டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்னர் 2017ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது வருமான வரிச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கருப்பு பணம், கள்ளப்பணத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி உயர்பணமதிப்பு கொண்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என அறிவித்தது. ஒரே நாளில் பல கோடி ரூபாய்கள் செல்லாத ரூபாய் நோட்டுக்களாக மாறின. பதற்றமடைந்த மக்கள் ஏடிஎம்களுக்கு படையெடுத்தனர். நள்ளிரவிலும் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து பத்திரப்படுத்தினர்.
பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் தங்கள் வசம் உள்ள செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யவும் 50 நாட்கள் வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் தங்கள் வசம் வைத்திருந்த செல்லாத நோட்டுக்களை ரிசர்வ் வங்கிகளில் முறையான ஆவணங்களைக் காட்டி மாற்றிக்கொள்ளவும் 2017ஆம் ஆண்டு மார்ச் இறுதி வரையிலும் கால அவகாசம் தரப்பட்டது.
வருமான வரி ரிட்டன் தாக்கல்
வழக்கத்திற்கு மாறாக அதிகமான ரொக்கப் பணத்தை டெபாசிட் செய்தவர்களைப் பற்றிய விவரங்களை அளிக்குமாறு வங்கிகளுக்கும் வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. செல்லா நோட்டு அறிவிப்புக்கு பின்னர் சுமார் 3 லட்சம் பேர் வங்கிகளில் டெபாசிட் செய்தனர். அவர்கள் கடந்த 2017-18ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்யாததால், வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
87000 பேர் டெபாசிட்
வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களையும் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு அமைதியாக இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதில் சுமார் 87000 பேர் மேற்கொண்ட டெபாசிட்டுகளுக்கு எந்தவிதமான நம்பகமான ஆதாரங்களும் இல்லாததால் அவர்களின் கணக்குகளை முறையாக தணிக்கை செய்து வரும் ஜூன் மாதத்திற்குள் நடவடிக்கை வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய நபர்கள்
செல்லாத நோட்டு அறிவிப்பு நடைபெற்ற 2016-17ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது, அந்த ஆண்டில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை டெபாசிட்டுகளையும் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது. அந்த வகையில் சுமார் 3 லட்சம் பேர் சந்தேகத்திற்குரிய வகையில் அதிகமான ரொக்கப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆதாரங்கள் தாக்கல்
சந்தேக வட்டத்தில் இருந்தவர்களை பட்டியலிட்டு, அவர்களுக்கு வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் சுமார் 2.3 லட்சம் பேர் அளித்த விளக்கங்கள், ஆதாரங்கள் மற்றும் வருமான வரி ரிட்டன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் சந்தேக வட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.
வருமானவரித்துறை கிடுக்கிப் பிடி
இறுதியில், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களை கண்டுகொள்ளாமல் விட்டவர்களை கணக்கெடுத்ததில் 87000 பேர் 2017ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது வருமான வரிச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம்
2017ஆம் ஆண்டுக்கான முறையான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத 87000 பேர்களின் கணக்குகளை தணிக்கை செய்து வருமான வரிச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாதது, திருத்திய ரிட்டன் தாக்கல் செய்யாதது, வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களுக்கு எந்தவிதமான பதிலும் அளிக்காமல் உதாசீனப்படுத்தியது போன்றவற்றுக்காக, அவர்களிடம் இருந்து கூடுதல் வரியும் அபராதமும் வசூலிக்க வேண்டும் என்றும், இதனை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.