மும்பை: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில ஆளும் பாஜக கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியானதால் மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' குறியீடு ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் 37000 புள்ளிகளை தாண்டியது.
கடந்த சில நாட்களாக மந்தமாகவே இருந்து வந்த இந்தியப் பங்குச் சந்தைகள், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட உடனே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. சற்று மேல் நோக்கி எழும்பிய பங்குச் சந்தைகள் வரும் லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவே மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியானதால், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 37000 குறியீடுகளை தாண்டியது.
மீண்டும் பாஜகவே ஆட்சிக் கட்டிலில் ஏறும் என்ற நம்பிக்கையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களும் போட்டி போட்டு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தலால், 6 மாதங்களுக்கு பின்னர் மும்பை சென்செக்ஸ் மீண்டும் 37000 புள்ளிகளை தாண்டி நிலை பெற்றது.
பங்குச்சந்தை டல்
கடந்த சில வாரங்களாகவே, இந்திய பங்குச் சந்தைகள் எந்தவிதமான சுறுசுறுப்பும் இல்லாமல், உப்பு இல்லாத உப்புமா போலவே இயங்கிவந்தது. பங்குச் சந்தைகளை உசுப்பேற்றும் காரணிகள் ஏதும் இல்லாததால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல், ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தனர்.
ராணுவ நடவடிக்கை
இந்நிலையில், கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனங்களின் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து சற்று சரிந்தது. ஆனாலும் கூட, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நுழைந்து தீவிரவாத முகாம்களின் மீது மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த அதிரடி தாக்குதலில் பாக் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட்டார். இதனால் அன்றைய தினம் இந்தியப் பங்குச் சந்தைகள் சற்று ஏற்றம் கண்டன. இருந்தாலும் அதற்கு பின்னர் சந்தைகள் சற்று மந்தமாகவே இருந்து வந்தன.
பங்குச்சந்தை உற்சாகம்
தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, பாகிஸ்தான் அபிநந்தனை, இரண்டரை நாட்களில் விடுவித்தது. இது, மத்தியில் ஆளும், பாஜக அரசுக்கு, பொது மக்களிடம் மிகப் பெரிய ஆதரவை பெற்றுத் தந்துள்ளது. இதனால், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில், பங்கு முதலீடு அதிகரித்துள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் போட்டி போட்டு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர், என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
பங்குச்சந்தை எழுச்சி
நேற்று, மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதியில், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான ‘சென்செக்ஸ்' 382.67 புள்ளிகள் உயர்ந்து, 37,054 புள்ளிகளில் நிலை கொண்டது. இது, கடந்த 2018ஆம் ஆண்டில், செப்டம்பர் 19ம் தேதி காணப்பட்ட, 37,121.22 புள்ளிகளுக்கு பின் ஏற்பட்ட, அதிகபட்ச உயர்வாகும். அதுபோலவே தேசிய பங்குச் சந்தைக் குறியீடான ‘நிப்டி' 132.65 புள்ளிகள் உயர்ந்து, 11,168. 05 புள்ளிகளில் நிலை பெற்றது. இதுவும், கடந்த 2018ஆம் ஆண்டில், செப்டம்பர் 26ஆம் தேதிக்கு பின் காணப்படும் அதிகபட்ச உயர்வு ஆகும்.
மே மாதம் வரை நீடிக்கும்
மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத் துறை நிறுவனங்கள், உலோகம், வங்கி, ஆரோக்கிய பராமரிப்பு, பொறியியல் சாதனங்கள், அடிப்படை கட்டமைப்பு, வாகனம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் அதிக அளவில் வர்த்தகமாகின. பங்குச் சந்தையின் இந்த புதிய உற்சாகம் லோக்சபா தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கினர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், மே, 23ஆம் தேதியன்று, பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற, இறக்கத்துடன் (Volatile) இருக்க வாய்ப்பு உள்ளதாக, சந்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி
ஆசியா - ஐரோப்பிய நாடுகளின் பொதுத் தேர்தல் அறிவிப்பும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சாதகமான நிலவரங்களும், நேற்று இந்திய பங்குச் சந்தையின் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது. அண்டை நாடான சீனா, பொருளாதார மந்தநிலையில் இருந்து, நாட்டை எழுச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, மேலும் பல ஊக்குவிப்பு கொள்கைகளை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, சீனாவிலும், நேற்று பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஆசியாவின் இதர நாடுகளிலும், பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சிறப்பாக இருந்தது.
கருத்துக்கணிப்பால் உற்சாகம்
அந்நியச் செலாவணி சந்தையில், கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தது. ஆனால், வரும் லோக்சபா தேர்தலில் வெற்று பெற்று பாரதீய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பு முடிவால் வர்த்தகத்தின் இடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 21 காசுகள் அதிகரித்து, 69.03 ரூபாயை எட்டியது.