சிகாகோ: எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி 157 பேர் உயிரிழந்தனர்.
இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது. அதில் 189 பேர் பலியானார்கள்.
இந்த தொடர்ச்சிக்குப் பின் ஒவ்வொரு நாடாக முன் வந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை பயன்படுத்தத் தடை விதித்து வருகிறது. சீனா, எத்தியோப்பியா, இந்தியா, கேமன் தீவுகள், அர்ஜெண்டினா, மெக்ஸிகோ என நாடுகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
நீதிமன்ற வழக்கு
இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் இந்தோனேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்லது. இல்லியானாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகர கோர்ட்டில் 35 வழக்குகளும், சியாட்டில் நகர கோர்ட்டில் ஒரு வழக்கும் தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அமெரிக்க தரப்பு
இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியாவில் நடந்த விமான விபத்துக்கும் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்க முடிவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் வாங்குவதற்கான உத்தரவையும் அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
நேற்று
அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக தலைவர் டேனியல் எல்வெல் "தற்போது வரை நாங்கள் செய்த ஆய்வுகளின் படி, செயல்திறன் அமைப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, இந்த ரக விமானத்துக்கு பறக்க தடை விதிப்பதற்கு எந்த காரணமும் இல்லை." எனச் சொல்லி இருந்தார் என்பதும் கவனிக்கத் தக்கது.
அமெரிக்க அதிபர்
அமெரிக்க மக்களின் பாதுகாப்பும் , நலனும் தான் எங்களுக்கு முக்கியம் ஆகவே அமெரிக்க மக்கள் நலனை கருத்தில் கொண்டு போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தைப் பயன்படுத்த அமெரிக்க விமான சேவை நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.