டெல்லி: இதுவரையிலும் அதிக விலை உயர்ந்த கார்கள் மற்றும் விலை உயர்ந்த நகைகள் வாங்கும்போது நாம் முன்கூட்டி வசூலிக்கும் (Tax Collection at Source) வரியான 1 சதவிகிதத்தையும் சேர்த்தே ஜிஎஸ்டி வரியை செலுத்தி வந்தோம். இனிமேல் அப்படி செலுத்த தேவையில்லை என்று மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. மறைமுக வரிகள் வாரியத்தின் விரிவான விளக்கம் தொழில் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருக்கக்கூடும். குறிப்பாக வாகன விற்பனையாளர்களுக்கு சந்தோசமான விஷயமாகும்.
வாங்கும் பொருளுக்கு முன்கூட்டி வசூலிக்கும் வரியையும் (TCS) உள்ளடக்கி கார்கள் மற்றும் நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால், மறைமுகமாக கார்கள் மற்றும் நகைகளின் விலை உயர்கின்றது. இதனால் அதிக விலை உயர்ந்த கார்களின் விற்பனையும் பாதிப்படைகிறது.
விலை உயர்ந்த கார்கள், நகைகள் மீதான முன்கூட்டி வசூலிக்கும் 1 சதவிகித வரியானது நீக்கப்படுவதால், இனிமேல் கார்கள், நகைகளின் விலை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.
விலை உயர்ந்த கார்கள்
சாதாரணமாக நாம் பொருட்களை வாங்கும்போது அதற்கான ஜிஎஸ்டி வரியையும் சேர்த்தே தரவேண்டும். அதுவே விலை உயர்ந்த கார்கள், விலை உயர்ந்த நகைகள், அதாவது, 10 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான விலை உயர்ந்த கார்கள் வாங்கினாலும், 5 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான நகைகள் (Jewellery) வாங்கினாலும், 2 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான தங்கக்கட்டிகள் (Bullion) வாங்கினாலும், அதை உத்தேச வருமானமாக கருதி, அதற்கு வரியாக முன்கூட்டி செலுத்தும் (வசூலிக்கும்) வரி(TCS)யாக 1 சதவிகித்தையும் சேர்த்த, கூடவே ஜிஎஸ்டி வரியையும் அழவேண்டும்.
விற்பனை பாதிப்பு
கார்கள் மற்றும் நகைகள் வாங்கும்போது பிடித்தம் செய்யும் TCS வரியையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி செலுத்துவதால், அவற்றின் மீதான விலை செயற்கையாக உயர்கின்றது. இதனால் அவற்றின் விற்பனையும் பாதிக்கிறது. ஆகவே, கார்கள் மற்றும் நகைகள் வாங்கும்போது முன்கூட்டி செலுத்தும் TCS வரியை தவிர்த்து பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கவேண்டும் என்று கார் மற்றும் நகை விற்பனையாளர்கள் மத்திய மறைமுக வரிகள் வாரியத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
மத்திய மறைமுக வரிகள் வாரியம்
இவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத மத்திய மறைமுக வரிகள் வாரியம் (Cetral Board of Indirect Taxes and Customs) கடந்த டிசம்பர் மாதம் விளக்கம் அளித்தது. அதில் வருமான வரிச் சட்டத்தின் படியே கார்கள், நகைகள் வாங்கும்போது செலுத்தும் TCS வரியையும் சேர்த்தே ஜிஎஸ்டி வரியை கணக்கிடவேண்டும் என்று விளக்கம் அளித்தது. TCS வரிப் பிடித்தம் என்பது வாங்கும் பொருளின் மீதான வரி கிடையாது. விற்பனை செய்யப்படும் பொருளின் மீதான தற்காலிக வருமானமாக கருதி பிடிக்கப்படும் தற்காலிக நிவாரணம். வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது செலுத்தவேண்டிய மொத்த வரியில் இருந்து முன்கூட்டி செலுத்திய(வசூலிக்கப்பட்ட) வரியை கழித்தது போக மீத வரியை மட்டும் செலுத்தினால் போதும் என்று விளக்கமளித்தது.
ஜிஎஸ்டி இனி கிடையாது
ஆகவே, இனிமேல் 10 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான விலை உயர்ந்த கார்கள், 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள், 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தங்கக்கட்டிகள் வாங்கும்போது, எப்போதும் போலவே TCS வரியானது வசூலிக்கப்படும். ஆனால் ஜிஎஸ்டி வரியானது பொருளுக்கு மட்டுமே விதிக்கப்படும். எனவே, இனிமேல் விலை உயர்ந்த கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்கள் விலை குறையும்
மறைமுக வரிகள் வாரியத்தின் விரிவான விளக்கம் தொழில் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருக்கக்கூடும். குறிப்பாக வாகன விற்பனையாளர்களுக்கு சந்தோசமான விஷயமாகும். பெரும்பாலான தொழில் துறையினர், பொருளின் விலையுடன் முன்கூட்டி வசூலிக்கும் TCS வரியையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கக்கூடாது என்று விளக்கம் அளித்தும் மத்திய மறைமுக வரிகள் வாரியம் சட்டை செய்யவில்லை. இதற்காக வழக்கும் தொடரப்பட்டது. தற்போது மறைமுக வரிகள் வாரியமே இதற்கான விளக்கத்தை அளித்துவிட்டது எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது, என்று ஈஒய் இந்தியா (EY India) நிறுவனத்தின் இணை வரி ஆலோசகர் அபிஷேக் ஜெய்ன் கூறினார்.
வரிப்பிரச்சினைக்குத் தீர்வு
ஏஎம்ஆர்ஜி அண்டு அசோசியேட் (AMRG & Associates) நிறுவனத்தின் இணை வரி ஆலோசகரான ரஜத் மோகன் கூறும்போது, நல்லவேளையாக மறைமுக வரிகள் வாரியமே நேரடியாக தலையிட்டு TCS வரிப் பிரச்சனைக்கு தீர்வு அளித்துள்ளது. இல்லாவிட்டால் தொழில் துறையினருக்கு ஜிஎஸ்டி மற்றும் TCS வரி கணக்கிடும் முறையில் குழப்பம் ஏற்பட்டு இருக்கும் என்றார்.