டெல்லி: சரக்கு மற்றம சேவை வரி என்னும் GST வரி அமல்படுத்தியதற்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பாராட்டு தெரிவித்து முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் விருது அளித்துள்ளார்.
விருது வழங்கியதை அடுத்து பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில் “கப்பர் சிங் வரியா ராகுல் காந்தி? என்று கேள்வி கேட்டு கிண்டலடித்துள்ளனர்
ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதை காங்கிரஸ் தரப்பில் இருந்து அடிக்கடி “இது கப்பர் சிங் வரி” என்று கிண்டலடிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சரக்கு மற்றும் சேவை வரி
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக வினால் நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக ஒவ்வொரு மாதமும் வரி வசூல் சாதனை படைத்து வருகிறது.
மன்மோகன் சிங்
ஜிஎஸ்டி வரிமுறை பாஜகவினால் கொண்டுவரப்பட்டாலும் அதற்கான ஆரம்ப கட்ட முயற்சி தற்போது எதிர்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தான் எடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரிமுறைக்கான மாதிரி வரைவு அறிக்கை (draft) தயாரிக்கப்பட்டது.
மாறியது ஆட்சி
எல்லாம் சுபமாக முடியும் நேரத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சி பீடத்தில் அமர்ந்து. மத்திய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி பதவி ஏற்றவுடன் ஜிஎஸ்டி வரிமுறையை கொண்டு வரும் முயற்சியை தீவிரப்படுத்தினார்.
5 அடுக்கு வரிமுறை
ஒரு வழியாக நீண்ட இழுபறிக்கு பின்னர் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் அரைகுறை சம்மதத்தோடு 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. 5 அடுக்கு வரி முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டிக்கு பாராட்டு
ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதற்காக அரசியலைத் தாண்டி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அருண் ஜெட்லிக்கு லோக்சபாவிலேயே கை குலுக்கி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.
இது கப்பர் சிங் வரி தான்
முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்தாலும், எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ஜிஎஸ்டி வரிமுறையை "இது கப்பர் சிங் வரி" என்று கிண்டலடித்தார். ஜிஎஸ்டி வரி முறை ஏழை மக்களை வாட்டி வதைக்கும் வரி என்று எதிர்ப்பு தெரிவித்தார். தற்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 5 அடுக்கு வரி முறையை ஓர் அடுக்கு வரியாக மாற்றுவோம் என்று பிரச்சாரம் செய்துவருகிறார்.
மாற்றத்தை கொண்டு வந்தவர்
ஒவ்வொரு ஆண்டும் புதிய முறையில் மாற்றம் கொண்டு வந்தவர்களை Business Line இதழ் கவுரவித்து Change maker of the Year விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இவ்விருதை ஜிஎஸ்டி வரி முறையை கொண்டு வந்து மாற்றத்திற்கு வித்திட்ட மத்திய நிதி அமைச்சர் ஜெட்லிக்கும், 377ஆவது சட்டப்பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடிய மனுதாரருக்கும் கொடுக்கப்பட்டது.
அருண் ஜெட்லி
சரக்கு மற்றும் சேவை வரியை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக நிதித்துறை அமைச்சகம் சார்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த விருதை பெற்றுக்கொண்டார். இந்த விருதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு வழங்கினார்.
அது என்ன 377வது சட்டப்பிரிவு
புதன்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் இந்த விருதை, 377 பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடிய மனுதாரர்களும் பகிர்ந்து கொண்டனர். (ஒருபால் ஈர்ப்பை கிரிமினல் குற்றமாக்கிய 377 பிரிவு சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது)
கப்பர் சிங் வரியா ராகுல்
அருண் ஜெட்லி விருது பெற்றதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ராகுல் காந்தியை விமர்சிக்குமாறு ட்வீட் செய்யப்பட்டது. அதில், ஜிஎஸ்டி-க்காக அருண் ஜெட்லிக்கு, மன்மோகன் சிங் விருது வழங்கியதை குறிப்பிட்டு, "கப்பர் சிங் வரியா, ராகுல் காந்தி?" என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
காங்கிரஸ் தரப்பில் இருந்து ஜிஎஸ்டி வரிக்கு எதிராக தொடர்ந்து எழுப்பப்பட்ட விமர்சனம் 'கப்பர் சிங் வரி' என்பது குறிப்பிடத்தக்கது.