டெல்லி: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல்வேறு வகையான ஃபண்டுகளை நிர்வகித்து வருகின்றன. ஒவ்வொரு வகை ஃபண்டுகளிலும் பல்வேறு பெயர்களில் ஃபண்டுகளையும் நடத்தி வருகிறார்கள். சுருக்கமாக ஒரு முதலீட்டுத் திட்டம் போல் ஃபண்டின் பெயர் இருக்கும்.
அந்த முதலீட்டுத் திட்டங்கள் (ஃபண்டின் பெயர்) வழியாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகள், நிதிச் சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள், கார்ப்பரேட் டெபாசிட்டுகள், வெளிநாட்டு பங்குச் சந்தைகள், தங்கப் பத்திரங்கள்... என பலவற்றில் முதலீடு செய்கிறார்கள்.
மேலே சொன்னது போல இவர்கள் பலவற்றில் முதலீடு செய்திருக்கும் பணத்தைத் தான் நாம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்கிறோம்.
நிர்வகிக்கும் சொத்து
இதை ஆங்கிலத்தில் Asset Under Management எனச் சொல்வார்கள். சுருக்கமாக AUM என்பார்கள். இப்போது கடந்த பிப்ரவரி 28, 2019 கணக்குப் படி 23.16 லட்சம் கோடி ரூபாயை மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கிறதாம்.
ஆனால் அதிகம்
கடந்த ஜனவரி 2019 உடன் ஒப்பிடும் போது 0.9 சதவிகிதம் (0.21 லட்சம், கோடி ரூபாய்) குறைந்திருக்கிறது. ஆனால் கடந்த பிப்ரவரி 2018 உடன் ஒப்பிடும் போது 4.3 சதவிகிதம் (0.96 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறது.
கணக்குகள்
இந்திய பங்குச் சந்தையின் நெறிமுறையாளரான செபி மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகள் பற்றிய தரவுகளை வெளியிட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 2019-ல் மட்டும் 8.23 லட்சம் புதிய மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளைத் தொடங்கப்பட்டிருக்கிறதாம். இதை மியூச்சுவல் ஃபண்ட் பாசையில் மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ எனச் சொல்வர்கள்.
எதில் எல்லாம்
இந்த 8.23 லட்சம் என்பது கடந்த ஜனவரி 2019-ஐ விட 1.02 சதவிகிதம் அதிகமாம்.இந்த 8.23 லட்சம் புதிய கணக்குகளில் 5.33 லட்சம் கணக்குகள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளுக்கும், 1.45 லட்சம் கணக்குகள் இ.டி.எஃப் ஃபண்டுகளுக்கும், இன்கம் ரக ஃபண்டுகளுக்கு 0.90 கணக்குகளும், லிக்விட் ரக ஃபண்டுகளுக்கு 0.45 லட்சம் கணக்குகளும் திறந்திருக்கிறார்களாம்.