அமெரிக்கா: எலான் மஸ்க் என்றாலே அதிரடி தான். கடந்த 2018 ஜூன் - ஜூலை மாதத்தில் தான் இந்தியாவில் புதிய கார் உற்பத்தியாளர்களுக்கு சாதகமான கொள்கை முடிவுகள் இல்லை என குற்றம்சாட்டினார். அதோடு இந்திய அரசு ஏதோ வேண்டும் என்றே டெஸ்லாவின் வருகையை தாமதப்படுத்துவது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகினார்.
ஆனால் இன்று 2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் கால் எடுத்து வைக்கப் போவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். ஆக இந்த பில்லியனர் பிசினஸ் மேன் தன் டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்கும் திட்டத்தை மீண்டும் பச்சைக் கொடி அசைத்திருக்கிறார்.
இந்திய அரசும் டெஸ்லா இந்தியாவுக்கு வர வேண்டும் என்றே ஆதரித்து வந்தது. டெஸ்லா இந்தியா வர தன்னால் ஆன எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது. ஆனால் டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் தன் கோபத்தை வெளிப்படுத்திவிட்டார்.
இந்திய அரசு தரப்பு
அதன் பின்பு கூட டெஸ்லா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய இறக்குமதி வரிகளை தற்காலிகமாக தள்ளுஅப்டி செய்தது இந்திய அரசு. இந்த சலுகையை டெஸ்லா இந்தியாவில் தன் உற்பத்தி ஆலையை முழுமையாக தொடங்கும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியது இந்திய அரசு.
முதல் ஆலை
இதெல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க கடந்த ஜனவரி 2019-ல் டெஸ்லா சீனாவில் தன் உற்பத்தி ஆலையை நிறுவத் தொடங்கி இருக்கிறார். ஐந்து பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த டெஸ்லா ஆலை தான் அமெரிக்காவுக்கு வெளியே அமைத்த முதல் டெஸ்லா ஆலை.
ஏன் இந்தியா
இந்தியாவில் இப்போது வரை மின்சார கார்கள் வியாபாரம் சூடு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் மின்சார வாகனங்கள் ஜோராக வியாபாரம் ஆகிறது. சீனாவில் ஆண்டுக்கு 13.5 லட்சம் மின்சார கார்கள் வியாபாரம் ஆகிறதாம். ஆனால் இந்தியாவில் நேர் மாறாக ஆண்டுக்கு 6000 வாகனங்கள் விற்பனை ஆனால் பெரிய விஷயமாம்.
கணிப்பு
இன்று வரை இந்தியாவில் மொத்தமே 6000 மின்சார கார்கள் இந்திய சாலைகளில் இருக்கலாம் என ப்ளூம்பெர்க் தன் கணிப்பையும் சொல்கிறது. இந்தியாவில் மின்சார கார்களை சார்ஜ் செய்து கொள்ள இதுவரை இந்தியாவில் வெறும் 425 சார்ஜிங் பாயிண்டுகள் மட்டுமே இருக்கிறதாம். ஆனால் வரும் 2022-க்குள் இந்தியாவில் 2800 சார்ஜிங் பாயிண்டுகளாக அதிகரிக்கலாம் என கணித்திருக்கிறது ப்ளூம்பெர்க். எல்லா கணிப்புகளையும் தவிடு பொடி யாக்க டெஸ்லா இந்தியாவில் நுழையவிருக்கிறது.