வந்து தற்போது ஒரே வீட்டில் நாலைந்து பொறியியல் பட்டதாரிகள் உள்ளனர். வாழ்க்கையை முறையாக வாழ்வதற்கு பயன்படும் இயற்கையான நடைமுறை கல்வி முறையை புகுத்தாதே என்பது கல்வியாளர்களின் வேதனை.