மும்பை: தினந்தோறும் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்தியர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முன்வருவதில்லை. இந்தியர்களிடம் தொழில் திறன் குறைவாக உள்ளது என்று ஐபிஎம் நிறுவனத்தின் தலைவர் கினி ரோமெட்டி கூறினார்.
இந்தியாவில் உள்ள 65 சதவீத தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் போதிய பயிற்சி இல்லாதவர்கள். இவர்கள் குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்கின்றனர். அதற்கு மேல் தங்கள் திறமையை வெளிப்படுத்த முன்வருவதில்லை. அந்த அளவுக்குத்தான் இந்திய கல்வித் தரம் அவர்களை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் இயலாமைக்கு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒரு காரணம். நாட்டின் முன்னேற்றத்தை முன்னிட்டு இதை நிவர்த்தி செய்வதற்கு தொழில் துறையினரும் அரசும் முன்வரவேண்டும் என்றார்
இந்திய இளைஞர்கள்
இந்தியாவில் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப படிப்பை முடித்து உலகின் பல நாடுகளிலும் இந்திய இளைஞர்களே உயர்ந்த பதவிகளில் கோலோச்சி வருகிறார்கள். மற்ற நாடுகளில் இருந்தும் இளைஞர்கள் வருடந்தோறும் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா
இந்திய இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவதற்கு சிறந்த உதாரணம் Google நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா ஆகியோர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA பணியாற்றும் விஞ்ஞானிகளில் சுமார் 36 சதவிகிதம் இந்தியாவில் படித்தவர்களே. இன்றைக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப துறை வல்லுநர்கள் இல்லை என்றால் அமெரிக்காவே ஸ்தம்பித்துவிடும். அந்த அளவிற்கு இந்திய தகவல் தொழில்நுட்பதுறை வல்லுநர்கள் தங்கள் திறமையால் அமெரிக்க தகவல் தொழில்நுட்பத்துறையை ஆட்டிப்படைத்துவருகிறார்கள்.
ஐபிஎம் நிறுவன தலைவர் கினி ரொமெட்டி
நிலைமை அப்படி இருக்கும்போது ஐபிஎம் நிறுவன தலைவர் கினி ரொமெட்டி (Ginni Rometty), இந்தியாவில் உள்ள 65 சதவீத தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் போதிய பயிற்சி இல்லாதவர்கள். இவர்கள் குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்கின்றனர். அதற்கு மேல் தங்கள் திறமையை வெளிப்படுத்த முன்வருவதில்லை. அந்த அளவுக்குத்தான் இந்திய கல்வித் தரம் அவர்களை உருவாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். மும்பையில் நிறுவன திறன் மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பங்கேற்று பேசும்போது இதை கூறியுள்ளார்.
திறமையான ஊழியர்கள் இல்லை
இந்தியாவில் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு மிக்க சாஃப்ட்வேர் துறை மூலம் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் வேலை வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. ஆனால் அதற்கேற்ப திறமை மிக்க பணியாளர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது என்றார். பல்கலைக்கழக பட்டத்தை விட வேலைக்கேற்ற திறமைதான் மிகவும் அவசியம் என்றார். இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகள் பலரும் வேலையின்றி திண்டாடுகின்றனர். அதே நேரத்தில், குறைந்த படிப்பு கொண்ட தொழில்திறன் மிக்கவர்கள், தங்களின் அனுபவ அறிவின் காரணமாக அதிக ஊதியம் பெறு கின்றனர்.
3 கோடி பேர் காத்திருப்பு
பொறியியல் மற்றும் வணிகவியல் பட்டம் பெற்ற 4ல் 3 பேர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். சமீபத்தில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்தியாவில் சுமார் 3 கோடி இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்து வேலை வாய்ப்பை எதிர்நோக்கியிருப்ப தாக குறிப்பிட்டிருந்தது.
கல்வித்தரம்
இந்தியாவில் உள்ள 65 சதவிகித தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் போதிய பயிற்சி இல்லாதவர்கள். இவர்கள் வெறுமனே குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்கின்றனர். அந்த அளவுக்குத்தான் இந்திய கல்வித் தரம் அவர்களை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த தவறுக்கு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒரு காரணம் என்றார். என்ன காரணத்தினாலோ இத்துறையை அறிவுசார் தொழில் துறை என்கின்றனர். ஒருவேளை அப்படியிருந்தால் ஏற்கெனவே இத்துறையில் உள்ளவர்கள் புதிய தொழில்நுட்பத்தை கற்றிருக்க வேண்டும். ஆனால் ஏற்கெனவே உள்ளவர்களுக்கு கற்பித்தல் என்பது மிகப்பெரும் சவால் என்றார்.
கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்
இந்தியாவில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அதற்கேற்ற தககுதியான திறமையான நபர்கள்தான் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. வேலைக்கேற்ற திறமை மிக்கவர்களுக்கு பஞ்சம் நிலவுவது தான் உண்மையான பிரச்சினை. தொழில்துறையினரும் அரசும் இணைந்துதான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொழில் நுட்பம்
தொழில்நுட்பம் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரிக்கச் செய்யுமா என்ற கேள்விக்கு, வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தங்கள் நிறுவனம் சமூக மேம்பாட்டு திட்டங்களிலும் கவனம் செலுத்துகிறது. இதில் முக்கியமானது பெண்களுக்கு கல்வியளிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவதாகும் என்றார்.