பெங்களூரு: இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே கோடீஸ்வரர்களை அதிகமாக உருவாக்கும் திறன் கொண்ட நகரமாக பெங்களூரு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நைட் பிராங்க் (Knight Frank) நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 163ஆக உயரும் என்று கூறியுள்ளது. இதில் 40 சதவிகித பங்களிப்பை பெங்களூரு நகரம் தன் வசம் வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
நுகர்வோரை மையமாகக் கொண்டு வேகமாக வளரும் திறமையைக் கொண்டுள்ள தொழில்கள், சேவையைப் பெறும் வகையில் வாழ்க்கைத்தரமும் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ள இடமாக பெங்களூரு இருப்பதால் தான் இந்திய கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் பெங்களூரு முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் புதிய தொழில் தொடங்குவது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால், இன்று அதுதான் உலகிலேயே மிக எளிமையான விஷயமாக மாறிவிட்டது. நுகர்வோரை மையமாகக் கொண்ட தொழில்கள், வேகமாக வளரும் திறனைக் கொண்டுள்ளன. அதேசமயம் சேவையைப் பெறும் அளவுக்கு வாழ்க்கைத்தரமும் வருமானமும் உயர்ந்திருக்க வேண்டுமே. இவை அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ள நகரமாக இடமாக பெங்களூரு உள்ளது.
மாத்தி யோசித்தால் வாழ்க்கை மாறும்
ஒரு காலத்தில் பணக்காரர்களின் வளர்ச்சி என்பது பரம்பரை சொத்து, பரம்பரை தொழில் போன்றவற்றின் அடிப்படையிலான வளர்ச்சியாகவே பெரும்பாலும் இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மின்னல் போன்ற ஒரு ஐடியா நமது வாழ்க்கைப் பாதை மாற்றும் சக்தி கொண்டது. அந்த அளவுக்கு திறமைக்கும் தொழில்நுட்ப நுண்ணறிவுக்கும் இப்போது மதிப்பு அதிகம்.
பணம் திரட்டும் வழிகள்
இன்றைக்கு இணையதள பயன்பாடு அதிகரித்ததால் ஆன்லைன் தொழில்களான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்கும் ஐடியாவும், நீண்டகால வளர்ச்சிக்கான பிசினஸ் மாடலும் உங்களிடம் இருந்தால் போதும், பைசா செலவில்லாமல் ஒரே நாளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். முதலீடு செய்ய உலகின் எந்த மூலையிலிருந்தும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அதுபோக, ஐபிஓ உள்ளிட்ட பணம் திரட்டும் வழிகளும் உள்ளன. நிகழ்கால உதாரணங்கள் பேடிஎம், ஓயோ, ஓலா, பிளிப்கார்ட்.
பெங்களூருவின் வளர்ச்சி
சொத்து உருவாக்கம், புதிய முயற்சிகள், பொருளாதார வளர்ச்சி, நகரின் உள்கட்டமைப்பு மற்றும் பிற தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை வளர்ச்சியின் முக்கிய காரணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேற்கண்ட அனைத்து காரணிகளிலும் பெங்களூரு மற்ற இந்திய நகரங்களைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. பெங்களூரு நகரத்தின் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதி, தொழில்நுட்ப வசதிகள், மக்களின் வாழ்க்கை முறை, தனிநபர் வருமான வளர்ச்சி, நுகர்வு சந்தை என அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளன.
அழகிய சுற்றுலா நகரம்
1980ஆம் ஆண்டுகளில் பெங்களூருவைப் பொருத்தவரை கார்டன் சிட்டி, ஜில்லென இருக்கும் அழகிய சுற்றுலா நகரமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. நாராயண மூர்த்தி மற்றும் அசிம் பிரேம்ஜி என்னும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்ஃபோசிஸ்(Infosys Ltd) மற்றும் விப்ரோ (Wipro Ltd) நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி இன்றைக்கு உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்துள்ளதற்கு முக்கிய காரணம் பெங்களூரு நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகள்தான். இன்றைக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகராக மாறியுள்ளது.
முன்னணி நகரம் பெங்களூரு
டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் இந்தியச் சந்தைகளின் நுழைவாயிலாகவும், பொருளாதார வளர்ச்சியில் முன்னணியிலும் இருந்தாலும், எதிர்கால வளர்ச்சிக்கான முன்னணி நகரமாக பெங்களூரு மாறுவதற்கான அத்தனை சாத்தியங்களுடனும் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, குறுகிய காலத்தில் பல ஏற்ற இறக்கங்களையும், நிலையற்ற தன்மையையும் சந்தித்துக் கொண்டிருந்தாலும், வேகமாக வளரும் நாடுகளில் முன்னணியில் இருக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதைப் பல்வேறு ஆய்வறிக்கைகளும் உறுதிபடுத்துகின்றன.
100 கோடிக்கு மேல் சொத்து
இந்தியாவில் 100 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் எண்ணிக்கை 39 சதவிகிதம் உயரும் என இந்த ஆய்வு கூறியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்து இடங்களில் பிலிப்பைன்ஸ் 38 சதவிகித்துடனும், சீனா 35 சதவிகிதத்துடனும் உள்ளன. இந்திய கோடீஸ்வரர்கள் தங்களின் பணப்புழக்கத்தைக் குறைத்துக்கொண்டு அவற்றை முதலீடுகளாக மாற்ற தீவிரம் காட்டுகிறார்கள். இதனால் அவர்களின் சொத்து மதிப்பும் உயர்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
பெங்களூருவில் கோடீஸ்வரர்கள்
இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் 40 சதவிகிதம் பெங்களூருவில்தான் உள்ளனர். இதனால் உலகின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய நகரங்களில் பெங்களூரு இடம்பெற்றுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 36வது இடத்திலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி 962வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.