பெங்களூரு: கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்காக விப்ரோ நிறுவனத் தலைவர் அசீம் பிரேம்ஜி தன்னுடைய சொத்தில் இருந்து ரூ.52750 கோடி வழங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
கல்வித் திட்டப் பணிகளுக்காக நன்கொடை அளிப்பதில் அசீம் பிரேம்ஜியை அடித்துக்கொள்ள இந்தியாவில் ஆளே கிடையாது என்பது போல் தொடர்ந்து வாரி வழங்கி வருகிறார்.
தற்போது வழங்கி உள்ள 52,750 கோடி ரூபாயை சேர்த்து அசீம் பிரேம் இதுவரையிலும் சுமார் 1,45,000 கோடி ரூபாய் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பானிபூரி கடை
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் விப்ரோ நிறுவனம் தகவல் தொழில் நுட்பத்துறையில் நுழைந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வளர்ந்து வந்த நேரம். அந்தி சாயும் மாலை நேரத்தில் பெங்களூருவின் பிரபலமான ஒரு சாலை ஓரத்தில் ஒரு பானி பூரி கடைக்காரர் தள்ளுவண்டியில் பானி பூரி விற்றுக் கொண்டிருந்தார். கடையில் சில நபர்கள் பானி பூரியை சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
டிப்டாப் ஆசாமி
அப்போது, டிப்டாப்பாக உடை அணிந்திருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், தான் ஓட்டி வந்த காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தனக்கு விருப்பமான பானி பூரியை சாப்பிட்டு விட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு சில்லறை பணத்தை வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். டிப்டாப் ஆசாமியை அங்கிருந்த அனைவருக்கும் நன்கு பரிச்சயம்.
சில்லறை பாக்கி
கூட்டம் அதிகமிருந்ததால், கடைக்காரர் டிப்டாப் ஆசாமியை கண்டுகொள்ளாமல் தன் கடமையில் கண்ணாக இருந்தார். பொறுமை இழந்த டிப்டாப் ஆசாமி, கடைக்காரரைப் பார்த்து, தம்பி நான் வெகு நேரமாக சில்லறை பாக்கிக்காக காத்திருக்கிறேன். நீ என்னடாவென்றால் சில்லறை பாக்கியை தராமல் நேரம் கடத்துகிறாயே என்று சற்று கோபமாக கேட்கிறார்.
50 பைசாதானே
கடைக்காரர் உடனே, என்ன சார் பெரிய சில்லறை, வெறும் 50 பைசா தானே, இதை போய் பெருசா நினைக்கிறீங்களே விடுங்க சார் என்று உதாசீனப்படுத்துகிறார். டிப்டாப் ஆசாமியோ சற்று கோபத்துடன், என்ன 50 பைசாதான, அந்த 50 பைசாவை சம்பாதிப்பதற்கு நான் எத்தனை நாட்கள் கஷ்டப்பட்டிருப்பேன் என்று எனக்குத் தான் தெரியும் என்று சொல்லிவிட்டு அந்த 50 பைசாவை வாங்கிக் கொண்டு தான் வீட்டுக் கிளம்பினார்.
கறார் பேர்வழி
அந்த 50 பைசாவை கேட்டு வாங்கிச் சென்ற டிப்டாப் ஆசாமி வேறு யாரும் இல்லை. விப்ரோ நிறுவனத்தின் தலைவரும், கொடை கொடுப்பதில் கர்ணனான அசீம் பிரேம்ஜி தான். பணம் என்று வந்துவிட்டால் கறார் பேர்வழியாக இருந்தாலும், நன்கொடையை அள்ளிக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே.
அசீம் பிரேம்ஜி
சுமார் 1,60,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் சுமார் 36ஆவது இடத்தில் உள்ள அசீம் பிரேம்ஜி ஏற்கனவே சுமார் 92,250 கோடி ரூபாயை கல்வி மற்றும் சமூக வளர்ச்சிப் பணிகளுக்காக வாரி வழங்கியுள்ளது அனைவருக்கும் தெரியும். தற்போது, மேலும் 52,750 கோடி ரூபாயை அதே கல்வி மற்றும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக வாரி வழங்கி இருக்கிறார்.
நமக்கெல்லாம் முன்மாதிரி
அசீம் பிரேம்ஜி நன்கொடை அளித்தது பற்றி என்டிடிவி (NDTV)க்கு பேட்டியளித்த BIOCON நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா (Kiran Mazumdar Shaw) அசீம் பிரேம்ஜி உண்மையில் நமக்கெல்லாம் முன்மாதிரியாக நன்கொடை வழங்குவதற்கு தூண்டுதலாக உள்ளார். அவர்தான் உண்மையில் தேசியத்தை கட்டிக் காப்பாற்றுபவர் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.