டெல்லி: முத்ரா திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்கிற சர்வேக்களை Labour Bureau எடுத்தது. சில தவறான கணக்கீடுகளால் இப்போது முத்ரா மூலம் எவ்வளவு வேலை கிடைத்திருக்கிறது என்கிற விவரங்கள் பொது வெளியில் கொடுக்கப் படாது எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தேர்தல் நடந்து முடிந்த பின் தான் வெளியிடப்படும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தேர்தலுக்கு முன், வேலை வாய்ப்பு தொடர்பாக அரசு மறைக்கும் மூன்றாவது தரவுகள் அறிக்கை இது.
2 மாதம் அவகாசம்
கடந்த மார்ச் 08-ம் தேதி ஒரு நிபுணர் குழு Labour Bureau கொடுத்த அறிக்கையை சரி பார்த்து விட்டு சில தவறுகளை திருத்தச் சொல்லி இருக்கிறது. அதற்கு Labour Bureau இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டிருக்கிறது. இந்த நிபுணர்கள் குழுவின் ஆலோசனைகளுக்கு மத்திய தொழிலாளர் அமைச்சகம் இன்னும் தன் ஒப்புதலைக் கொடுக்கவில்லையாம்.
தேர்தல் காலம்
அதோடு கடந்த மார்ச் 11, 2019-ல் இருந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் அறிக்கையை பொது வெளியில் அதுவும் தேர்தல் நேரத்தில் கொடுக்கப் போவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.
3-வது முறை
இதுவரை மத்திய அரசு என்.எஸ்.எஸ்.ஓ சர்வே, Labour Bureau-வின் 6-வது ஆண்டு வேலைவாய்ப்பு மற்றும் வேலை இல்லாத் திண்டாட்டம் தொடர்பான சர்வே என இரண்டுமே தற்போதைய அரசின் ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாததைக் காட்டுகிறது. Labour Bureau-வின் 6-வது ஆண்டு அறிக்கையில் 2016 - 17 நிதி ஆண்டில், வேலை இல்லா திண்டாட்டம் 3.9 சதவிகிதமாக அதிகரித்திருப்பதைச் சொல்கிறது. இந்த 3.9 சதவிகிதம் எனப்து கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகம்.
வெளியிடலாம்
கணக்கிட்டிருக்கும் முத்ரா மூலம் உருவான வேலை வாய்ப்பு விவரங்களை கடந்த பிப்ரவரி 27-ம் தேதி Labour Bureau-வே வெளியிடலாம் எனச் சொல்லி இருந்தது நிதி ஆயோக். நிதி ஆயோக் தான் முத்ரா மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது, கூடுதல் வேலை வாய்ப்புகள் எவ்வளவு உருவாகி இருக்கிறது என்கிற விவரங்களைக் கேட்டிருந்தது.
பயனர்கள்
Labour Bureau முத்ரா திட்டத்தின் மூலம் பயனடைந்த 97,000 பேரிடம் சர்வே எடுத்திருக்கிறது. முத்ரா திட்டம் கடந்த ஏப்ரல் 08, 2015 தொடங்கி, ஜனவரி 31, 2019 வரை மொத்தம் 10.35 கோடி பேர் பயனடைந்திருக்கிறார்களாம். மத்திய தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் நடந்த தவறைக் குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால் சில அதிகாரிகள் மட்டும் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்கள்.
இவர்களுமா..?
50,000 ரூபாய்க்கு மேல் பிசினஸுக்கு கடன் வாங்கியவர்களையும் முத்ரா திட்டத்தின் பயனர்களாக சேர்த்து கணக்கிட்டு இருக்கிறார்களாம். அதோடு ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கில் இருந்து 5,000 ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் செய்யலாம் என்கிற வசதியைப் பயன்படுத்தி இருப்பவர்களையும் முத்ரா திட்டத்தின் கீழ் தான் வங்கிகள் வைத்திருக்கிறதாம். குறிப்பாக 5000 ரூபாய் முழுவதுமாக ஓவர் டிராஃப்ட் செய்திருப்பவர்களின் பெயர்களையும் முத்ரா திட்ட பயனர்களாக வைத்திருக்கிறார்களாம்.
எவ்வளவு கடன்
நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைகள் துறை கடந்த ஆகஸ்டு 2018-ல் வெளியிட்ட கணக்குப் படி 13.5 கோடி பேர் முத்ரா திட்டத்தில் பயன் பெற்று இருக்கிறார்கள். அதில் 90 சதவிகித பயனர்கள், 12.15 கோடி பேர், முத்ரா சிசு திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கியவர்கள்.1.4 கோடி பேர் 50,000 ரூபாய்க்கு மேலும் 5 லட்சம் ரூபாய்க்கு கீழும் முத்ரா கிஷோர் திட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்கள். 19.6 லட்சம் பேர் மட்டும் தான் முத்ரா தருண் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களாம்.