டெல்லி: கிராஜூவிட்டிதொகைக்கான உச்சவரம்பை 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இது கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நிறுவனங்களில் சேர்ந்து நெடுங்காலமாக சிறப்பான முறையில் பணி புரிந்ததற்காக தனது ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் ஒரு நன்றித் தொகையே கிராஜூவிட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராஜூவிட்டி பணியாளர்கள் நிறுவனங்களை விட்டு விலகும் போது வழங்கப்படுகிறது. பல காரணங்களுக்காக பணியாளர்கள் நிறுவனங்களை விட்டு விலகலாம். ஆனால் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு இந்த கிராஜூவிட்டித் தொகை ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
வருமானவரி சட்டத்தின்படி, ஒரு ஊழியர் ஒருவர், ஒரு நிறுவனத்தில் சேர்ந்து 5 ஆண்டுகள் முழுமையாக பணிபுரிந்தாலோ அல்லது தான் ஓய்வு பெறும் வரை அங்கு பணிபுரிந்தாலோ அவர் கிராஜூவிட்டி பெற தகுதி பெறுகிறார். தற்போது கிராஜூவிட்டிதொகைக்கான உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், சுரங்கங்கள், எண்ணெய் நிறுவனங்கள், கப்பல், ரயில்வே கம்பெனிகள், கடைகள் உள்ளிட்ட 10 மற்றும் அதற்கும் மேல் ஊழியர்கள் பணிபுரியும் தனியார் நிறுவனங்களுக்கும் ரூ.20 லட்சம் வரையிலான வரியில்லா கிராஜூவிட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் பணியாளர்
நிறுவனத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால் அவர்கள் ஓய்வு பெறும்போது, பணியாற்றிய காலத்துக்கு ஏற்ப கணக்கிட்டு கிராஜூவிட்டி வழங்கப்படுகிறது. தற்போது முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக ஒரு ஊழியர் பணிபுரிந்த பிறகு நிறுவனத்தினை விட்டு வெளியேறுகின்றார் என்றால் 10 லட்சம் ரூபாய் வரை அவருக்கு வரி விலக்குடன் கிராஜூவிட்டி கிடைத்து வந்தது.
ரூ. 20 லட்சம் உச்சவரம்பு
ஆண்டுதோறும் உயரும் சம்பளம் மற்றும் அப்போதைய பொருளாதார வளர்ச்சி, சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவ்வப்போது பணிக்கொடைக்கான வரிச்சலுகை உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கிராஜூவிட்டிக்கான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள்
இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் கடந்த 12 மாதங்களில் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இனி பணி ஓய்வு பெறுபவர்கள் பலன் பெறுவார்கள். வருமான வரி சட்டம் 1961 பிரிவு 10 (10) (iii)ன்படி இந்த வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த புதிய சலுகை அறிவிப்பால் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பணிக்கொடை சட்டத்தில் உட்படாத பல லட்சம் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
கிராஜூவிட்டிக்கு வரி விலக்கு
பொதுவாக, கிராஜூவிட்டி பெறுகிறவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றனர். அரசுப் பணியில் கிராஜூவிட்டி பெறுபவர்கள், கிராஜூவிட்டி சட்டத்தின்கீழ் தனியார் நிறுவனப் பணியில் உள்ளவர்கள், கிராஜூவிட்டி சட்டத்திற்கு உட்படாத மற்ற பணியாளர்கள் மேற்கண்ட வகைப்படுத்தலின்படி கிராஜூவிட்டி வரிவிலக்கு நிர்ணயிக்கப்படும்
ரூ. 20 லட்சமாக அதிகரிப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 6வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் கடந்த 2008ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. அதையடுத்து அமைக்கப்பட்ட 7வது சம்பள கமிஷன், தனது சிபாரிசுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு 7வது சம்பள கமிஷன் மூலம், 01.01.2016 முதல் கிராஜூவிட்டி ரூ.20 லட்சமாக உயர்த்தியது குறிப்பிடத் தக்கது. ஆகையால், இந்தச் சட்டத்திற்குப்பின், அரசுப் பணியில் அல்லாத மற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலன் பெறுவார்கள்.
ஒருவருக்கு நிறுவனம் கொடுத்த கிராஜூவிட்டி, வருமான வரியைக் கணக்கிடும்படியான கிராஜூவிட்டி ரூ.20,00,000க்கு அதிகமாக இருந்தால், அவருக்கு ரூ.20,00,000 வரி இல்லா கிராஜூவிட்டியாக கிடைக்கும்.