டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்த தகவல் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்னர் பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இவ்வாறு பதில் அளித்துள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்யப்பட்ட பின்னர் பொதுமக்கள் பயன்படுத்திய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 99.3 சதவிகித ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கே திரும்பி வந்துவிட்டதாகவும் கடந்த ஆகஸ்டு மாதம் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உயர் மதிப்பிழான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு 50 நாட்கள் வரையிலும் காலக்கெடு விதிக்கப்பட்டது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு 2017ஆம் ஆண்டு மார்ச் இறுதி வரையிலும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்தலாம்
பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய குவிந்தனர். இதனை அடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை தினசரி அத்தியாவசிய பொருட்களுக்காக பயன்படுத்தும் பெட்ரோல் நிலையங்கள், மருந்துக் கடைகள், அரசு மருத்துவ மனைகள், அரசு மற்றும் தனியார் மருந்துக் கடைகள், அரசு பேருந்துகளின் சீசன் டிக்கெட், விமான டிக்கெட்டுகள், ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் கட்டணம் செலுத்த என 23 அத்தியாவசியப் பயன்பாடுகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரையிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது.
500 ரூபாய் மட்டுமே பயன்படுத்தலாம்
பின்னர் நவம்பர் 25ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென அறிவிப்பு வெளியிட்டது. அதில், பொதுமக்கள் தங்ளிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும், அதுவும் பெட்ரோல் நிலையங்கள், விமான டிக்கெட்டுகளுக்கு மட்டுமே டிசம்பர் 15ஆம் தேதி வரையில் மட்டும் பயன்படுத்த முடியும் என்று அறிவித்து அதிர்ச்சி அளித்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், செல்லா ரூபாய் நோட்டு அறிவிப்பு நடவடிக்கைக்கு பின்னர், பொதுமக்கள் அத்தியாவசிய பயன்பாட்டுக்காக பெட்ரோல் நிலையங்கள், பால் பூத், ரயில் டிக்கெட் ஆகியவற்றுக்கு பயன்படுத்திய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
விபரம் இல்லை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, இது போன்ற கட்டணம் செலுத்த பயன்படுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்கள் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செல்லாது என அறிவிக்கப்பட்டதில், 99.3 சதவீத ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கே திரும்பி விட்டதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
99.3 சதவிகித நோட்டுக்கள்
செல்லாத நோட்டுகள் திரும்ப வந்தவற்றின் மதிப்பு எவ்வளவு என்ற புள்ளி விவரத்தை, 2017ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதில் 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி வரையிலும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.41 லட்சம் கோடி ஆகும். அதில் சுமார் 99.3 சதவிகித நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.