டெல்லி: கடந்த 2004 - 2014 வரையான 10 ஆண்டுகளில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஏற்றுமதிக்கு ஓரளவுக்கு கவனம் செலுத்தி வந்தது.
2013 - 14 நிதி ஆண்டில் தான் இது வரை இந்தியாவில் இல்லாத அளவுக்கு 314 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்தது இந்தியா. இன்று வரை இது தான் இந்தியாவின் அதிகபட்சமான ஏற்றுமதியாம்.
இப்போது இந்த 2018 - 19 நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு இந்த 314 பில்லியன் டாலர் என்கிற தொகையைக் கடந்து ஏற்றுமதி செய்யும் என கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
ஒப்பீடு
2018 - 19 நிதியாண்டின் ஏப்ரல் 2018 முதல் பிப்ரவரி 2019 வரையான 11 மாதங்களில் மட்டும் 298.5 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்களாம். கடந்த 2017 - 18 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 274.21 பில்லியன் டாலர் தான் ஏற்றுமதி ஆகி இருந்ததாம்.
வளர்ச்சி
ஆக கடந்த நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் 8.8 சதவிகிதம் ஏற்றுமதி வளர்ச்சி கண்டிருக்கிறது. எனவே இந்த மார்ச் 2019-ம் மாதத்தில் சுமார் 25 பில்லியன் டாலராவது ஏற்றுமதி செய்யப்படும். அப்படி செய்யப்பட்டால் 2018 - 19 நிதி ஆண்டில் முடிவில் 323 பில்லியன் டாலராக கணக்கு வரும் என பாஜகவினர் குதூகலத்தில் இருக்கிறார்களாம்.
ஒரு வலுவான ஆதாரம்
சமீபத்தில் தான் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் "ஏற்றுமதியோ, வியாபாரமோ பெருகாத போது இந்தியப் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்" என கேள்வி எழுப்பினார். இப்போது ப சிதம்பரத்துக்கு பதில் சொல்லும் விதமாக இந்த ஏற்றுமதி எண்கள் வந்தமைத்திருக்கிறது.
தேர்தல்
பாஜக அரசு மக்கள் விரோதமாக அதிகம் செயல்பட்டது, கண் மூடித்தனமாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என பல விஷயங்களை ஆழமாக யோசிக்காமல் செய்து பொருளாதாரத்தையே நசுக்கி விட்டது என பலரும் தேர்தல் பிரசாரங்களில் குற்றம் சுமத்தி வரும் நிலையில் "இதோ பாருங்கள் இதுவரை இந்திய வரலாற்றில் இல்லாத ஏற்றுமதியைச் செய்திருக்கிறோம்" எனப் பேசி வாக்குகளை வாங்க வசதியாக இருக்கும் என மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்கள்.
வியாபாரிகள்
குறிப்பாக வியாபாரிகள், வணிகர்கள் நிறைந்த பகுதிகளில் இந்த ஒரு எண் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும், வியாபாரிகள் மற்றும் வணிகர்களின் ஓட்டு தங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும் என பாஜகவினர் நம்புகிறார்களாம்.
அதிகரித்த ஏற்றுமதியிலும் அரசியலா..? பாருங்கப்பு மோடி வந்தா வளர்ச்சி இருக்கும்..!