மும்பை: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து டாலரில் இந்தியாவில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த மார்ச் 01-ம் தேதியில் இருந்து இன்று வரை, வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் 833.26 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறார்கள்.
அதே போல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் கடன் பத்திரங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் கடன் சார்ந்த முதலீடுகளில் மட்டும் 586 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்திருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து மார்ச் 11-ம் தேதி வரை இந்திய பங்குச் சந்தைகளில் 3.13 பில்லியன் டாலரும், இந்திய கடன் சந்தைகளிலும், கடன் பத்திரங்களிலும் 1 பில்லியன் டாலரும் முதலீடு செய்திருக்கிறார்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் நுகர்வோர் பணவீக்கத்தையும் கவனித்து வருகிறார்கள். கடந்த ஜனவரி 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் வெறும் 2.05 சதவிகிதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.89 ரூபாயாக இருந்தது. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே மீண்டும் 0.24 சதவிகிதம் ஏற்றம் கண்டு 69.71 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது டாலர். இப்போது மேலும் 11 பைசா குறைந்து 69.60 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டும் இல்லாமல் மொத்த ஆசிய கரன்ஸிகளுமே இன்றும் டாலருக்கு நிகரான விலையில் மதிப்பு அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன.