மும்பை: 1992-ல் தொடங்கப்பட்டு 1995-ம் முழு பயணிகள் விமான சேவைக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் 2010-ம் ஆண்டில் இந்தியாவின் அதிக விமானப் பயணிகள் பயணிக்கும் நிறுவனமாக முதல் இடத்தில் இருந்தது.
அதன் பின் 2012 வரை இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டது ஜெட் ஏர்வேஸ். ஆனால் இண்டிகோவின் வருகைக்குப் பின் முதல் இடத்தைப் பறி கொடுத்துவிட்டது.
இப்போது 17.8% இந்தியப் பயணிகள் பயன்படுத்தும் விமான சேவை நிறுவனமாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
நிதிப் பற்றாக்குறை
நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிறுவனத்துக்கு கடந்த சில காலாண்டுகளாக பலமான பண நெருக்கடி. இந்த நிறுவனம் தன் ஊழியர்களுக்கு கூட ஒழுங்காக நேரத்தில் சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் அளவுக்கு பணப் பற்றாக்குறை இருக்கிறது. அதை எல்லாம் சமாளிக்க உடனடியாக பணத் தேவை இருந்தது. பணத்தைப் புரட்ட பல வழிகளிலும் முயற்சித்தது ஜெட் ஏர்வேஸ்
பறக்கத் தடை
பொதுவாக பயணிகள் விமான நிறுவனங்கள் தாங்களே சொந்தமான விமானத்தை வாங்குவார்கள் அல்லது விமானத்தை லீஸுக்கு எடுப்பார்கள். ஜெட் ஏர்வேஸ் தன் பல விமானங்களை லீஸுக்குத் தான் எடுத்திருந்தது. லீஸுக்கான பணத்தைச் செலுத்தாததால் ஏகப்பட்ட விமானத்தைப் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களால் பயன்படுத்த முடியாமல், பயணங்களை ரத்து செய்ய வேண்டி இருந்தது.
இதை எல்லாம் செய்வேன்
கொஞ்சம் பணம் தேவை. பணம் இருந்தால் தான் நிறுவனத்தை நடத்தவே முடியும். முதலில் பணம் வந்த உடன் விமானங்களுக்கான லீஸ் தொகைகளை முழுமையாகக் கொடுக்க வேண்டும். விமான எரிபொருட்களுக்கான பாக்கித் தொகைகளை கொடுத்து செட்டில் செய்து அனைத்து விமானப் பயணங்களையும் மீண்டும் தொடங்குவோம் என்றார்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினர்கள்.
முன் வந்த பிஎன்பி
தற்போது ஜெட் ஏர்வேஸை உடனடியாக கடன் கொடுத்து காப்பாற்ற பஞ்சாப் நேஷனல் பேங்க் முன் வந்திருக்கிறது. வெளிநாட்டு கரன்ஸி கடனாக 1100 கோடி ரூபாயும், சொத்துக்களை அடமானமாக எடுத்துக் கொண்டு 950 கோடி ரூபாயையும் கடனாக கொடுத்திருக்கிறது பஞ்சாப் நேஷனல் பேங்க்.
இன்று பங்கு விலை
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் 243.25 ரூபாய்க்கு வர்த்தகமானது ஜெட் ஏர்வேஸ் பங்குகள். இன்று காலை முதலே பஞ்சாப் நேஷனல் பேங்க் கடன் செய்திகளால், 252 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நிலைப் பெற்று வர்த்தக நேர முடிவில் 247.40 ரூபாய்க்கு வர்த்தகமானது.
காத்திருக்கும் சவால்கள்
எப்படியோ கடன் வாங்கி இப்போதைக்கு தன் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த பிரச்னையில் இருந்து வெளியேறி இருக்கிறது ஜெட் ஏர்வேஸ். ஆனால் இந்த கடனையும் திரும்ப செலுத்தி நிறுவனத்தையும் லாபத்தில் கொண்டு வருவது தான் அடுத்து ஜெட் ஏர்வேஸ் முன் காத்திருக்கும் மிகப் பெரிய சவால்.