சென்னை: தமிழ் சினிமாவில் வெகு சில படங்களில் பாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்த பாடகர் சுந்தரையர். ஷான் ரோல்டன் இசையில் ஜோக்கர்' படத்தில் இவர் பாடிய லவ் யூ லவ் யூ ஜாஸ்மீனு' பாடி தேசிய விருதே வாங்கியவர்.
ஜோக்கர் படத்துக்குப் பின் கோபி நய்னாரின் அறம்' படத்தில், புது வரலாறே...' பாடலைப் பாடி, படத்தின் மொத்த உணர்ச்சிகளையும் தன் குரலில் சுமந்தவர். இவர் சமீபத்தில் கூட தேசிய விருது வாங்கி என்ன பயன்..? வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என எதார்த்தத்தை, அச்சு அசலாக பொது வெளியில் போட்டு உடைத்தவர்.
பெரிய பின் புலம் இல்லாத தர்மபுரி பக்கத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் இன்று லட்சக் கணக்கானவர்களோடு சென்னையில் வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதுவும் சினிமா துறையில் கால் பதிக்க காத்திருக்கிறார்.
இவருடைய குழந்தைகளைத் தான் ஒரு பிரபல தனியார் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள். மகன், மகள் இருவரையும் ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். மகள் எல்.கேஜியும், மகன் ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள். இருவருக்குமே பள்ளிக் கட்டணத்தை கட்ட முடியாததால் அந்தக் குழந்தைகளை மற்ற மாணவர்களிடம் இருந்து தனிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள். பின் சுந்தரையரை அழைத்து பள்ளிக் கட்டணம் செலுத்தினால் தான் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்போம் எனச் சொல்லி இருக்கிறது பள்ளி நிர்வாகம்.
இதனால் கடந்த ஒரு மாதமாக தன் குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப இயலாததை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார். இத்தனை பிரச்னையான சூழலிலும் உதவியாக பணத்தைக் கேட்கவில்லை, தன் குரலுக்கும் தனக்கும் படங்களில் பாட ஒரு வாய்ப்பு தரச் சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறாராம். இந்த அறப் பாடகர்.